வீட்டுக்கடன் பெறுபவர்களுக்கான நிதி ஆலோசனைகள்


வீட்டுக்கடன் பெறுபவர்களுக்கான நிதி   ஆலோசனைகள்
x
தினத்தந்தி 2 March 2018 11:30 PM GMT (Updated: 2 March 2018 10:27 AM GMT)

கடந்த காலங்களில் வங்கிகள் அளிக்கும் வீட்டு கடன் வட்டி விகிதம் 10 முதல் 11 சதவிகிதமாக இருந்து வந்த நிலையில், சென்ற இரண்டு ஆண்டுகளில் அந்த விகிதம் தொடர்ந்து குறைக்கப்பட்டு வந்தது.

வீட்டு கடனுக்கான வட்டி கிட்டத்தட்ட 8.35 சதவிகிதமாக  தற்போது கணக்கிடப்படுகிறது.  

சரியான நேரம்

குறைந்த வட்டி விகிதத்தில் வீட்டு கடன் கிடைப்பதால், குறைந்த அளவு பட்ஜெட்டாக இருந்தாலும் சொந்த வீடு வாங்க சரியான காலகட்டமாக இன்றைய சூழல் அமைந்துள்ளதாக நிதி ஆலோசகர்கள் குறிப்பிடுகிறார்கள். மேலும், ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம்
(RERA)
அமைக்கப்பட்டு இருப்பதால் கடன்களுக்கு கூடுதல் வரிச்சலுகைகள் கிடைப்பது மற்றும் பிரதமரின் ‘அனைவருக்கும் வீடு’ திட்டம் மூலம் குறிப்பிட்ட அளவு மானியம் தரப்படுவதும் சொந்த வீடு வாங்குபவர்களுக்கு சாதகமான வி‌ஷயங்களாகும்.

தனியார் நிறுவனங்கள்


பொதுவாக, வீட்டுக் கடன் வாங்க விரும்புபவர்கள் முதலில் பொதுத்துறை வங்கிகளில் விண்ணப்பம் செய்வது வழக்கம். சொந்த வீடு வாங்கலாம் என்று முடிவெடுக்கும் தருணத்தில், கடனுக்காக பொதுத்துறை வங்கியை அணுகுவதா..? அல்லது மற்ற வீட்டு வசதி நிதி நிறுவனங்களை அணுகுவதா..? என்ற வி‌ஷயத்தில் நன்றாக ஆலோசனை செய்து செயல்படவேண்டும்.

திருப்பி செலுத்தும் காலம்


வீட்டு கடன் பெறுவதில் உள்ள ஒரு வசதி இதர வங்கி கடன்களைப்போல் இல்லாமல் கூடுதல் கால அவகாசம் மூலம் கடனை திருப்பிச் செலுத்த இயலும். அதாவது 5 ஆண்டுகளில் இருந்து 25 ஆண்டுகள் வரையிலான காலகட்டத்தில் திருப்பி செலுத்தும் வசதிகள் இருக்கின்றன.

மாத வருமானம்

வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிப்பவர் மாதச்சம்பளம் பெறுபவராக இருந்தால் அவர் நிரந்தர பணியில் இருக்க வேண்டும். கணவன் மற்றும் மனைவி என இருவரும் பணியில் இருந்து, வீட்டுக்கடனுக்காக இணைந்து விண்ணப்பிக்கும் பட்சத்தில் இருவரது நிகர சம்பளத்தையும் கணக்கில் கொண்டு வங்கிகள் கடன் தொகையை நிர்ணயம் செய்கின்றன. அதாவது, ‘நெட் மன்த்லி இன்கம்’ கணக்கில் கொள்ளப்படும்.

பல்வேறு விபரங்கள்

மேலும், வங்கி ஸ்டேட்மென்ட், சம்பளச் சான்றிதழ், கடந்த 3 வருடங்களாக வருமான வரி தாக்கல் செய்யப்பட்ட விவரங்கள் ஆகியவற்றை வங்கியில் தரவேண்டும். மேலும், கடனுக்காக விண்ணப்பிப்பவர் வயது, சொத்து, வீடு கட்டப்போகும் அல்லது வாங்கப்போகும் இடத்தின் மதிப்பு, கடனை திருப்பிச் செலுத்தும் திறன் ஆகியனவும் கவனத்தில் கொள்ளப்படும்.

பணி ஓய்வு

பணியில் இருப்பவர்கள் கடன் பெறும் பட்சத்தில் பணி ஓய்வு பெறும் காலத்திற்குள்ளாக இ.எம்.ஐ முடிந்து விடவேண்டும் என்பது முறை. ஒரு சிலர் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும் மாதாந்திர தவணைகளை செலுத்துவதற்கான வருமானம் இருந்தால் அதிகபட்சமாக 70 வயது வரையில் கடனை திருப்பி செலுத்த அவகாசம் அளிக்கப்படலாம். அவரது வாரிசுகள் அளிக்கும் கடனுக்கான எழுத்துபூர்வ உத்திரவாதம் மற்றும் ‘கோ பாலோயர்’ எனப்படும் கடன்தாரருக்கு இணையான பொறுப்பை ஏற்கும் நபர் அளிக்கும் உத்திரவாதம் ஆகியவற்றின்படியும் கால அவகாசம் தரப்படும்.

வங்கி கடன் விகிதம்

கடன் விகித சராசரி செலவை (Marginal Cost of Lending Rate) கடன் கொடுப்பதற்கான விகிதமாக கொண்டு வங்கிகளால் வட்டி விகிதம் மாற்றியமைக்கப்படுகிறது. இந்த நடைமுறை, 2017 ஏப்ரல் முதல் கடைப்பிடிக்கப்படுகிறது. மேற்கண்ட அடிப்படையிலேயே மாறுபடும் (
floating
) விகிதத்தில் கடனுக்கான வட்டியை நிர்ணயம் செய்தும் வங்கிகள் கடன் தருகின்றன

தனியார் நிறுவனங்கள்

வீட்டு வசதி நிறுவனங்களும், வங்கிசாரா நிதி நிறுவனங்களும் பிரதானக் கடன் விகித (Prime Lending Rate) அடிப்படையில் கடன் அளிக்கின்றன. இந்த முறையில் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் குறையும் சமயங்களில் பலன் கிடைப்பதில்லை. நிதி நிறுவனங்கள் பிரதான கடன் விகிதத்தை அவர்களே நிர்ணயித்துக்கொள்ள இயலுவதோடு, கடனுக்கான வட்டியையும் தேவைக்கு ஏற்ப மாற்றிக்கொள்ள இயலும்.

Next Story