3 நாட்டு வெளியுறவு மந்திரிகளுடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு


3 நாட்டு வெளியுறவு மந்திரிகளுடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு
x

ஆஸ்திரியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய மந்திரி ஜெய்சங்கர் 3 நாட்டு வெளியுறவு மந்திரிகளை இன்று சந்தித்து பேசியுள்ளார்.




வியன்னா,


ஆஸ்திரியா நாட்டில் மத்திய வெளிவிவகார மந்திரி டாக்டர் எஸ். ஜெய்சங்கர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் அந்நாட்டின் வெளிவிவகார மந்திரியான அலெக்சாண்டர் ஸ்காலென்பர்க்கை சந்தித்து பேசினார்.

இதன்பின்னர் இரு நாட்டு மந்திரிகளும் இன்று கூட்டாக பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்தினர். இதில் பேசிய மத்திய மந்திரி ஜெய்சங்கர், பயங்கரவாதத்தினால் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களை பற்றி ஆஸ்திரிய நாட்டு தலைவர்களுடன் பேசினேன்.

எல்லை கடந்த பயங்கரவாதம், வன்முறை, தீவிரவாதம் மற்றும் அடிப்படைவாதம் உள்ளிட்டவற்றை பற்றியும் நாங்கள் விரிவாக பேசினோம்.

போதை பொருட்கள், சட்டவிரோத ஆயுத விற்பனை மற்றும் பிற வடிவிலான சர்வதேச குற்றங்கள் ஆகியவை ஒன்றுடன் ஒன்று ஆழ்ந்த தொடர்பில் இருக்கும்போது, மேற்குறிப்பிட்ட பயங்கரவாத விளைவுகளை ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள் அடக்கி விட முடியாது.

இந்த பயங்கரவாதத்தின் மையம் இந்தியாவுக்கு மிக அருகே அமைந்துள்ளது. எங்களுடைய அனுபவங்கள் மற்றும் பார்வைகள் பிறருக்கு பயனுள்ளவையாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

ஆஸ்திரிய வெளியுறவு மந்திரி தவிர்த்து, செக் குடியரசின் ஜன் லிபாவ்ஸ்கை மற்றும் ஸ்லோவேக்கியா நாட்டின் வெளியுறவு மந்திரியான ராஸ்டிஸ்லாவ் கேசர் ஆகியோரையும் மத்திய மந்திரி ஜெய்சங்கர் இன்று சந்தித்து பேசியுள்ளார்.

இந்த சந்திப்பு பற்றி செய்தியாளர்களிடம் குறிப்பிட்ட மந்திரி ஜெய்சங்கர், இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியன் அமைப்பின் உறவுகள், நமது அண்டை நாடுகள், இந்தோ-பசிபிக் விவகாரம் மற்றும் உக்ரைனில் நடைபெற்று வரும் போர் உள்ளிட்ட விசயங்கள் பற்றி உரையாடல் மேற்கொண்டோம் என்று கூறியுள்ளார்.


Next Story