வீடுகள் கட்டுமான பணியில் வரிசை முறை


வீடுகள் கட்டுமான பணியில் வரிசை முறை
x
தினத்தந்தி 9 Jun 2018 7:26 AM GMT (Updated: 9 Jun 2018 7:26 AM GMT)

வீடுகள் மற்றும் குடியிருப்புகள் ஆகியவற்றின் கட்டுமான பணிகள் ஆரம்பம் முதல் கடைசி வரை பல்வேறு படிநிலைகளை கொண்டதாக இருக்கின்றன.

அடிப்படை தேவையான நிலம் அல்லது மனை, தேவையான பட்ஜெட், கட்டுமானத்திற்கான திட்ட வரைபடம் ஆகியவை அவற்றில் பிரதானமாக உள்ளன. அதன் அடிப்படையில், வாஸ்து சாஸ்திர விதிகளின் அடிப்படையில் வீடு கட்டுவதில் உள்ள வரிசை முறைகள் பற்றி வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். அவற்றில் எந்த பணிகளை முன்னதாக செய்வது..? எதை பின்னர் செய்வது..? என்ற கேள்விகளுக்கு வாஸ்து சாஸ்திர ரீதியாக உள்ள வரிசை முறை பற்றிய தகவல்களை இங்கே காணலாம்.

1) வீடு அல்லது அடுக்கு மாடிக்கான மனை வாங்குவது அல்லது முன்னதாக வாங்கப்பட்ட மனையை பணிகளுக்கு ஏற்ப சமன் செய்து கொள்வது.

2) கட்டிட அமைப்பின் வடிவம், பரப்பளவு, மாடிகள், அதன் அறைகள், சுற்றிலும் திறந்த வெளி அமைப்பு, கிணறு அல்லது ஆழ்குழாய் கிணறு, மேல்நிலைத் தொட்டி, வடிகால் வசதிகள் ஆகியவற்றை திட்டமிட்டு தக்க வரைபடம் தயாரித்து, ஒப்புதல் பெறுதல்.

3) தகுந்த நாளை தேர்ந்தெடுத்து, தலை வாசல் அமைப்புக்கேற்ப பூமி பூஜை செய்ய வேண்டும்.

4) மனை அல்லது இடத்தில் முன்னதாக கிணறு இருந்தால் அதை பாராமரிப்பது அல்லது தேவைக்கேற்ப ஆழ்குழாய்க் கிணறு அமைப்பது.

5) பெரிய கட்டுமான திட்டமாக இருப்பின், கட்டுமானப் பொருட்களை சேமித்து வைப்பதற்கான கொட்டகை, காவலர் தங்குவதற்கான சிறிய குடிசை ஆகியவற்றை அமைப்பது.

6) இடத்தை சீர் செய்யும் பணிகளில், மனைக்கான தென்மேற்கு மூலையை மூல மட்டத்திற்கு ஏற்ப செங்கோணமாக இருக்கும்படி சரி செய்து, மனையின் நான்கு எல்லைக் கோடுகளை பூமியில் வரைந்து கொள்வது முறை. அந்த சமயத்தில் வடகிழக்கு மூலையை சிறிய அளவிற்காவது நீளமாக இருக்கும்படி செய்து கொள்ளவேண்டும்.

7) மனையின் அமைப்புப்படியும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் மூன்று அல்லது இரண்டு பக்கங்களில் சுற்றுச் சுவர்களை அமைக்கலாம். திறந்த பகுதிகள் வழியாக பணியாளர்கள் மற்றும் வாகனங்கள் வந்து செல்லலாம்.

8) கட்டிடத்தை அமைப்பை வரைபடத்தின்படி தரையில் வரைந்து, வடகிழக்கு மூலையிலிருந்து கடைக்கால் எடுக்கத் துவங்குவது முறை.

9) அஸ்திவார பணிகளின்போது கிடைத்த மண்ணைக் கொண்டு அல்லது தேவைக்கேற்ப வாங்கப்பட்ட மண்ணைக்கொண்டு வடகிழக்கு பகுதி தவிர மற்ற பகுதிகளை மேடுபள்ளமில்லாமல் சற்றே உயரமான மட்டத்தில் இருக்கும்படி செய்து கொள்ளவேண்டும்.

10) கடைக்கால் பணிகள், அடித்தள அமைப்புகள், தரை மட்டத்திற்கு மேற்புறம் அமைய உள்ள கட்டிட வேலைகள், கூரை வேலை, மேல்நிலைத் தொட்டி ஆகியவற்றை கட்டமைத்தல். கதவு மற்றும் ஜன்னல்கள வாங்குதல் அல்லது முன்னதாக வாங்கப்பட மரங்களை கொண்டு அவற்றை செய்து முடித்தல்.

11) பணிகள் முடிக்கப்பட்ட கட்டிடப் பரப்பின் தள வேலைகள் மற்றும் உள்புறம்-வெளிப்புற பூச்சு வேலைகள் ஆகியவற்றை செய்து முடிப்பது.

12) குளியலறை, கழிவறை, கழிவு நீருக்கான தொட்டி, நீர் செல்வதற்கான குழாய்கள் பதித்தல், வடிகால் அமைப்புகள் ஏற்பாடு ஆகியவற்றை செய்வது.

13) மின்சார இணைப்பு வேலைகளை செய்து முடிப்பது.

14) வீடுகளுக்கு, விரும்பியவாறு அல்லது ‘தீம்’ அடிப்படையில் ‘பெயிண்டிங்’ செய்வது உள்ளிட்ட, இதர அழகுபடுத்தும் பணிகளையும் செய்வது..

15) நிறைவாக, வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூஜைகளை செய்து, புதுமனை புகுவிழாவிற்கு பின்னர் புது வீட்டில் குடியேறுதல். 

Next Story