கர்ப்பப்பை கோளாறு நீக்கும் ஆலயம்


கர்ப்பப்பை கோளாறு  நீக்கும்  ஆலயம்
x
தினத்தந்தி 9 Jun 2017 1:00 AM GMT (Updated: 8 Jun 2017 10:28 AM GMT)

திருச்சி மாவட்டத்தில் பேட்டவாய்த்தலை என்ற கிராமத்தில் உள்ளது அருள்மிகு மத்யார்ஜூனேஸ்வரர் ஆலயம்.

திருச்சி மாவட்டத்தில் பேட்டவாய்த்தலை என்ற கிராமத்தில் உள்ளது அருள்மிகு மத்யார்ஜூனேஸ்வரர் ஆலயம்.

இந்த ஆலயத்தில் உள்ள இறைவன் பெயர் அருள்மிகு மத்யார்ஜுனேஸ்வரர் இறைவனின் மற்றொரு பெயர் மார்த்தாண்டேஸ்வரர். இறைவியின் பெயர் அருள்மிகு பாலாம்பிகை அம்மாள்.

கோவில் அமைப்பு

கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. முகப்பில் ஐந்து நிலை அழகிய ராஜகோபுரம் உள்ளே நுழைந்ததும் பெரிய ராஜமண்டபம் உள்ளது. நடுவே கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியவை உள்ளன.

அடுத்து அம்மன் சன்னிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. அன்னை பாலாம்பிகை நான்கு கரங்களுடன் சாந்தம் தவழும் முகத்துடன் நின்ற நிலையில் தென்முகம் நோக்கி அருள் பாலிக்கிறாள்.

அடுத்து மகா மண்டபமும், அதைத் தொடர்ந்து அர்த்த மண்டபமும் உள்ளன. அர்த்த மண்டபத்தின் நுழைவாயிலில் இரு பெரிய துவாரபாலகர்களின் திருமேனிகள் உள்ளன. அந்த மண்டபத்தின் தென்புறம் விநாயகர் மற்றும் வடபுறம் பாலதண்டாயுதபாணியின் திருமேனிகள் உள்ளன. அர்த்த மண்டபத்தினை அடுத்து இறைவன் அருள்மிகு மத்யார்ஜுனேஸ்வரர் லிங்கத்திருமேனியுடன் அருள் பாலிக்கிறார்.

இந்த ஆலயத்திற்கு உட்பிரகாரம், வெளிப்பிரகாரம் என இரண்டு பிரகாரங்கள் உள்ளன. கருவறை கோஷ்டத்தின் தென்புறம் சுப்ரமணியர், நர்த்தன விநாயகர், உச்சிஷ்ட கணபதி மற்றும் தட்சிணாமூர்த்தியும், மேற்புறம் லிங்கோத்பவரும், வடபுறம் பிரம்மா, துர்க்கை திருமேனிகளும் உள்ளன. துர்க்கையின் எதிரே சண்டிகேஸ்வரரின் சன்னிதி உள்ளது. உட்பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் விநாயகர், மேற்கில் வள்ளி–தெய்வானையுடன் சுப்ரமணியர், வடமேற்கு மூலையில் கஜலட்சுமி ஆகியோரின் சன்னிதிகள் உள்ளன. வெளிப் பிரகாரத்தின் வட  கிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்கள் அருள் பாலிக்கின்றனர்.

தல வரலாறு

இந்த ஆலயம் மூன்றாம் குலோத்துங்கச் சோழனால் கட்டப்பட்டது. சோழ மன்னர்கள் பிரம்மஹத்தி தோ‌ஷத்தை நிவர்த்தி செய்யும் பொருட்டு திருவிடைமருதூரில் சிவாலயம் ஒன்றை அமைத்தனர். அப்போது அந்த தோ‌ஷம் முழுமையாக நிவர்த்தி அடையாததால் நதி ஒன்றை உருவாக்கி, அதன் அருகே ஒரு சிவாலயம் அமைக்க வேண்டு மென ஒரு அசரீரி கூற, மன்னனும் அதன்படியே ஒரு நதியை வெட்டி அதன் தென் கரையில் ஆலயம் அமைத்தான். இப்படி அமைக்கப்பட்டதே இந்த ஆலயம்.

மன்னன் மூன்றாம் குலோத்துங்கன் வெட்டிய ஆறுதான் உய்யகொண்டான். காவிரியின் துணை நதியான இந்த ஆறு திருச்சி மாநகரின் மையப்பகுதி வரை சென்று பாசனத்துக்குப் பயன்படுகிறது.

தன் முன்னோர்கள் திருவிடைமருதூரில் எழுப்பி கொண்டாடி வந்த சிவாலயத்தில் உள்ள இறைவனின் பெயரான மத்யார்ஜூனேஸ்வரர் பெயரையே இத்தல இறைவனுக்கும் மன்னன் சூட்டினான்.

இந்த ஆலயத்தின் கருவறை அமையும் நேரத்தில் மன்னரின் பிரம்மஹத்தி தோ‌ஷம் முழுவதும் நீங்கியது. நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாத மன்னனுக்கு குழந்தை பாக்கியமும் உண்டாயிற்று. அதை நினைவு படுத்தும் வகையில் இங்குள்ள மண்டபத்தின் தென்பகுதியில் ஒரு தூணில் பிரம்மஹத்தி உருவம் பொரிக்கப்பட்டு உள்ளது.

இந்த ஊரில் பொற்றாள பூவாய்  என்ற சித்தர் வாழ்ந்து வந்தார். இவர் ஊர் மக்களுக்கு சிறப்பான முறையில் மருத்துவம் செய்து வந்தார். அவர் அருள்வாக்கு சொல்வதிலும் வல்லவராகத் திகழ்ந்து வந்தார்.

இக்கோவிலின் அம்மனுக்கு விரதமிருந்து வழிபட்டால் பெண்களுக்கு வரும் மாதவிடாய் மற்றும் கர்ப்பப்பை கோளாறுகள் நிவர்த்தியாகும் என்று சித்தர் அருள்வாக்கு சொல்லி உள்ளார்.

அந்த சித்தரின் உருவம் இங்குள்ள மண்ட பத்தின் வடபுறம் ஒரு தூணில் பொறிக்கப்பட்டுள்ளது. பெண்கள் தங்களுக்கு உள்ள மாதவிடாய் மற்றும் கர்ப்பப்பை கோளாறுகளை ஒரு சீட்டில் எழுதி சித்தரின் திருமேனி இருக்கும் தூணில் கட்டுகின்றனர். பின், இங்குள்ள இறைவனையும், இறைவியையும், சித்தரையும் பிரார்த்தனை செய்ய, அவர்கள் பூரண நலம் பெறுகின்றனர் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. அந்த சித்தர் இந்த ஆலய இறைவனுடன் ஜோதி உருவில் ஐக்கியமானதாக ஐதீகம்.

இந்த ஆலயத்தில் காலை, உச்சி, சாயரட்சை மற்றும் அர்த்தஜாமம் என நான்குகால பூஜைகளும் தினசரி சிறப்பாக நடைபெறுகின்றன.

பெயர் காரணம்

இக்கோவில் அமைந்திருக்கும் இந்த ஊருக்கு பேட்டைவாய்த்தலை என்றும் வெட்டுவாய்த்தலை என்றும் இரு பெயர்கள் உள்ளன.

ஆறுகளிலிருந்து வெட்டப்படும் கால்வாய்களின் முதல் இடத்திற்கு தலைவாய் என்ற பெயர் உண்டு. காவிரியிலிருந்து வெட்டப்பட்ட உய்யகொண்டான் வாய்க்காலின் தலைமை இடத்தைக் கொண்டு உள்ளது இந்த ஊர். மேலும் வண்டிகள் கூடும் இடத்தை பேட்டை என்பர். எனவே இந்த ஊர் பேட்டைவாய்த்தலை என அழைக்கப்படலாயிற்று.

திருவரங்கநாதர் கோவிலில் இருந்த நகைகளைத் திருடிய திருடன் ஒருவன் இந்த ஊரில் வெட்டப்பட்டு மாண்டதால் வெட்டுவாய்த்தலை என அழைக்கப்பட்டது என்றும் பெயர் காரணம் சொல்கின்றனர். இருப்பினும், பேட்டைவாய்த்தலை என்ற பெயரே தற்போது பழக்கத்தில் உள்ளது. இங்கிருந்து புறப்படும் உய்யகொண்டான் வாய்க்காலுக்கு குடமுருட்டி, பாலக்கரை, சர்ப்பநதி என்று பலப் பெயர்கள் உண்டு.

திருவிழா

ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் விசாக நட்சத்திரத்தில் இந்த ஆலயத்தில் தேர் திருவிழா நடைபெறுகிறது. பத்து நாட்களும் சுவாமியும், அம்மனும் பல்வேறு வாகனங்களில் புறப்பட்டு வீதியுலா வருவது கண்கொள்ளாக் காட்சியாகும்.

பிரதோ‌ஷ நாட்களில் அம்பாள் புறப்பாடு செய்யப்பட்டு உள் பிரகாரத்தில் உலா வரும். நவராத்திரி, கந்த சஷ்டி, கார்த்திகை தீபம், சிவராத்திரி ஆகிய நாட்களில் இறைவனுக்கும், இறைவிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவதுண்டு. தைமாதத்தில் தைப்பூசத் திருநாளில் இங்கிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள குளித்தலை கடம்பர் கோவில் கால்வாய் துறையில் மற்ற ஏழு ஊர்களில் இருந்து வரும் இறைவன்–இறைவியுடன் இத்தலத்து இறைவனும், இறைவியும் சேர்ந்து கொள்ள, தீர்த்தவாரி உற்சவம் மிகச்சிறப்பாக நடைபெறும். மாலையில் சுவாமியும், இறைவியும் கோவிலுக்கு வந்தடைவர்.

குளித்தலை வட்டத்தில் நடைபெறும் இந்த தீர்த்தவாரி திருவிழா மிகப்பெரிய திருவிழாவாகும்.

இத்தலத்து இறைவன்–இறைவியை வழிபட்டு ஆராதனை செய்தால் பிரம்மஹத்தி தோ‌ஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.

மாதவிடாய் கோளாறுகள், கர்ப்பப்பை கோளாறுகளால் அவதிப்படும் பெண்கள் இத்தலம் வந்து இறைவன்–இறைவியை வழிபட்டு குணம் பெறுகின்றனர் என்பது பக்தர்களின் கூற்று.

திருச்சி–கரூர் நெடுஞ்சாலையில் இத்தலம் அமைந்துள்ளது. திருச்சியிலிருந்து கரூர் செல்லும் பேருந்தில் பயணம் செய்து பேட்டைவாய்த்தலையில் இறங்கிக் கொள்ளலாம். திருச்சி சத்திரம்பேருந்து நிலையத்திலிருந்து நகரப் பேருந்துகளும் உள்ளன. ஊரின் உள்ளே 2 கி.மீ. தொலைவில் உள்ளது இந்த ஆலயம்.

–ஜெயவண்ணன்.

Next Story