பழனி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா: சண்முகர், வள்ளி- தெய்வானை திருக்கல்யாணம்


பழனி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா: சண்முகர், வள்ளி- தெய்வானை திருக்கல்யாணம்
x
தினத்தந்தி 22 Nov 2020 2:53 AM GMT (Updated: 22 Nov 2020 2:53 AM GMT)

பழனி முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழாவின் நிறைவு நாளான நேற்று சண்முகர், வள்ளி-தெய்வானை திருக்கல்யாண வைபவம் நடந்தது.

பழனி, 

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த மாதம் 15-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழாவின் 6-ம் நாளான நேற்று முன்தினம் மாலையில் சூரசம்ஹாரம் நடைபெற்றது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான நேற்று காலை மலைக்கோவிலில் சண்முகர், வள்ளி-தெய்வானை திருக்கல்யாண வைபவம் நடந்தது.

முன்னதாக காலை 8 மணிக்கு மேல் மலைக்கோவிலில் உள்ள மகா மண்டபத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மணமேடையில் சண்முகர், வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளினார். அதைத்தொடர்ந்து திருமண சடங்குகள் தொடங்கின. மணமேடைக்கு முன்பு பிரதான கலசம் வைக்கப்பட்டு சிறப்பு யாகம் நடைபெற்றது.

பின்னர் சண்முகர், வள்ளி-தெய்வானைக்கு 16 வகை அபிஷேகங்கள், தீபாராதனை, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து காலை 9.30 மணிக்கு மேல் ரிஷப லக்னத்தில் சண்முகர், வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது. பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், திருமாங்கல்யத்தை தெய்வானை மற்றும் வள்ளிக்கு அணிவித்து திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தார்.

கோவில் குருக்கள் செல்வசுப்பிரமணியம், சுந்தரமூர்த்திசிவம் மற்றும் குருக்கள்கள் திருமண மந்திரங்களை ஓதினர். முன்னதாக கந்தசஷ்டி திருவிழாவின் சிறப்பை விளக்கி கூறப்பட்டது. தொடர்ந்து சண்முகர், வள்ளி- தெய்வானைக்கு மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து சண்முகர், வள்ளி-தெய்வானைக்கு 16 வகை தீபாராதனை நடைபெற்றது. பின்னர் கோவில் ஓதுவார், குருக்கள் பாடல்கள் பாட மகா தீபாராதனை காட்டப்பட்டது. முடிவில் பிரசாதம் வழங்கப்பட்டது.

தொடர்ந்து சப்பரத்தில் சண்முகர், வள்ளி-தெய்வானையுடன் மலைக்கோவில் பிரகாரத்தை வலம் வந்து சண்முகருக்கான சன்னதியில் எழுந்தருளினார். அங்கு தீபாராதனை நடைபெற்றது. திருக்கல்யாண நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் கிராந்திகுமார்படி, உதவி ஆணையர் செந்தில்குமார், செயற்பொறியாளர் சக்திவேல் மற்றும் கோவில் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் இரவு 7 மணிக்கு மேல் ரிஷப லக்னத்தில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது. தொடர்ந்து இரவு 9 மணிக்கு மேல் முத்துக்குமாரசுவாமி தங்கக்குதிரை வாகனத்திலும், வள்ளி-தெய்வானை சப்பரத்திலும் மணக்கோலத்தில் எழுந்தருளி வீதிஉலா செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Next Story