மங்கலம் தரும் மருதமலை


மங்கலம் தரும் மருதமலை
x
தினத்தந்தி 9 May 2023 3:30 PM GMT (Updated: 9 May 2023 3:31 PM GMT)

முருகப்பெருமானின் ஆறுபடைவீடுகளில் மருதமலைக்கு இடமில்லை என்றாலும், முருகன் மீது பற்று கொண்ட பலரும், மருதமலை முருகன் ஆலயத்தை, 7-வது படைவீடாக வைத்து போற்றுவார்கள்.

837 படிகளுடன் அமைந்த மலைக் கோவில் இது. இங்கு வரதராஜப் பெருமாளுக்கு தனிச் சன்னிதி இருக்கிறது. பாம்பாட்டிச் சித்தர் சன்னிதி செல்லும் வழியில் சப்த கன்னியர் சன்னிதி உள்ளது. ஆடிப் பெருக்கின் போது இங்கு விசேஷ வழிபாடு நடக்கிறது. பாம்பாட்டிச் சித்தர் சன்னிதியில் உள்ள பாறையில் நாக வடிவம் இருக்கிறது. இந்த நாகத்தின் வடிவிலேயே பாம்பாட்டிச் சித்தருக்கு முருகன் காட்சி தந்ததாகச் சொல்லப்படுகிறது. மருத மலையில் முருகனின் அருள்பெற்ற பாம்பாட்டிச் சித்தர், முருகனுக்கு புதிய சிலை வடித்தார். இந்த சிலையே மூலஸ்தானத்தில் இருக்கிறது.

இத்தலத்தில் உள்ள விநாயகர் மற்றும் முருகனை வேண்டி, மரத்தில் மாங்கல்யக் கயிறு மற்றும் தொட்டில் கட்டி வேண்டிக் கொண்டால் திருமணம் மற்றும் புத்திர தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. வைகாசி விசாகத்தன்று மருதமலை முருகனுக்கு 108 பால் குட அபிஷேகம் நடைபெறும்.

மருதமலையில் தைப்பூசத்தை ஒட்டி 10 நாட்கள் பிரம்மோற்சவம் நடக்கிறது. தைப் பூசத்தன்று காலையில் திருக்கல்யாணம், மாலையில் தேர்த் திருவிழா நடக்கும். அன்று சுவாமி யானை வாகனத்தில் எழுந்தருள்வார். மருத மலையில் தினமும் மாலையில் தங்க ரதத்தில் முருகப் பெருமான் வலம் வருகிறார். மருதமலையில் விநாயகர், முருகன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்கள்.


Next Story