கட்டிட பணிகளுக்கு ‘சிமெண்டு கிரேடு’ அவசியம்


கட்டிட பணிகளுக்கு ‘சிமெண்டு கிரேடு’ அவசியம்
x
தினத்தந்தி 13 May 2018 5:09 AM GMT (Updated: 13 May 2018 5:09 AM GMT)

சிமெண்டு, இரும்பு கம்பிகள், ஜல்லி, மணல், செங்கல் உள்ளிட்ட மூலப்பொருட்கள் எந்த அளவிற்கு தரமாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு பல ஆண்டுகள் கட்டுமானங்கள் நிலைத்து நிற்கின்றன.

பொதுவாக, கட்டிட அமைப்புகளுக்கு உறுதியையும், தரத்தையும் தருவது சிமெண்டு என்பது மிகையல்ல. குறிப்பிட்ட பணிகளுக்கு குறிப்பிட்ட கிரேடு கொண்ட சிமெண்டு பயன்பாடுதான் நல்ல விளைவுகளை தரும் என்று கட்டுமான வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கிரேடு தேர்வு

எப்படிப்பட்ட கட்டிடத்துக்கு எந்த விதமான சிமெண்டு வகை அவசியம் என்பதில் சரியான முடிவு அவசியம். ஏனென்றால், சிமெண்டு வகைகளில் 10-க்கும் மேற்பட்டவை இருக்கின்றன. சிமெண்டு வகையின் தரக் குறியீட்டை அடிப்படையாக வைத்துத்தான் அதன் உறுதி, இறுகக்கூடிய தன்மை மற்றும் நீடித்து உழைக்கும் தன்மை போன்ற அம்சங்கள் கணக்கில் கொள்ளப்படுகின்றன.

மூன்று கிரேடுகள்

சிமெண்டு வகைகள் அவற்றின் தன்மை அடிப்படையில் 33, 43, 53 ஆகிய கிரேடு கொண்டவையாக வகைப்படுத்தப்படுகின்றன. இவற்றில் 33 கிரேடு போர்ட்லேண்ட் சிமெண்டு என்பது, சிறிய அளவிலான பணிகளுக்கும், சாதாரண பூச்சு வேலைகளுக்கும் உகந்ததாகும். வீடுகள் கட்டமைப்புக்கு 43 கிரேடு போதுமானது எனவும், மேம்பாலங்கள் போன்ற பெரிய அளவிலான பொதுப் பயன்பாட்டு கட்டுமானங்களுக்கு 53 கிரேடு வகை உகந்தது என்றும் வல்லுனர்களால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மாற்றத்தால் பாதிப்பு

மேற்கண்ட விபரங்கள் பல ஆண்டுகள் கட்டுமானத் துறையில் இருப்பவர்கள் அறிந்ததாக இருந்தாலும், பணியாளர்களில் பலரும் சிமெண்டின் வகை அறிந்து பணிகளில் பயன்படுத்துவதில் கவனம் செலுத்துவதில்லை என்று அறியப்பட்டுள்ளது. குறிப்பாக, அஸ்திவாரம் அமைப்பது, தூண்கள் அமைப்பது போன்ற பணிகளுக்கு, 53 கிரேடு சிமெண்டும், செங்கல் சுவர் கட்டுமானம் மற்றும் சுவர் பூச்சு வேலைகளுக்கு 43 கிரேடு சிமெண்டும் பயன்படுத்தப்படுவது வழக்கம். பொதுவாக, இரண்டு வெவ்வேறு கிரேடு கொண்ட சிமெண்டு வகைகளை பயன்படுத்தும் சமயத்தில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

கவனம் அவசியம்

அதாவது, கிரேடு மாற்றப்பட்டோ அல்லது ஒன்றுடன் மற்றொன்று கலக்கப்பட்டோ சிமெண்டு பயன்படுத்தும்போது அது கட்டுமானத்தின் உறுதியை பாதிக்கும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில், சிமெண்டு பயன்படுத்துவதில், ஒரே கிரேடு, வகை ஆகிய விஷயங்களில் கவனமாக செயல்பட வேண்டும்.

விரிசல்கள் வரலாம்

சில சமயங்களில் பணியாளர்கள் கவனக்குறைவால், அஸ்திவார பணிகளுக்காக வாங்கப்பட்ட சிமெண்டு, பூச்சு வேலைக்கான கலவை தயாரிப்பதற்கும், பூச்சு வேலைக்கு வாங்கப்பட்ட சிமெண்டு அஸ்திவார பணிகளுக்கும் பயன்படுத்தும் நிலை ஏற்படலாம். அவற்றை கலந்து பயன்படுத்தும்போது சிறிய அளவில் இருக்கும் பட்சத்தில் பாதிப்புகள் அவ்வளவாக எற்படுவதில்லை. ஆனால், ஒரு மூட்டை, இரண்டு மூட்டை என்ற அளவுக்கு கலந்து பயன்படுத்தும் நிலையில் கட்டிடத்தில் விரிசல்கள் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படலாம் என்று வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Next Story