கடன் இல்லாத வாழ்க்கை...


கடன் இல்லாத வாழ்க்கை...
x
தினத்தந்தி 31 Aug 2018 9:22 AM GMT (Updated: 31 Aug 2018 9:22 AM GMT)

கடனில்லாமல் வாழ்வது என்பது பெரும் பாக்கியம். அப்படி வாழ்க்கை அமைவதென்பது பெரிய சவால்.

கடன் என்பது மனித வாழ்வின் முக்கிய அங்கமாக மாறிவிட்டது. கடனில்லா மனிதனைப் பார்ப்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக மாறிவிட்டது.

கடனை விட்டு ஓடவும், ஒளியவும் முடியாத சூழலை தெரிந்தோ, தெரியாமலோ நாம் ஏற்படுத்திக் கொண்டோம். கடனை சாட்சிகளை வைத்து வாங்கினால், நம் உண்மைத்தன்மையும், உறவுகளும், நட்புகளும் பாதுகாக்கப்படும்.

அவசியத் தேவைக்கு கடன்

நம் வாழ்வின் அடிப்படைத்தேவைகளான, உணவு, ஆடை, குடிநீர் மற்றும் திருமணம் போன்றவற்றுக்குக் கடன் வாங்குவதில் தவறு இல்லை. அப்படியில்லாமல் ஆடம்பர விழாக்களுக்கும், தன்னைச் செல்வந்தன் போன்று காட்டிக்கொள்ளவும் கடன் வாங்கினால், அந்தக்கடன் நம்மை நடுவீதியில் நிறுத்தி விடும்.

அவசியத் தேவைக்கு கடன் வாங்கும் நாம், அதனை உரிய காலத்தில் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வாங்குதல் அவசியமாகும். பணத்தை வாங்கிவிட்டு ஏமாற்றிவிடலாம் என்று கடன் வாங்குவது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட ஒன்று.

‘திருப்பிக்கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கடன் வாங்கினால், அந்த பணத்தை திரும்பச் செலுத்த இறைவன் முழு உதவி செய்கிறான்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். கடன் பெற்று, திருப்பிச் செலுத்தாமல் இழுத்தடிப்பது, ஏமாற்றுவது குற்றமாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “செல்வந்தன் (வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாமல் தவணைக் கேட்டு) இழுத்தடிப்பது அநியாயமாகும். உங்களில் ஒருவரது கடன் ஒரு செல்வந்தன் மீது மாற்றப்பட்டால் அவர் (அதற்கு) ஒத்துக்கொள்ளட்டும்”. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி)

வசதியுள்ளவர் கடனை திருப்பிக்கொடுக்காமல் இருப்பது அவரது மானத்தை(பங்கப்படுத்துவதை)யும், அவரை தண்டிப்பதையும் ஆகுமானதாக்கிவிடும் என்றும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்கள்: நஸாஈ, அபூதாவூத்).

கடன் கொடுக்கும், வாங்கும் முறை


ஒரு காலத்தில் கடன் கொடுக்கும் நபர்களைவிட, கடன் கேட்கும் ஆட்கள் தான் அதிகம். ஆனால், தற்போது தேடிச்சென்று கடன் கொடுக்கும் ஆட்களும் அதிகமாகப் பெருகிவிட்டார்கள்.

ஆனால் எப்படி கடன் கொடுக்க வேண்டும், எப்படி வாங்க வேண்டுமென்ற எந்த வரைமுறையும் இல்லாமல், கடன் கொடுக்கல்-வாங்கல் இருப்பதால் பல பிரச்சினைகள் உருவாகி, உறவுகள், நட்புகள் இரண்டாகப் பிரிகின்றன. அதற்கான, சரியான சட்டதிட்டங்களை இறைவன் கீழ்க்கண்ட திருக்குர்ஆன் (2:282) வசனங்களின் மூலம் விளக்கிக் கூறுகின்றான்.

“நம்பிக்கை கொண்டோரே, குறிப்பிட்ட தவணைக்கு நீங்கள் கடன் கொடுத்தால், அதனை எழுதிக்கொள்ளுங்கள். உங்களுக்கு மத்தியில் எழுதுபவர் நீதமாக எழுதட்டும்.

எழுதுபவர் அல்லாஹ் தனக்குக் கற்றுக்கொடுத்தவாறு எழுத மறுக்க வேண்டாம். எனவே, அவர் எழுதட்டும்.

எவர் மீது கடன் பொறுப்பு இருக்கிறதோ அவர் வாசகங் களைக் கூறட்டும். மேலும் அதில் எதையும் குறைத்துவிடாது தனது இரட்சகனாகிய அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளட்டும்.

கடன் பொறுப்புள்ளவர், விவரமற்றவராகவோ அல்லது பலவீனராகவோ அல்லது வாசகத்தைக் கூற இயலாதவ ராகவோ இருந்தால் அவரது பொறுப்பாளர் நீதமாக வாசகத்தைக் கூறவும்.

மேலும், உங்கள் ஆண்களில் இருந்து இரு சாட்சியாளர்களை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். ஆண்கள் இருவர் இல்லையென்றால் சாட்சிகளில் நீங்கள் பொருந்திக் கொள்ளக் கூடியவர்களிலிருந்து ஆண் ஒருவரையும், பெண்கள் இருவரையும் (சாட்சிகளாக எடுத்துக் கொள்ளுங்கள்.) ஏனெனில், அவ்விருவரில் ஒருத்தி தவறிவிட்டால் அவர்களில் ஒருத்தி மற்றவளுக்கு நினைவூட்டுவாள். சாட்சியாளர்கள் (சாட்சிக்காக) அழைக்கப்பட்டால் மறுக்க வேண்டாம்”.

கடன் இருக்கும் நிலையில் மரணம் ஏற்பட்டால்

கடன் இருக்கும் நிலையில் ஒருவர் மரணித்துவிட்டால், அவர் மீது இருக்கும் கடனை அடைத்த பின்னரே, அவரின் சொத்துக்களை பாகப்பிரிவினை செய்யவேண்டும் என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

ஒருவர் விட்டுச் சென்ற சொத்தில் யார் யாருக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பதை விவரித்துவிட்டு, “(இவ்வாறு பிரித்துக் கொடுப்பது) அவர் செய்துள்ள மரண சாசனத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னர்தான்” என்று திருக்குர்ஆன் 4:12 வலியுறுத்துகிறது.

இஸ்லாம் கூறுவது போன்று, மரணித்தவர் வாங்கிய கடனை முழுமையாக செலுத்திய பின்னரே பாகப்பிரிவினை செய்வது சிறந்த முறையாகும்.

கூர்மையான ஆயுதத்தில் நடப்பது போன்றது கடன்.அதனை, கவனமாக கையாளத் தெரிந்து இருத்தல் வேண்டும். இல்லையென்றால், நம் அடையாளத்தை அழித்து விடும். கடன் எப்படி வாங்க வேண்டும், எப்போது வாங்க வேண்டும், கடனை எவ்வாறு திருப்பிச்செலுத்த வேண்டும் என்று இஸ்லாம் தெளிவாக கூறுவதை நாம் பின்பற்றுதல் நன்று.

பிரச்சினைகள் இல்லாமல் இருக்க, இறைவன் கூற்றுப்படி நாம், கடன் கொடுக்கல், வாங்கல் வைத்துக் கொள்வது நம் மீது கடமையாகும்.

- ஏ.எச். யாசிர் அரபாத் ஹசனி, லால்பேட்டை.

Next Story