கோபி பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்;திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


கோபி பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்;திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x

கோபி பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஈரோடு

கடத்தூர்

கோபி பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கும்பாபிஷேகம்

கோபி அருகே பிரசித்தி பெற்ற பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில், சவுந்தரநாயகி உடனமர் அமரபணீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில்களின் புனரமைப்பு பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தன. புனரமைப்பு பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து கடந்த 21-ந்தேதி கும்பாபிஷேக விழா விநாயகர் பூஜையுடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து தினமும் பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

முக்கிய நிகழ்ச்சியான மகா கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. காலை 8 மணிக்கு கலசங்கள் புறப்பாடு உள்பட பல்வேறு பூைஜகள் நடந்தன. காலை 10 மணிக்கு கோபுர கலசங்களுக்கு சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர். அப்போது கூடியிருந்த பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பினார்கள். தொடர்ந்து பக்தர்கள் மீது டிரோன் மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டது.

அன்னதானம்

விழாவையொட்டி கொண்டத்து காளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோபி, பாரியூர், நாயக்கன்காடு, வெள்ளாளபாளையம், கூகலூர், அளுக்குளி, குருமந்தூர், சவுண்டப்பூர், வலையபாளையம், காசிபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து மதியம் 1 மணிக்கு கோமாதா பூஜையும், தசதானம், தசதரிசனம், மகா அபிஷேகம், மகா அலங்கார பூஜைகள் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு அம்மன் மற்றும் பஞ்சமூர்த்தி புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்த கும்பாபிஷேக விழாவில் அமைச்சர் சு.முத்துசாமி, முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள், கோவில் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story