'இந்திய பயணம் வெற்றிகரமாக அமைந்தது' - பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி பிலாவல் பூட்டோ


இந்திய பயணம் வெற்றிகரமாக அமைந்தது - பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி பிலாவல் பூட்டோ
x

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நிலையை மீட்டெடுப்பதன் மூலம் பேச்சுவார்த்தைக்கு உகந்த சூழலை இந்தியா உருவாக்க வேண்டும் என்று பிலாவல் பூட்டோ கூறினார்.

இஸ்லாமாபாத்,

இந்தியா, ரஷியா, கிர்கிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளை உறுப்பினர்களாக கொண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த கூட்டமைப்பு நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் பங்குபெறும் மாநாடு கோவாவில் நடைபெற்றது.

இந்த மாநாட்டிற்கு நடப்பாண்டில் இந்தியா தலைமை வகித்து வரும் நிலையில், மாநாட்டில் பங்கேற்கும்படி உறுப்பு நாடுகளுக்கு இந்தியா அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி இந்த மாநாட்டில் பாகிஸ்தான் வெளியுறவு மந்தரி பிலாவல் பூட்டோ உள்ளிட்ட மந்திரிகள் பங்கேற்றனர். அவர்களை இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் வரவேற்றார்.

12 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் மந்திரி ஒருவர் இந்தியாவுக்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்திய பயணத்தை முடித்துக் கொண்டு பிலாவல் பூட்டோ பாகிஸ்தானுக்கு திரும்பினார். அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

"இந்தியாவுக்கான எனது பயணம் வெற்றிகரமாக அமைந்தது. ஒவ்வொரு முஸ்லிமை தீவிரவாதியாக பார்க்கும் பார்வையை நிராகரிக்க உதவியது. இது போன்ற கட்டுக்கதையை உடைக்க நாங்கள் முயற்சி செய்தோம். 2019-ம் ஆண்டு ஆகஸ்டு 5-ந்தேதிக்கு முந்தைய காஷ்மீர் நிலையை (சிறப்பு அந்தஸ்து) மீட்டெடுப்பதன் மூலம் பேச்சுவார்த்தைக்கு உகந்த சூழலை இந்தியா உருவாக்க வேண்டும் என்பதில் பாகிஸ்தான் உறுதியாக உள்ளது" என்றார்.

முன்னதாக இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் கூறும்போது, "ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாட்டின் வெளியுறவு மந்திரியாக இங்கு வந்த பிலாவல் பூட்டோ அதற்கேற்ப நடத்தப்பட்டார். பாகிஸ்தானின் முந்தைய ஆதாரமான பயங்கரவாதத்தை நியாயப்படுத்துபவர் மற்றும் பயங்கரவாதத்தின் செய்தி தொடர்பாளராகவே அவ ரது நிலைப்பாடுகள் கூட்டத்தில் விமர்சிக்கப்பட்டன" என்று கூறினார்.


Next Story