பசிப் பிணி நீக்கும் அன்னாபிஷேகம்


பசிப் பிணி நீக்கும் அன்னாபிஷேகம்
x
தினத்தந்தி 31 Oct 2017 10:25 AM GMT (Updated: 31 Oct 2017 10:25 AM GMT)

ஐப்பசி மாத பவுர்ணமி தினத்தில் அனைத்து ஆலயங்களிலும், குறிப்பாக சிவாலயங்களில் அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு 3-11-2017 அன்னாபிஷேக விழா நடக்கிறது.

ன்னம் என்பதற்கு உட்கொள்வது, உட்கொள்ளப்படுவது என்று பொருள் உண்டு. தானங்களில் சிறந்த தானமாக அன்னதானம் எப்போதும் இருந்து வரு கிறது. உலகில் தோன்றிய ஒவ்வொரு உயிர்களுக்கும் உணவு என்பது கிடைத்தாக வேண்டும். அதை தனக்குரியதாக மட்டுமே வைத்துக்கொள்ளும் எவராக இருந்தாலும், அவர்களை விட்டு இறையருள் விலகும் என்பதே வேதங்கள் கூறும் நிதர்சனமான உண்மை. அந்த வேத உண்மையை பறைசாற்றும் விதமாகவே கோவில்களில் அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது. இறைவன் திருமேனியில் வைக்கப்பட்ட அன்னம், பிரசாதமாக பக்தர்களும், நீர்நிலைகளில் உள்ள ஜீவராசிகளுக்கும் வழங்கப்படுகிறது.

தட்சன் என்பவனுக்கு 27 பெண்கள். அவர்கள் அனைவரையும் சந்திரன் மணம் முடித்துக் கொண்டான். ஆனால் அவர்களில் ரோகிணியிடம் மட்டுமே அவன் அதிக காதலுடன் இருந்தான். இதுபற்றி மற்ற பெண்கள் தன் தந்தையிடம் முறையிட்டனர். திரு மணம் செய்து கொடுக்கும்போது, அனைத்து பெண்களையும் சமமாக பாவிக்க வேண்டும் என்று கூறியிருந்த வார்த்தை சந்திரன் மீறிவிட்டதாக கருதிய தட்சன், சந்திரனுக்கு சாபம் கொடுத்தான். இதனால் சந்திரன் கலை இழந்து தேயத் தொடங்கினான். அதன்பிறகு சாபத்தில் இருந்து மீள, சிவபெருமானை நோக்கி தவம் இருந்தான் சந்திரன். ஈசனின் அருளால் தனது முழு ஆற்றலையும் முழுமையாக சந்திரன் பெற்ற தினமே ஐப்பசி பவுர்ணமியாகும்.

சந்திரன் பெற்றது போலவே, நாமும் முழு ஆற்றலையும் அடையும் நோக்குடன் தான் ஐப்பசி பவுர்ணமி நாளில், சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்து வழிபாடு செய்கிறோம்.

சந்திரன், பூமிக்கு மிக அருகில் வந்து தன் முழு ஒளியையும் பூமியில் வீசச் செய்யும் தினம் ஐப்பசி பவுர்ணமியாகும். இது விஞ்ஞான ரீதியாக நிரூபணம் செய்யப்பட்டது. அந்த ஒளியாற்றலை நாம் பரிபூரணமாகப் பெறுவதற்காகவே ஐப்பசி பவுர்ணமியில் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.

சந்திரனின் சாபம் தீர்ந்ததற்காகவா நாம், ஐப்பசி பவுர்ணமியில் இறைவனுக்கு அன்னாபிஷேகம் செய்து வழிபடுகிறோம். அது மட்டுமே காரணம் அல்ல.. இந்த நிகழ்வுக்கு ஆன்மிக ரீதியான அறிவார்ந்த தத்துவம் ஒன்று குறிப்பிடப்படுகிறது.

சிவலிங்கம் என்பது ஆகாயம். ஆவுடையார் என்பது பூமி. இந்த ஆகாய லிங்கத்துக்கு கடலில் இருந்து தண்ணீரை எடுத்துக் கொண்டு போய் மேகங்கள் மழையாய் பொழிந்து அபிஷேகம் செய்கின்றன. நட்சத்திரங்கள் ஆகாய லிங்கத்துக்கு மாலையாகவும், திசைகளே ஆடையாகவும் இருக்கின்றன. ‘தரை உற்ற சக்தி’ என்ற திருமந்திரப் பாடலின் விளக்கம் இது.

இந்தத் தகவலைச் சொன்ன திரு மூலருக்கும் கூட ஐப்பசி மாதம் தான் குருபூஜை வருகிறது என்பது சிறப்பு சேர்க்கும் ஒரு விஷயமாகும். அதனால்தான் போலும் ஐப்பசி மாதம் அன்னாபிஷேகம் செய்கிறோம். ஆண்டவன் என்னும் ஆகாயத்தின், ஒரே கூரையின் கீழ்தான் நாம் அனைவரும் இருக்கிறோம். அதனால் ஆண்டவனுக்கு அபிஷேகம் செய்து, அதை எந்த விதமான பேதமும் பார்க்காமல் அனைவருக்கும் கொடுக்க வேண்டும் என்பது இதன் தத்துவார்த்தமாக இருக்கிறது. இதுபற்றி கந்தபுராணத்திலும், திருமூலரின் திருமந்திரத்திலும் தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது.

அன்றைய தினம் மாலையில் இறைவனுக்கு அபிஷேகம் செய்து, நன்கு துடைத்து விட்டு, இறைவனின் திருமேனியை மூடும் அளவுக்கு அன்னத்தை சாத்துவார்கள். பிறகு இறைவனுக்கு தீபாராதனைச் செய்யப்படும். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னம் பிரசாதமாக வழங்கப்படும். இறைவனின் திருமேனியில் உள்ள அன்ன அலங்காரத்தைக் களைந்து, அதில் சிறிதளவு அன்னத்தை எடுத்து லிங்கம்போல் செய்து பூஜிப்பார்கள். அதை எடுத்துக் கொண்டுபோய், ஊரில் உள்ள குளம், ஏரி, நதி போன்ற நீர்நிலைகளில் விடுவார்கள். இதனால் ஊரில் விளைச்சல் அதிகரிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

அன்னாபிஷேகத்தை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தவர்களுக்கு, அடுத்த அன்னாபிஷேகம் வரை அன்னத்துக்கு குறைவிருக்காது என்று கூறப்படுகிறது. பலருக்கு செல்வச் செழிப்பில் இருந்தாலும், உணவைக் கண்டாலே வெறுப்பாக இருக்கும். பசி இருக்கும்; ஆனால் சாப்பிட முடியாது. அல்லது சாப்பிட பிடிக்காது. இதை ‘அன்ன த்வேஷம்’ என்பார்கள். இப்படிப்பட்டவர்கள், சுவாமிக்கு அன்னாபிஷேகம் செய்து, அந்த அன்னத்தை, எந்தவித விளம்பரமும் இல்லாமல் ஏழைகளுக்கு தானம் செய்து வந்தால், அன்ன த்வேஷம் விலகும்.

ஒருவன் எவ்வளவு பெரிய, பெரிய தான- தர்மங்களைச் செய்தாலும் கூட, அவை அனைத்தும் பசி என்று வரும் ஒருவருக்குச் செய்யும் அன்னதானத்திற்கு ஈடாகாது என்பது நமது முன்னோர்களின் வாக்காகும். அது எவ்விதத்திலும் பொய்யில்லை என்பதே இறைவனுக்கு நடைபெறும் அன்னாபிஷேகமும், அதை அனைவருக்கும் கொடுக்கும் முறையும் உணர்த்துகிறது.

பரணி படையல்

சிவபெருமானின் வடிவமாக விளங்குபவர் பைரவமூர்த்தி. மிகப்பெரிய காவல் தெய்வமாக இவர் கருதப்படுகிறார். இவருக்கு பெரும்படையல் எனப்படும் அன்னப் படையல் இடுவது சிறப்பு வழிபாடாக கூறப்படுகிறது. ஆண்டிற்கு இரண்டு முறை பைரவருக்கு அன்னப் படையல் கொடுக்கப்படுகிறது. அது சித்திரை பரணி நட்சத்திரம், ஐப்பசி பரணி நட்சத்திரம் ஆகிய இரு நாட்களாகும்.

சுந்தரருக்கு விருந்து

சென்னையில் இருந்து செங்கல்பட்டு ரெயில் மார்க்கத்தில் இருக்கிறது மறைமலைநகர். இங்கிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் திருக்கச்சூர் திருத்தலம் அமைந்துள்ளது. இங்கு ஊருக்கு நடுவில் விருந்திட்டநாதர் கோவில் இருக்கிறது. இதன் அருகே மலை மீதுள்ள மருந்தீஸ்வரரை வழிபடுவதற்காக வந்தார் சுந்தரர். அப்போது அவருக்கு பசி அதிகமானது. சுந்தரமூர்த்தி நாயனாரின் பசியைப் போக்கும் வகையில் இறைவனே வீடுவீடாகச் சென்று, உணவை இரந்து பெற்று வந்து சுந்தரருக்கு விருந்து படைத்தார். அதன்காரணமாகவே இத்தல இறைவனுக்கு விருந்திட்டநாதர் என்ற பெயர்.

பக்தனுக்கு பாத்திரம்

திருவையாறு திருத்தலத்திற்கு அருகாமையில் இருக்கிறது திருச்சோற்றுத்துறை என்ற தலம். இங்குள்ள இறைவனின் திருநாமமே திருச்சோற்றுத்துறை நாதர் என்பதுதான். இங்கு வசித்து வந்த அருளாளன் என்ற பக்தனுக்கு, சிவபெருமான் அட்சய பாத்திரம் வழங்கினார். இதனால் இத்தல இறைவனுக்கு இப்பெயர் வந்தது. உலக உயிர்களுக்கு தினமும் படியளக்கும் இறைவனுக்கு ‘சோற்றுத்துறையார்’ என்ற திருநாமம் வழங்குவதில் என்ற வியப்பு இருக்கிறது.

ஸ்படிக லிங்கம்

சிதம்பரத்தில் உள்ள ஸ்டிபக லிங்கத்திற்கு தினமும் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. அன்னத்தை சாத்தி, வில்வ இலை அணிவித்து இறைவனுக்கு தீபாராதனை செய்யப்படுகிறது.

கர்நாடக மாநிலம் மைசூருக்கு அருகில் நஞ்சன்கூடு என்ற திருத்தலம் உள்ளது. இங்குள்ள இறைவனுக்கு தினமும் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.

திருஆப்பனூர் என்ற ஆலயத்தில் வீற்றிருக்கும் இறைவனுக்கு அன்னவிநோதர் என்று பெயர். இத்தல இறைவன், தன்னுடைய பக்தனுக்காக மணலை சோறாக்கி அருள்புரிந்ததாக தல வரலாறு தெரிவிக்கிறது.

Next Story