பொங்கலோ... பொங்கல்!


பொங்கலோ... பொங்கல்!
x
தினத்தந்தி 13 Jan 2022 7:54 PM GMT (Updated: 13 Jan 2022 7:54 PM GMT)

தமிழர்கள் என்றுமே நன்றி உணர்வு மிக்கவர்கள். எந்நாளும் செய்நன்றியை மறக்காத அருங்குணம் கொண்டவர்கள்.

தமிழர்கள் என்றுமே நன்றி உணர்வு மிக்கவர்கள். எந்நாளும் செய்நன்றியை மறக்காத அருங்குணம் கொண்டவர்கள். அது மனிதர்கள் என்றாலும் சரி, கால்நடையாக இருந்தாலும் சரி, இயற்கை என்றாலும் சரி, நன்றி தெரிவிக்கும் ஒப்பற்ற உயர்ந்த பண்பாடு கொண்டவர்கள் என்பதற்கு எடுத்துக்காட்டுதான் பொங்கல் பண்டிகை. அதனால்தான் மறைந்த கலைஞர் கருணாநிதி, “தமிழ் சமுதாயத்தின் தலைசிறந்த பண்பாட்டினை உலகுக்கு உணர்த்திடும் மகத்தான திருவிழா பொங்கல் விழா” என்றார். எல்லாத்தொழிலுக்கும் மேலான தொழில் வேளாண்மைத்தொழில். இந்த தொழிலை செய்யும் விவசாயி தன் உழைப்பின் மூலம், தான் சிந்தும் வியர்வை மூலம், சேற்றில் கால் பதிப்பதன் மூலம் உலகுக்கே உணவளிக்கிறான். அவனுக்கு துணையாக நிற்பது சூரியனும், கால்நடைகளும் என்றால் மிகையாகாது.

அந்தவகையில்தான் நிலத்தை உழுது, நாற்று நட்டு, நீர் பாய்ச்சி, உரமிட்டு கண்ணுங்கருத்துமாக பராமரித்து, செங்கதிர் விளைந்தவுடன் அதை அறுவடை செய்கிறான். இயற்கை அவனுக்கு துணைக்கரம் நீட்டினால்தான் நல்ல மகசூலை காணமுடியும். அந்த மகசூலினால் மனம் மகிழும் விவசாயிகள் மட்டுமல்லாமல், அவன் விளைவித்த நெல் உள்ளிட்ட உணவுப்பொருட்களை உண்டு மகிழ்ந்த தமிழ்க்குலம் முழுவதுமே களிப்புடன் கொண்டாடும்நாள் பொங்கல். இந்த பண்டிகையை கொண்டாட சாதி, மதம் தடையில்லை. ஏனெனில், இது தமிழ் இனத்தின் திருநாள். தமிழராய் பிறந்த அனைவருக்குமே உரித்தான பண்டிகை. பொங்கல் திருநாள் 3 நாட்கள் மகிழ்வுடன் கொண்டாடப்படுகிறது. பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற முதுமொழிக்கேற்ப, அடுத்தநாள் புத்தாடை அணியப்போகும் முன்பு, வீட்டில் உள்ள பயனற்ற பழைய பொருட்களை கழித்த நாள்தான் போகி பண்டிகை.

2-ம் நாளான இன்றுதான் பொங்கல் பண்டிகை. அதிகாலையில் வீட்டின் முன்பு 3 கற்களால் அடுப்பு அமைத்து, புது நெல்லை கொண்டு ஆக்கிய புத்தரிசியை புது பானையில் இட்டு, வெல்லம் சங்கமிக்க, பொங்கல் பொங்கிவர, புத்தாடை அணிந்து சுற்றி நிற்கும் குடும்பத்தினரும், சுற்றத்தினரும் பொங்கலோ... பொங்கல்... என்று குலவையிட்டு, பானையை இறக்கி, நெய்யில் வறுத்தெடுத்த முந்திரி பருப்பு, உலர் திராட்சையை சேர்த்து கலக்கி உண்டு மகிழும் மகிழ்ச்சிக்கு ஈடு இணையே இல்லை. பொங்கல் நன்கு பொங்கி வந்தால் அந்த ஆண்டு முழுவதும் மகிழ்ச்சி பொங்கி வழியும் என்பது தமிழர்களின் நம்பிக்கை. பொங்கல் பண்டிகையின் மற்றொரு சிறப்பு தித்திக்கும் கரும்பு. சர்க்கரை பொங்கல் இனிப்பு, கரும்பு இனிப்பு என்று அந்த ஆண்டு முழுவதும் இனிப்பாகவே கழியும் என்பதை கட்டியம் கூறும் நாள்தான் பொங்கல்.

அடுத்தநாள் மாட்டுப்பொங்கல். ஆண்டெல்லாம் விவசாயத்துக்கு உறுதுணையாக இருந்து விவசாயியின் உயர்வுக்கு, மகிழ்ச்சிக்கு காரணமாக இருக்கும் மாடுகளை குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வர்ணமிட்டு, புதுக்கயிறு கட்டி, நெற்றியில் திலகமிட்டு, பொங்கலிட்டு அதை மாடுகளுக்கும் வழங்கும் நாள்தான் மாட்டு பொங்கல். இப்படி 3 நாட்கள் கொண்டாடும் பொங்கல் பண்டிகைக்கு இந்த ஆண்டு மற்றொரு சிறப்பு என்னவென்றால், முருகப்பெருமானின் பிறந்தநாளான தைப்பூசம் 5-வது நாளில் வருகிறது. தமிழக அரசே பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதால், எல்லோருடைய வீட்டிலும் பொங்கல் நிச்சயமாக பொங்கும்.

இந்த மகிழ்ச்சிகரமான பண்டிகை, கொரோனா பரவல் காலத்தில் வருவதால், மக்களும் மிகவும் கவனத்துடன் கொண்டாட வேண்டும். காணும் பொங்கல் அன்று சுற்றுலாத்தலங்களுக்கு செல்லவோ, பொங்கலையொட்டி வழிபாட்டுத்தலங்களுக்கு செல்லவோ தடை விதிக்கப்பட்டுள்ளதால், இல்லத்தில் குடும்பத்தினரோடு அதிக நேரம் ஒன்றாக செலவழிக்க வகை செய்துள்ளது. இந்த பொங்கல் நன்னாளில் தமிழ்நாட்டில் அனைவரும் எடுக்க வேண்டிய சபதம் தடுப்பூசியை முழுமையாக போடுவோம், முககவசம் அணிவோம், சமூக இடைவெளியை பின்பற்றுவோம், கொரோனாவை விரட்டி அடிப்போம். அடுத்த பொங்கலை கொரோனா இல்லாத பொங்கலாக கொண்டாடுவோம்!.

Next Story