காமாட்சி அம்மன்

அம்மனுக்கு 51 சக்தி பீடங்கள் உண்டு. இந்த சக்தி பீடங்களில், காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலயமும் ஒன்று.
காமாட்சி அம்மன் ஆலயத்தில் பிலாத்துவார காமாட்சி, ஆதி காமாட்சி, மூலஸ்தானத்து காமாட்சி, கங்கரர் அமைத்த சக்கர காமாட்சி, பங்காரு காமாட்சி, தபசு காமாட்சி போன்ற வடிவங்களில் அம்மன் அருள்பாலிக்கிறாள். பங்காரு (தங்கம்) காமாட்சியின் காமகோடி விமானம், தங்க முலாம் பூசப்பட்டு இருக்கிறது.
திருமண வரம் தரும் வேண்டுதல்
சமயபுரம் மாரியம்மன், மாசி மாதத்தில் தன்னுடைய அடியவர்களின் நலனுக்காக 28 நாட்கள் பட்டினி விரதம் மேற்கொள்வாள். தாலி வரம் வேண்டும் பெண்கள், சமயபுரத்து அம்மனுக்கு தங்கள் தாலியை நேர்த்திக்கடனாக செலுத்துவர்.
அதேபோல் திருச்சி மணப்பாறை மாரியம்மன் கோவிலில் திருமணத் தடை அகல, மஞ்சள் கயிறு வாங்கி அம்மன் சன்னிதியின் பின்புறம் உள்ள வேப்ப மரத்தில் கட்டுவார்கள். இவ்வாறு கட்டி வேண்டிக்கொண்டால், விரைவில் திருமண வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
உருமாறும் ஜெகந்நாதா்
பூரியில் உள்ள ஜெகந்நாதர் ஆலயம் மிகவும் பிரசித்திப் பெற்ற திருத்தலம் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த ஆலயத்தில் உள்ள மூலவரை, ரத்னவீதி உற்சவத்தின்போது நாராயணனாகவும், ஸ்நானவேதி உற்சவத்தின்போது விநாயகராகவும், ஒன்பது ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் நவகுலவரா உற்சவத்தின்போது சிவபெருமானாகவும் பாவித்து வழிபடுகிறார்கள். அதேபோல் சயனத் திருவிழாவின் போது பார்வதியாகவும், ரத உற்சவத்தின்போது சூரிய நாராயணனாகவும் கருதி வழிபாடு செய்கிறார்கள்.
தொகுப்பு:- ஆர்.கே.லிங்கேசன்
Related Tags :
Next Story