விலை போகாத மனித தலை


விலை போகாத மனித தலை
x
தினத்தந்தி 20 Dec 2016 12:45 AM GMT (Updated: 19 Dec 2016 12:34 PM GMT)

அந்நாட்டு மன்னன் அன்றைய தினம் நகர் வலமாக சென்று கொண்டிருந்தான். மன்னனைக் காண்பதற்காக தெருவெங்கும் மக்கள் வெள்ளம் கூடியிருந்தது. அவர்கள் நகர் வலம் வந்த மன்னனிடம் தங்களது குறைகளையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொண்டிருந்தனர். அப்போது மன்னனின் கண்ணில், ஓரமாக ஒதுங்கி நின்ற ஒரு துறவி தென்பட்டார்.

ந்நாட்டு மன்னன் அன்றைய தினம் நகர் வலமாக சென்று கொண்டிருந்தான். மன்னனைக் காண்பதற்காக தெருவெங்கும் மக்கள் வெள்ளம் கூடியிருந்தது. அவர்கள் நகர் வலம் வந்த மன்னனிடம் தங்களது குறைகளையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொண்டிருந்தனர். அப்போது மன்னனின் கண்ணில், ஓரமாக ஒதுங்கி நின்ற ஒரு துறவி தென்பட்டார்.

சட்டென்று தேரை நிறுத்தச் சொல்லி கீழே இறங்கிய மன்னன், நேராக அந்த துறவியிடம் சென்று அவரது காலில் விழுந்து வணங்கினான். அதைத் பார்த்ததும் மன்னனுடன் வந்திருந்த அமைச்சர் மனம் வருந்தினார். ‘மன்னன் எப்படிப்பட்ட உயர்ந்த நிலையில் இருப்பவர், அவர் இப்படி ஒரு துறவியின் காலில் விழலாமா?’ என்று எண்ணினார்.

அரண்மனையை அடைந்ததும் தனது வருத்தத்தை மன்னனிடம் நேரடியாகவே தெரிவித்தார் அமைச்சர். ‘மன்னா! ஒரு சாம்ராஜ்ஜியத்தையே கட்டிக் காக்கும் நீங்கள், ஒரு துறவியின் காலில் விழுவது தகாதசெயல்?’ என்றார்.

தன் கேள்விக்கான பதிலை எதிர்நோக்கி இருந்த அமைச்சருக்கு, ஒரு விசித்திரமான கட்டளை பிறப்பித்தான் மன்னன்.

‘அமைச்சரே! ஓர் ஆட்டின் தலை, ஒரு புலித் தலை, ஒரு மனிதத் தலை ஆகிய மூன்றும் எனக்கு உடனடியாக வேண்டும். ஏற்பாடு செய்யுங்கள்’ என்றார்.

பதிலை எதிர்பார்த்திருந்த அமைச்சருக்கு, மன்னனின் கட்டளை திகைப்பை வழங்கியது. இருப்பினும் அரச கட்டளையாயிற்றே! அதை நிறைவேற்ற பணியாளர்கள் நாலாபக்கமும் சென்றனர்.

ஆட்டுத் தலை கிடைப்பதில் சிரமம் எதுவும் இல்லை. அது ஓர் இறைச்சிக் கடையில் கிடைத்து விட்டது. ஆனால் புலித் தலை எளிதில் கிடைக்கவில்லை. காட்டில் தேடியும் கிடைக்காத நிலையில், ஒரு வேடனிடம் புலித் தலை கிடைத்தது. அதை அவன் அன்றுதான் வேட்டையாடி இருந்தான்.

மூன்றாவதாக மனித தலைக்கு எங்கே போவது? யாரிடம் போய் மனித தலையைக் கேட்பது? அமைச்சர் சோர்ந்து போய்விட்டார். இறுதியில் சுடுகாட்டிற்கு சென்று அங்குள்ள ஒரு பிணத்தில் தலையை எடுத்துக் கொண்டு அரண்மனை வந்து சேர்ந்தனர்.

மூன்று தலைகளையும் பார்த்த மன்னன், ‘சரி.. இப்போது இந்த தலைகளை எடுத்துப் போய் சந்தையில் விற்று, பொருள் கொண்டு வாருங்கள்’ என்று அமைச்சருக்கு மீண்டும் ஒரு கட்டளையை பிறப்பித்தான்.

‘இந்த மன்னருக்கு என்ன ஆயிற்று?’ என்று குழம்பியபடியே, பணியாளர்கள் சிலருடன் அமைச்சர் சந்தைக்குச் சென்றார்.

ஆட்டுத் தலை அதிகச் சிரமம் இன்றி விலை போனது. புலியின் தலையை வாங்க அவ்வளவு சீக்கிரத்தில் ஆள் கிடைக்கவில்லை. வேடிக்கை பார்க்க கூட்டம் சேர்ந்ததே தவிர, வாங்குவதற்கான ஆட்களைக் காணவில்லை. கடைசியில் ஒரு வேட்டை பிரியரான செல்வந்தர், தன் வீட்டில் அலங்காரமாய் மாட்டி வைப்பதற்காக புலியின் தலையை வாங்கிச் சென்றார்.

மீதி இருப்பது மனிதத் தலை மட்டும் தான். அதைப் பார்த்த மக்கள், அறுவருப்புடன் ஒதுங்கிப்போனார்கள்; மிரண்டுபோய் பின்வாங்கினார்கள். ஒரு காசுக்கு கூட அதை வாங்க யாரும் முன் வரவில்லை. இலவசமாக வாங்கக் கூட ஆள் இல்லை. சந்தை முடிவுற்ற நிலையில் அமைச்சர் தன் பணியாளர்களுடனும், மீதமிருந்த மனித தலையுடனும் அரண்மனை திரும்பினார்.

மன்னனிடம், ஆட்டின் தலை உடனே விலை போனதையும், புலித் தலை சற்று சிரமத்துடன் விலை போனதையும், மனிதத் தலையை இலவசமாக வாங்கக் கூட ஆளில்லை என்பதையும் அமைச்சர் தெரிவித்தார்.

இப்போது மன்னன் கூறினான். ‘பார்த்தீர்களா அமைச்சரே! மனிதன் உயிர் போய்விட்டால், அவனது இந்த வெற்றுடம்பு, கால் காசுக்குக் கூட பெறாது. இலவசமாகக் கூட இதை யாரும் தொடமாட்டார்கள். இறந்தபிறகு நமக்கு மதிப்பிருக்காது என்பது அனைவருக்கும் தெரியும். இருந்தும் இந்த உடம்பு உயிர் உள்ளபோது என்ன ஆட்டம் ஆடுகிறது.

உடலில் உயிர் இருக்கும்போதே, தம்மிடம் எதுவும் இல்லை என்று உணர்ந்தவர்கள்தான் ஞானிகள். அத்தகையவர்களின் காலில் விழுந்து வணங்குவதில் என்ன தவறு இருக்கிறது?. உண்மையைக் கூறுவதானால், அதுதான் ஒருவனுக்கு ஞானம் வருவதற்கான முதல்படி’ என்றார்.

அமைச்சருக்கு இப்போது எல்லாம் புரிந்தது.

Next Story