சிக்கன பட்ஜெட்டில் கிடைக்கும் மாற்று மணல்


சிக்கன பட்ஜெட்டில் கிடைக்கும் மாற்று மணல்
x
தினத்தந்தி 13 April 2018 11:45 PM GMT (Updated: 13 April 2018 10:37 AM GMT)

ஆற்று மணலுக்கு மாற்றாக மாற்று மணல் தேவை என்ற நிலையில் பல முயற்சிகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், ஆற்று மணலை விடவும் பல மடங்கு சிக்கன செலவில் கிடைக்கும் புதிய மணல் ‘பெரோ சேண்ட்’ (Ferro Sand) அல்லது காப்பர் ஸ்லாக் (Copper Slag) எனப்படுகிறது.

காப்பர் தயாரிப்பு தொழிற்சாலையிலிருந்து தினமும் பல ஆயிரம் டன் காப்பர் பார்கள் தயாரிக்கப்படும்போது, அதன் துணைப்பொருளாக கிடைக்கும் உலோக மணல் ‘பெரோ சேண்ட்’ ஆகும். பல்வேறு பயன்பாடுகளை கொண்ட அந்த மணலை கட்டுமான பணிகளுக்கும் பயன்படுத்த இயலும் என்று அறியப்பட்டுள்ளது.

மணலுடன் கலக்கலாம்

பெரோ சாண்ட் 25 சதவிகிதம் மணலுடன் கலந்து சுவர் கட்டுமானத்திற்கும், கான்கிரீட் அமைக்க மணலுடன் 50 சதவிகிதம் கலந்தும், சாலைகள் அமைக்க மணலுடன் 20 சதவிகிதம் கலந்தும், பேவர் கற்கள் அதாவது நடைபாதை கற்கள் தயாரிப்பில் 25 சதவிகிதம் மணலுடன் கலந்தும் பயன்படுத்தலாம் என்றும் அறியப்பட்டுள்ளது. அங்கீகாரம் பெற்ற அரசு நிறுவனங்களால் நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வு முடிவுகள் மேற்கண்டவற்றை நிரூபணம் செய்துள்ளன. மேலும், தற்போது  மிஷிமி தரச்சான்றிதழ் பெறுவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

செலவுகள் கட்டுப்படும்

குறிப்பாக, ஒரு கட்டுமான அமைப்புக்கு அதிகப்படியான ஆற்று மணல் பயன்படுவது ‘பேஸ் மட்டம்’ எனப்படும் தரைமட்டம் அமைக்கும் பணிகளின்போதுதான். இனி வரும் காலங்களில் ஆற்று மணலை அந்த பணிகளுக்கு பயன்படுத்தாமல், சிக்கன விலையில் கிடைக்கும் ‘பெரோ சேண்ட்’ பயன்படுத்தி ‘பேஸ் மட்டம்’ நிரப்பும் பணிகளை செய்து முடிக்கலாம். இதனால், கட்டுநர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கட்டுமான செலவு ஓரளவு கட்டுக்குள் வரும் என்பது கவனிக்கத்தக்கது. ஒரு டன் பெரோ சேண்ட் அடிப்படை விலையானது, ஆற்று மணலுடன் ஒப்பிடுகையில் சராசரியாக பல மடங்கு குறைவானது. அதே சமயம் ஆற்று மணலை விட கடினமாக இருப்பதோடு, கட்டுமானத்திற்கு போதிய உறுதியை தரக்கூடியதாகவும் சொல்லப்படுகிறது.

மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்

அடர்த்தியான நிறம் கொண்ட பெரோ சேண்ட் நிலத்தடி நீரை மாசு படுத்தும் நச்சுத்தன்மையற்றது எனவும், சிமெண்டு உற்பத்தியில் ஒரு மூலப்பொருளாகவும் பயன்படுத்தலாம் எனவும், நிலச் சீரமைப்பு, சாலை மற்றும் கட்டிடங்கள் கட்டுவதற்கு ஏற்றது என்றும் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரை செய்திருக்கிறது. குறைந்த பட்சமாக ஒரு லாரி முதல் பல ஆயிரம் டன்கள் வரை ஒரே நபர் பெரோ சேண்ட் கொள்முதல் செய்ய முடியும் என்பதால் தனி நபர் முதல் பெரிய அளவிலான புராஜெக்டுகளை செய்யும் கட்டுனர்கள் வரை அனைவரும் சுலபமாக பெற்று பயன்படுத்த இயலும்.

Next Story