அமெரிக்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரேசில் முன்னாள் அதிபர்


அமெரிக்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரேசில் முன்னாள் அதிபர்
x
தினத்தந்தி 9 Jan 2023 11:00 PM GMT (Updated: 9 Jan 2023 11:00 PM GMT)

பிரேசில் முன்னாள் அதிபர் ஜெர் போல்சனாரோ அமெரிக்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வாஷிங்டன்,

பிரேசில் நாட்டில் சமீபத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் அதிபர் ஜெர் போல்சனேரோ தோல்வியடைந்தார். முன்னாள் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா வெற்றிபெற்றார். இதையடுத்து, பிரேசிலின் புதிய அதிபராக லூயிஸ் பொறுப்பேற்றுக்கொண்டார்.

வாக்கு வித்தியாசம் மிகக்குறைவாக இருந்த நிலையில் தனது தோல்வியை ஏற்றுக்கொள்ளாத போல்சனேரோ தனது ஆதரவாளர்களுடன் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

குறிப்பாக, போல்சனேரோவின் ஆதரவாளர்கள் நேற்று பிரேசில் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர். தேர்தலில் போல்சனேரோ தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில் அதை ஏற்றுக்கொள்ளாத அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.

அதேபோல், ஜனாதிபதி மாளிகை, சுப்ரீம் கோர்ட்டு வளாகம் முன் திரண்ட போல்சனேரோ ஆதரவாளர்கள் தற்போதைய அதிபர் லூயிஸ்-க்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். போல்சனேரோ ஆதரவாளர்கள் நாடாளுமன்றம், சுப்ரீம் கோர்ட்டு, ஜனாதிபதி மாளிகை முன் திரண்டதால் பிரேசிலில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தனது ஆதரவாளர்கள் பிரேசிலில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் முன்னாள் அதிபர் போல்சனேரோ உடல்நலக்குறைவு காரணமாக அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் ஒர்லெண்டோ மாகாணத்தில் உள்ள மருத்துவமனையில் போல்சனேரோ நேற்று அனுமதிக்கப்பட்டார். வயிற்று வலி உள்ளிட்ட பிரச்சினை அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போல்சனேரோவில் உடல்நிலை தற்போது சீராக உள்ள நிலையில் அவரை மருத்துவக்குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.


Next Story