கவலைகளை அகற்றும் தைப்பூசம்


கவலைகளை அகற்றும் தைப்பூசம்
x
தினத்தந்தி 4 Feb 2020 4:30 AM GMT (Updated: 3 Feb 2020 11:56 AM GMT)

8-2-2020 தைப்பூசத் திருநாள். தமிழ் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது, தைப்பூசம் ஆகும். 27 நட்சத்திர மண்டலங்களில் எட்டாவது நட்சத்திரமாக திகழ்வது ‘பூசம்’ நட்சத்திரம்.

தை மாதத்தில் பூச நட்சத்திரம் வரும் புண்ணிய நாளையே, ‘தைப்பூச’மாக நாம் கொண்டாடுகிறோம்.

தல வரலாறு

தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையே நீண்டநாட்களாக போர் நடைபெற்றது. பல ஆண்டுகளாக போர் நடைபெற்றும், தேவர்களால் அசுரர்களை அழிக்க முடியவில்லை. எனவே பல்வேறு இன்னல்களை கொடுத்து வரும் அசுரர்களை அழிக்க வேண்டி, சிவபெருமானிடம் தேவர்கள் முறையிட்டனர். தங்களால் அசுரர்களை அழிக்க முடியவில்லை. எனவே தங்களுக்கு தலைமை தாங்கிச் செல்லக்கூடிய ஆற்றல் வாய்ந்த, சக்தி மிக்க ஒரு தலைவனை உருவாக்க வேண்டும் என்று வேண்டினர்.

கருணைக்கடலான எம்பெருமான், தேவர்களின் முறையீட்டை ஏற்று, தனது தனிப்பட்ட சக்தியால் உருவாக்கிய அவதாரமே ‘கந்தன்.’ சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளிப்பட்ட 6 தீப்பொறிகள், 6 அழகான குழந்தைகளாயின. கார்த்திகைப் பெண்களால், அந்தக் குழந்தைகள் வளர்க்கப்பட்டு பின்னர் ஆறுமுகங்களுடன் ஓர் உருவமாக மாறியது. அப்படி அவதரித்தவரே முருகப்பெருமான். சிவபெருமானின் தேவியான அன்னை பார்வதி தேவியானவள், ஆண்டி கோலத்தில் பழனி மலையில் வீற்றிருக்கும் முருகப்பெருமானுக்கு ஞானவேல் வழங்கியது தைப்பூச நாளில்தான்.

அதன் காரணமாகவே மற்ற முருகன் கோவில்களைக் காட்டிலும், பழனி மலையில் தைப்பூசத்திருவிழா வெகுச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அப்படி அளிக்கப்பட்ட வேலினை ஆயுதமாகக் கொண்டே, முருகன் அசுர குலத்தை அழித்து தேவர்களைக் காப்பாற்றினார். தேவர்களுக்குத் தொல்லை கொடுத்த அரக்கர்களை திருச்செந்தூர் எனப்படும் திருச்சீரலைவாயில் வைத்து வதம் செய்து தேவர்களுக்கு மன நிம்மதியை வழங்கினார். எனவே தான் அசுரர்களை வதம் செய்ய முருகப்பெருமான் பயன்படுத்திய வேலினை வழிபட்டால், தீய சக்திகள் நம்மைத் தாக்காமல் இருப்பதுடன், அந்த சக்திகள் நமக்கு அடிபணிந்து நல்லருளை நல்கும் என்பது ஐதீகம்.

தைப்பூசத்தை முன்னிட்டு முருக பக்தர்கள், மார்கழி மாத ஆரம்பத்தில் துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்குகின்றனர். சஷ்டி கவசம், சண்முக கவசம், திருப்புகழ் போன்ற பாடல்களை அன்றாடம் பாராயணம் செய்து, தைப்பூசத்தன்று பழனி முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்து விரதத்தை முடிப்பார்கள். ஆறுமுகப்பெருமானின் அருளை அடைவதற்கு தைப்பூசம் உகந்த நாள்.

முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளிலும் முருகனடியார்கள் பலர், பாதயாத்திரையாகச் சென்று தைப்பூசத்தன்று முருகனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்வார்கள். தைப்பூசத்தன்று முருகனுக்கு காவடி நேர்த்திக்கடன் செலுத்துவதையும் பக்தர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். தீராத நோயால் அவதிப்படும் பட்சத்தில், முருகக்கடவுளுக்கு காவடி எடுப்பதாக வேண்டிக்கொண்டால் அவர்களைப் பிடித்துள்ள நோய் அகன்று உடல் ஆரோக்கியம் பெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.தங்களின் வேண்டுதல் நிறைவேறியதும், பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் தைப்பூச தினத்தன்று காவடி நேர்ச்சையை செலுத்துகிறார்கள்.

தைப்பூசம் வரும் நாள், பெரும்பாலும் பவுர்ணமியாகவே இருக்கும். அன்றைய தினம் குழந்தைகளுக்கு தோடு குத்துதல், ஏடு தொடங்குதல் போன்றவற்றை செய்து வைப்பார்கள். இது தவிர முருகனின் அடியார்கள் காவடி எடுத்தல், கற்பூரச்சட்டி போன்ற நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுவார்கள். இந்த நாளில் ஆறுபடை வீடுகள் உள்ளிட்ட, முருகப்பெருமானின் அனைத்து கோவில்களிலும், சிவாலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படும்.

தமிழ்நாட்டில் மட்டுமல்லாது மலேசியா, சிங்கப்பூர் என உலகின் பல்வேறு நாடுகளில் உலகெங்கிலும் உள்ள தமிழர்களால் தைப்பூசம் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தைப்பூசத்தன்று முருகப்பெருமான் கோவில்களில் பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்தல் போன்ற பல்வேறு நேர்த்திக் கடன்களை செலுத்து கின்றனர்.

பஞ்ச பூதங்கள் உருவான நாள்

சிவனும் சக்தியும் இணைந்ததாலேயே, பிரபஞ்சம் சிருஷ்டிக்கப்பட்டு, உலக இயக்கம் நிகழ்வதாக புராணங்களில் சொல்லப்படுகிறது. அப்படி சிவசக்தி இணைந்த புண்ணிய தினமாக தைப்பூசத் திருநாள் உள்ளது. அந்த புண்ணிய தினத்தில் முதலில் உருவாகியது நீர் என்றும், அதனைத் தொடர்ந்து நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவை உருவாகின என்றும் நம்பிக்கை நிலவுகிறது. எனவே உலக இயக்கத்திற்கு ஆதாரமாகவும், அவசியமாகவும் உள்ள பஞ்சபூதங்களும் உருவான தைப்பூசத் திருநாளில், சிவபெருமானையும் போற்றி வழிபடுகிறோம்.

பூசத்தின் அதிதேவதை குரு பகவான்

தேவர்களின் குருவாக விளங்குபவர் பிரகஸ்பதி என்னும் குரு பகவான். இவர், பூச நட்சத்திரத்தின் அதி தேவதையாக உள்ளார். இவர் அறிவின் தேவதையாகவும் போற்றப்படுகிறார். பதஞ்சலி, வியாக்கிரபாதர் ஆகிய முனிவர்கள் இருவருக்கும், நடராசப்பெருமான் தனது தாண்டவத்தை காட்டியருளியதும், தைப்பூச நாளில்தான். அத்துடன் வாயு பகவானும், வர்ண பகவானும், அக்கினி பகவானும் ஈசனின் அதீத சக்தியை உணர்ந்த நாளாகவும் இந்நாள் போற்றப்படுகிறது. அதாவது இயற்கையை கட்டுப்படுத்தும் சக்தியாக இறைவனே இருக்கிறான் என்பது உணர்த்தப்பட்ட புண்ணியநாள், தைப்பூச நன்னாளாகும்.

பெருமை மிகு பூசம்

இதனை ‘புஷ்யம்’ என்றும் குறிப்பிடுவார்கள். சமஸ்கிருதத்தில் ‘புஷ்டி’ என்றால் ‘பலம்’ என்று பொருள். அதிலிருந்து மருவியது ‘புஷ்யம்.’ மூன்று நட்சத்திரங்கள் புடலங்காய் போலத் தோற்றமளிக்கும். அதுவே பூச நட்சத்திரம். 27 நட்சத்திரங்களில், சிறப்பு வாய்ந்த சில நட்சத்திரங்களில் பூசமும் ஒன்று. பூசம் என்பது ஜோதிட ரீதியாக, 27 நட்சத்திரங்களில் எட்டாவது நட்சத்திரம் ஆகும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அறிவாளி, மென்பேச்சு மற்றும் ஆன்மிகவாதிகளாக இருப்பார்கள். அறிவுசார்ந்த வேலைகளில் மிகுந்த ஈடுபாடு காட்டுவார்கள் என்பது ஜோதிட நம்பிக்கை. ‘நட்சத்திர சிந்தாமணி’ எனும் நூல், ‘பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நல்ல மதிப்பு உடையவர்களாகவும், வழக்கறிந்து வழக்காட வல்லவர்களாகவும், குற்றமற்ற ரத்தினங்களும் ஆபரணங்களும் அணிந்து மகிழ்பவர்களாகவும் விளங்குவார்கள்’ என்கிறது. ராமாயணத்தில் வரும் பரதன் பூச நட்சத்திரத்தில் பிறந்தான்.

- பொ.பாலாஜிகணேஷ்

Next Story