சீர்காழியில் மூன்று மூலவர்கள்


சீர்காழியில் மூன்று மூலவர்கள்
x

சீ ர்காழியில் உள்ள சட்டநாதர் ஆலயம் பல்வேறு சிறப்புகளைக் கொண்டது. பிரம்மதேவன் வழிபட்டதால் பிரம்மபுரம், பரம்பொருள் இறையனால் மூங்கில் வடிவத்தில் தோன்றி வனமானதால் வேணுபுரம், பிரளய காலத்தில் உலகம் முழுமையும் வெள்ளத்துக்குள் மூழ்க, பார்வதி தேவியை தன் அருகில் இருத்திக் கொண்டு சுத்த மாயை என்பதையே ஒரு தோணியாக்கி, சிவபெருமான் தங்கியிருந்த இடம் என்பதால் தோணிபுரம் என்று பல்வேறு பெயர்களில் இந்த ஊர் அழைக்கப்படுகிறது.

இந்த ஆலயத்தின் மூன்று மூலவர்கள் அருள்பாலிக்கிறார்கள். பிரம்மதேவன் வழிபாடு செய்த பிரம்மபுரீஸ்வரர் சிவலிங்க வடிவில் இருக்கிறார். திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் கொடுத்த தோணியப்பர் குரு வடிவமாக அருள்கிறார். சட்டநாதர் சங்கம வடிவில் அருள் பாலிக்கிறார்.

தோணியப்பர் சன்னிதிக்கு அருகில் உள்ள பக்கவாட்டு படிகளில் ஏறிச்சென்றால் சட்டநாதரை தரிசிக்கலாம். எலும்புகள் கொண்டு முறுக்கிய தண்டையை ஏந்தியிருக்கும் இவரை, பயபக்தியோடு தரிசிக்க வேண்டும் என்பது ஐதீகம். நின்ற திருக்கோலத்தில் காட்சி தரும் சட்டநாதரின் பெயரில்தான், இந்த ஆலய தேவஸ்தானம் இயங்குகிறது. இவருக்கு வெள்ளிக்கிழமை தோறும் இரவு 10 மணிக்கு மேல் புனுகு சட்டம் சாத்தி வழிபடுகிறார்கள்.


Next Story