கிணற்றுக்குள் பொங்கி வந்த கங்கை


கிணற்றுக்குள் பொங்கி வந்த கங்கை
x
தினத்தந்தி 15 Nov 2017 7:51 AM GMT (Updated: 15 Nov 2017 7:51 AM GMT)

இன்றைக்கும் கார்த்திகை அமாவாசையில் இந்தக் கிணற்றில் கங்கை பொங்கி வருவதாக ஐதீகம்.

18-11-2017 கார்த்திகை அமாவாசை 

கேரள மன்னன் கணபதி என்பவனின் பெண் பாவத்தை போக்கிய திருத்தலம் திருவிசநல்லூர் ஆகும். பெண்களை வஞ்சித்து, ஏமாற்றி வாழ்ந்த கணபதியின் பெண் பாவம் இங்கு வழிபட அகன்றதாம். நம் வாழ்வில் அறிந்தோ, அறியாமலோ செய்த தவறால் பெண் சாபத்திற்கு ஆளாகியிருந்தால், இத்தலம் வந்து வழிபட சாபம் பாவம் நீங்கும்.

இத்தல ஈசனின் திருநாமம் சிவயோக நாத சுவாமி என்பதாகும். சுயம்பு மூர்த்தியான இவர், கிழக்கு நோக்கி வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தல விருட்சங்களாக அரசு, வில்வம் உள்ளன. சம்பந்தரின் பாடல் பெற்ற தலம் இது.

திருவிசநல்லூர் பகுதியில் சிறந்த சிவ பக்தரான மகான் தர வெங்கடேச தீட்சிதர் என்பவர், சவுந்தர நாயகி சமேத சிவயோகிநாத சுவாமி திருக்கோவிலில் தினமும் காலையில் வழிபாடு செய்து வந்தார். ஒருநாள் கூட தவறியதில்லை. ஒருமுறை கார்த்திகை அமாவாசை தினம் அன்று இவர் தமது முன்னோர்களுக்கு சிரார்த்தம் செய்ய ஏற்பாடு செய்தார். மிகுந்த ஆசாரத்துடன் அனைத்து ஏற்பாடுகளும் நடந்தது.

அன்று காலையில் சிரார்த்த நேரத்திற்கு முன்னால் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த ஒருவர், வெங்கடேச தீட்சிதரின் இல்லத்து வாசலுக்கு வந்து, தான் மிகவும் பசியுடன் இருப்பதாகவும், உண்ண ஏதாவது தருமாறு வேண்டினான். அவனது தோற்றத்தைக் கண்டு இரங்கிய மகான், இல்லத்தில் சிரார்த்தத்திற்காகச் செய்யப்பட்ட உணவை அளித்தார்.

அவரது செயலைக் கண்ட அந்தணர்கள், ‘இது சாஸ்திர விரோதம். இதற்கு பரிகாரமாக தர வெங்கடேச தீட்சிதர் காசி சென்று கங்கையில் நீராட வேண்டும். இல்லாவிட்டால் ஊர் விலக்கு செய்து, அவரை குடும்பத்துடன் நீக்கி வைக்க வேண்டும்’ என்று கூறியதுடன், சிரார்த்தம் செய்யவும் மறுத்து விட்டனர்.

‘வடநாட்டில் இருக்கும் கங்கையில் ஒரே நாளில் நீராடித் திரும்ப முடியுமா? கும்பகோணத்தில் இருந்து காசியில் இருக்கும் கங்கைக்கு சென்று வருவதற்குள், அடுத்த ஆண்டு திதி வந்து விடுமே!’ என்று மகான் வருந்தினார். இறைவனை நினைத்து மனமுருகி ‘கங்காஷ்டகம்' என்னும் துதி பாடினார். அவர் பாடி முடித்ததும், அவர் வீட்டுக் கிணற்றில் இருந்து கங்கை பொங்கி வழிந்தது. கிணற்றிலிருந்து நீர் மேலெழுந்து வழிந்து பெருக்கெடுத்து ஊருக்குள் புகுந்து வெள்ளக்காடானது.

இதைக் கண்டு அதிசயித்த மக்கள், தர வெங்கடேச தீட்சிதரிடம் மன்னிப்புக் கேட்டு, அந்த கங்கை நீரில் நீராடினர். சிரார்த்தம் செய்ய வந்த அந்தணர்கள் தங்கள் தவறை உணர்ந்து மகானிடம் மன்னிப்புக் கேட்க, மகானும் கங்கையிடம் தணியுமாறு பிரார்த்தித்தார். கங்கையும் அடங்கி அக்கிணற்றிலேயே நிலைத்தது என்பது ஐதீகம். அதைத் தொடர்ந்து திதி கொடுக்கப்பட்டது.

காலையில் நடந்த இந்த நிகழ்வுகளின் காரணமான, மகானால் திருவிசநல்லூர் ஆலயத்திற்குச் சென்று இறைவனை தரிசிக்க முடியவில்லை. அன்று மாலை திருவிசநல்லூர் ஈசன் கருவறையில் மூர்த்தங்களிடம், ஒரு துண்டுச் சீட்டு இருந்தது. அதில், ‘இன்று மதியம் தர அய்யாவாள் வீட்டின் திதியில் உண்டதால், இரவு நைவேத்தியம் வேண்டாம்’ என்று அந்தத் துண்டுச் சீட்டில் எழுதியிருந்தது.

ஏழையாக வந்து, அய்யாவாள் வீட்டில் திதி உணவை உண்டது சிவபெருமானே என்றுணர்ந்த அனைவரும், தர அய்யாவாளை போற்றிப் புகழ்ந்தனர்.

இந்த அற்புத நிகழ்வே ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தன்று திருவிசநல்லூர் தர வெங்கடேச மடத்தில் நிகழ்கிறது.

மகான் தன்னுடைய கங்காஷ்டகத்தில், ‘கங்கையே நீ இங்கேயே ஸ்திரமாக இரு’ என்று வேண்டுகிறார். அதனால் இந்தக் கிணற்றிலுள்ள தீர்த்தம் எல்லா நாளிலும் கங்கை தீர்த்தமே!. இன்றைக்கும் கார்த்திகை அமாவாசையில் இந்தக் கிணற்றில் கங்கை பொங்கி வருவதாக ஐதீகம். மகான் வசித்த இல்லம் மடமாக மாற்றப்பட்டுள்ளது.

இங்கு கங்கை பொங்கும் விழா பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. விழா நாட்களில் தினமும் அன்னதானம் வழங்கப்படுகிறது. பத்தாம் நாள் கார்த்திகை அமாவாசை அன்று தான் கங்கை கிணற்றில் பொங்குகிறது. அன்றைய இரவு முழுவதும் திவ்ய நாம சங்கீர்த்தனம் நடக்கும். கார்த்திகை அமாவாசையன்று அதிகாலை காவிரி நதிக்குச் சென்று, சங்கல்ப ஸ்நானம் செய்து விட்டு, அங்கிருந்து தீர்த்தம் கொணர்ந்து கிணற்றில் விடுவார்கள். பிறகு கிணற்றுக்கு கங்கா பூஜை நடத்திவிட்டு காலை ஐந்து மணியிலிருந்து எல்லோரும் நீராடுவார்கள். அப்போது அங்கு நடக்கும் கங்கா பூஜையின்போது அந்த கிணற்றில் கங்கை பொங்கி வருவதன் அடையாளமாக நுரை மிகுந்துகொண்டு நீர் மட்டம் உயர்ந்து வருமாம். அன்று ஆயிரக்கணக்கான மக்கள் நீராடினாலும் சிறிதும் நீர் மட்டம் குறையாது. இந்த ஞானம் வழியும் கிணறான திருவிசநல்லூர் தலத்திற்குச் சென்று கார்த்திகை அமாவாசையன்று நீராடுவது பெறுவதற்கு அரிய பெரும் பாக்கியமாகும்.

சிவயோகி தர வெங்கடேச தீட்சிதர் சிவனும், விஷ்ணுவும் ஒன்றே என்று மக்களுக்கு போதித்தவர். தினமும் திருவிசநல்லூர் ஈசனை காலையில் வழிபட்டு விட்டு, அருகில் உள்ள திருவிடை மருதூருக்குச் சென்று, மாலை வேளையில் மகாலிங்க சுவாமியையும் வணங்கி வருவார். அதன் பின்பே தினமும் இரவு உணவை உண்பார்.

திருவிசநல்லூரில் இருந்து திருவிடைமருதூருக்கு செல்லும் வழியில் வீரசோழன் என்ற ஆறு குறுக்கிடும். ஆற்றைக் கடந்து சென்றுதான் தினமும் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமியை தரிசித்து வருவார். ஒரு நாள் வீரசோழன் ஆற்றில், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தர வெங்கடேச தீட்சிதரால், ஆற்றினைக் கடக்க முடியவில்லை. இதனால் வீடு திரும்பிய அவர், மகாலிங்க சுவாமியை தரிசிக்காததால் கவலையுற்றார்.

உணவருந்தாமலேயே படுக்கைக்குச் சென்றார். திடீரென வீட்டு வாசல் கதவு தட்டும் ஓசை கேட்டது. ‘நள்ளிரவு நேரத்தில், இந்த அடை மழையில் யார் கதவைத் தட்டுவது’ என்ற யோசனையுடன் கதவைத் திறந்தவருக்கு இன்ப அதிர்ச்சி. திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி ஆலய அர்ச்சகர் பிரசாத தட்டுடன் நின்று கொண்டிருந்தார். ‘அய்யா! இன்று ஆற்றில் கடுமையான வெள்ளம் ஓடுகிறது. அதனால் மகாலிங்க சுவாமியை காண உங்களால் வர முடியவில்லை என்பதை அறிந்து கொண்டேன். சுவாமியை தரிசிக்காமல், இரவு உணவு உண்ண மாட்டீர்கள் என்பது எனக்குத் தெரியும். ஆகவே தான் திருக் கோவில் பிரசாதத்துடன் வந்து விட்டேன்’ என்றார் அர்ச்சகர்.

பிரசாதத்தைப் பெற்றுக்கொண்ட மகான், மகாலிங்க சுவாமியின் கருணையை எண்ணி வியந்தார். அர்ச்சகரை இரவு வீட்டிலேயே தங்கி செல்ல வேண்டினார். அர்ச்சகரும் சம்மதித்தார். உறக்கத்தில் கடும் குளிரால் அர்ச்சகர் அவதியுறுவதைக் கண்ட மகான், கம்பளியை எடுத்து வந்து அர்ச்சகருக்கு போர்த்தி விட்டார். பொழுது விடிந்தது. மழையும் நின்றது. உறக்கத்தில் இருந்து எழுந்த மகான், அர்ச்சகரைக் காணாமல் திகைத்தார். தன்னிடம் சொல்லாமலே சென்று விட்டாரே என்று எண்ணி விட்டு, விடிந்ததும் விடியாததுமாக, அந்த அதிகாலையிலேயே திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமியை தரிசிக்க புறப்பட்டார்.

அங்கு மகாலிங்க சுவாமி சன்னிதியில் முதல் நாள் இரவு தன் வீட்டிற்கு வந்த அர்ச்சகர் நின்று கொண்டிருப்பதை கண்டார். அப்போது தான் அவரும் கோவிலுக்கு வந்திருந்தார். இன்னும் கோவில் நடை திறக்கப்படாமல் இருந்தது. அர்ச்சகரிடம் சென்ற தர வெங்கடேசர் நேற்று நடந்ததை நினைவுபடுத்தி, ‘சுவாமி! என்னிடம் சொல்லாமலேயே வந்து விட்டீர்களே!’ என்று வருத்தப்பட்டார்.

அர்ச்சகர் திகைத்தவாறே, ‘நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?. நான் எப்போது உங்கள் வீட்டிற்கு வந்தேன்? கடுமையான மழை காரணமாக, நான் நேற்று மாலையிலேயே திருக்கோவிலை சாத்திவிட்டு என் வீட்டிற்குச் சென்று விட்டேனே!’ என்றார்.

பின்னர் கோவிலைத் திறந்து கருவறை கதவை திறந்த போது, தர வெங்கடேசர், நேற்று இரவு அர்ச்சகருக்கு போர்த்தி விட்ட கம்பளி, ஈசனின் திருமேனியை தழுவிக்கொண்டிருந்தது. அப்போதுதான் அவர்களுக்கு தெரிந்தது “நேற்று நள்ளிரவில் கொட்டும் மழையில் தர வெங்கடேசர் வீட்டுக்கு சென்று பிரசாதம் உண்ணக்கொடுத்து, அவர் வீட்டில் தூங்கி வந்தது திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமியே'' என்பது. ஈசனின் கருணையை எண்ணி இருவரும் உள்ளம் நெகிழ்ந்தனர்.

பின்னர் ஈசன் அருளால் அற்புதங்கள் பல புரிந்த தர வெங்கடேசர் திருவிடைமருதூரில் உள்ள மகாலிங்க சுவாமியிடம் ஜோதி வடிவில் ஐக்கியமானார். கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தன்று திரு விடைமருதூர் திருக்கோவில் மகாலிங்க சுவாமிக்கு, தர வெங்கடேசர் மடத்திலிருந்து வழங்கப் பெறும் வஸ்திரம் சாத்தப்படுகிறது.

அதுபோல அன்று உச்சிகாலப் பூஜையின் நைவேத்தியம், திருநீறு முதலிய பிரசாதங்கள் திருக்கோவில் சிவாச்சாரியார் மூலம் மகானின் மடத்துக்கு தந்தருளும் ஐதீக நிகழ்வும் இன்றளவும் நடக்கிறது.

கும்பகோணம்- மயிலாடுதுறை செல்லும் வழியில் 8 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது திருவிடைமருதூர். அங்கிருந்து வடமேற்கில் 3 கிலோமீட்டர் தூரத்தில் திருவிசநல்லூர் திருத்தலம் இருக்கிறது.

-சிவ.அ.விஜய் பெரியசுவாமி, கல்பாக்கம். 

பிரம்மஹத்தி தோஷம்

ஜோதிவடிவில் திருவிடை மருதூர் மகாலிங்க சுவாமியின் சிவலிங்கத்திற்குள் ஐக்கியமாகிய இந்த மகானின் அருள்பொலிவு பொழியும் திருவிடைமருதூர் திருத்தலம் பிரம்மஹத்தி தோஷம் நீக்கும் பரிகார திருத்தலமாக இன்றளவும் சிறந்து விளங்குகிறது. ஆம்! பாண்டிய மன்னன் வரகுணபாண்டியனின் பிரம்மஹத்தி தோஷத்தையும், வீரஸேனன் என்னும் மன்னனின் பிரம்மஹத்தி தோஷத்தையும் அகற்றிய புண்ணியபூமி திருவிடைமருதூர் ஆகும்.

இத்தலத்தில் பிரம்மஹத்திக்கு தனி சன்னிதி உள்ளது. ஒரு வருக்கு திருமணத்தடை காலம் தள்ளிக்கொண்டேபோகுதல், புத்தி சுவாதினம் இல்லாமல் இருத்தல், போதல், மருத்துவத்துக்கும் கட்டுப் படாத நோய்களால் அவதிப் படுதல், செய்யாத குற்றத்திற்காக ஜெயில் தண்டனை அனுபவித்தல், உத்தியோகத் தடை உண்டாதல், கணவன்-மனைவி பிரச்சினை, தொழிலில் பெரும் நஷ்டம், புத்திர பாக்கியத் தடை, புத்திர சோகம் முதலியன பிரம்மஹத்தி தோஷத்தாலேயே ஏற்படுகின்றன.

ஒருவன் செய்யாத தவறை, செய்தான் என சொல்லும் பொய்கள் கூட பாவங்களாகின்றன. முன்பின் அறியாதவர்களுக்கு பணத்திற்காக துன்பம் விளைவித்தல், நல்ல குடும்பத்தை பொல்லாங்கு சொல்லி பிரித்தல், செய்வினை செய்தல், செய்வினை செய்பவர்களுக்கு துணை போகுதல், திருமணத்திற்கு முன் உறவு கொண்டு பின் வேறு ஒருவரை மணம் புரிதல், திருமணத்திற்கு பின் வேறொரு பெண்ணை அல்லது ஆணை விரும்புதல், நம்பிக்கை துரோகம் செய்தல், நன்றாக வளர்ந்து வரும் மரம் செடி கொடிகளை வெட்டி எறிதல், கருகலைப்பு செய்பவர்கள் ஆகியோரையும் பிரம்மஹத்தி தோஷம் எளிதில் அண்டிவிடுகிறது. இந்த பிரம்மஹத்தி தோஷம் நீங்கி நிவாரணம் பெற, திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோவிலில் வழிபாடு செய்வது சிறந்ததாக கூறப்படுகிறது.

திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்ய செல்லும் வழியாக வெளிவராமல், அம்பாள் பெருநலமாமுலையம்மை சன்னிதியில் வழிபட்டு, அம்பாள் மூகாம்பிகையையும் வழிபாடு செய்து அதன் அருகில் உள்ள வாசல் வழியாகத்தான் வெளிவர வேண்டுமாம். அப்படிச் செய்வதால் பிரம்மஹத்திக்கு நிகரான சகல பாவங்களும் இத்தல பிரம்மஹத்தியிடம் சேர்ந்து, மீண்டும் அவை நம்மை அண்டாது என்கிறார்கள்.

திருவிடைமருதூரில் தினமும் காலை 8 மணி, 9 மணி, 10 மணிக்கு பிரம்மஹத்தி தோஷம் நிவாரண பரிகாரம் செய்கிறார்கள். 

நான்கு யுக பைரவர்கள்

இந்த ஆலயத்தில் 4 பைரவர்கள் ஒரே சன்னிதியில், யுகத்திற்கு ஒரு பைரவராக அருள்கின்றனர். எனவே இவர்களை சதுர்கால பைரவர்கள் என்று அழைக்கிறார்கள். ஞான கால பைரவர், சொர்ண ஆகர்ஷண பைரவர், உன்மத்த பைரவர், யோக பைரவர் என்பது இவர்களின் திருநாமங்கள். 

Next Story