உங்கள் பெயரிலேயே நிலவை வைத்திருக்கிறீர்கள்; இஸ்ரோ தலைவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து


உங்கள் பெயரிலேயே நிலவை வைத்திருக்கிறீர்கள்; இஸ்ரோ தலைவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து
x
தினத்தந்தி 23 Aug 2023 2:02 PM GMT (Updated: 23 Aug 2023 4:14 PM GMT)

உங்கள் பெயரிலேயே நிலவை வைத்திருக்கிறீர்கள் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத்துக்கு தொலைபேசி வழியே பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

ஜோகன்னஸ்பர்க்,

நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், நிலவில் தரையிறங்கி வெற்றியடைந்துள்ளது. இந்த வெற்றியால், அமெரிக்கா, ரஷியா மற்றும் சீனாவை தொடர்ந்து நிலவு பற்றிய ஆய்வில் சாதனை படைத்த 4-வது நாடாக இந்தியா உருவாகி உள்ளது. எனினும், நிலவின் தென்துருவ பகுதியில் தரையிறங்கிய உலகின் ஒரே நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. விண்வெளி துறையில் இந்தியா வல்லரசாகி உள்ளது.

இதனை தொடர்ந்து, சந்திரயான்-3 விண்கலம் வெற்றியை நாடு முழுவதும் மக்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், அரியானா முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார், பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்டோர் வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொண்டனர்.

சந்திரயான்-3 விண்கலம் வெற்றியை தொடர்ந்து, தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் பிரிக்ஸ் அமைப்பின் 15-வது உச்சி மாநாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்று வரும் பிரதமர் மோடி, இஸ்ரோ தலைவர் சோம்நாத் உடன் தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.

அவர் கூறும்போது, உங்களுடைய பெயரிலேயே (சோம்நாத்) சந்திரனின் பெயரை நீங்கள் வைத்திருக்கிறீர்கள். உங்களுக்கும், உங்களுடைய குழுவினருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.


Next Story