வங்காளதேசத்தில் ஜனநாயகம் தொடருவதை உறுதி செய்ய வேண்டும் - ஷேக் ஹசீனா


வங்காளதேசத்தில் ஜனநாயகம் தொடருவதை உறுதி செய்ய வேண்டும் - ஷேக் ஹசீனா
x
தினத்தந்தி 7 Jan 2024 3:31 AM GMT (Updated: 7 Jan 2024 6:56 AM GMT)

ஒரு நடுநிலை அரசாங்கத்தை நிறுவி அதன்பிறகு தேர்தலை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

டாக்கா,

அண்டை நாடான வங்காளதேசத்தில் இன்று பொதுத்தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் தொடர்ந்து 4-வது முறையாக பிரதமர் ஷேக் ஹசீனா வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் ஒரு நடுநிலை அரசாங்கத்தை நிறுவி அதன்பிறகு தேர்தலை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த கோரிக்கையினை பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசாங்கம் நிராகரித்தது.

இதனையடுத்து முக்கிய எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசியவாத கட்சி நாடு தழுவிய போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. மேலும் இந்த தேர்தலை புறக்கணிப்பதாகவும் அக்கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான கலீதா ஜியா (78) அறிவித்தார். இதனால் சட்டம், ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக கருதி கலீதா, வீட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் நாடு முழுவதும் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில், பிரதமர் ஷேக் ஹசீனா டாக்காவில் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

நாட்டில் ஜனநாயகம் தொடர்ந்து நிலவுவதை உறுதி செய்ய அரசு விரும்புகிறது. நிலையான ஜனநாயகம் இல்லாத நாடு ஒருபோதும் முன்னேற முடியாது. எங்கள் நாடு இறையாண்மை மற்றும் சுதந்திரமானது. நாம் ஒரு சிறிய நாடாக இருக்கலாம், ஆனால் நம்மிடம் பெரிய மக்கள் தொகை உள்ளது. மக்களின் ஜனநாயக உரிமைகளை நிலைநாட்டியுள்ளோம். இந்த நாட்டில் ஜனநாயகம் தொடர வேண்டும் என்பதை நான் உறுதி செய்ய விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story