கட்டுமான பணிகளில் பறக்கும் ‘ரோபோ’


கட்டுமான  பணிகளில் பறக்கும்  ‘ரோபோ’
x
தினத்தந்தி 11 Aug 2018 7:10 AM GMT (Updated: 11 Aug 2018 7:10 AM GMT)

தற்போது பெரும்பாலான துறைகளில் ரோபோக்களின் பயன்பாடு இருந்து வரும் நிலையில், எதிர்காலத்தில் அவற்றின் உபயோகம் இன்னும் அதிகமாகலாம் என்று வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

ற்போது பெரும்பாலான துறைகளில் ரோபோக்களின் பயன்பாடு இருந்து வரும் நிலையில், எதிர்காலத்தில் அவற்றின் உபயோகம் இன்னும் அதிகமாகலாம் என்று வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, கட்டுமான பணிகளில் அவற்றின் பயன்பாடு இன்னும் பெரிய அளவில் இல்லை என்றாலும், ஒரே மாதிரியான கட்டமைப்புகளை அதிக எண்ணிக்கையில் அமைக்கவும், ஆபத்தான உயரங்களில் அல்லது அஸ்திவார பணிகளில் உதவி செய்யவும் ரோபோக்கள் பயன்படுத்தப்படுவது குறித்த ஆய்வுகள் உலக அளவில் அதிகமாகி வருவதாக அறியப்பட்டுள்ளது. மனித உழைப்புக்கு சவாலாக உள்ள கட்டுமான பணிகளில் ‘ரோபோக்கள்’ பங்களிப்பை மறுக்க இயலாது என்று மேலை நாட்டு கட்டுமான பொறியாளர்கள் பலரும் தெரிவித்துள்ளனர்.   

புதுமையான ரோபோ

சமீபத்தில் சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ‘ஸ்விஸ் பெடரல் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி’ என்ற அமைப்பின் பொறியியல் வல்லுனர்கள் பறக்கும் கட்டுமான ‘ரோபோ’ வகைகளை உருவாக்கி இருக்கிறார்கள். அதாவது, உயரம் மற்றும் அகலம் அதிகமாக உள்ள கட்டமைப்புகளின் கட்டுமான பணிகள் நடக்கும் பகுதியில், குறிப்பிட்ட இடத்தில் அமைக்கப்படவேண்டிய சாரங்களை இணைக்கும் கயிற்றுப் பாலங்களை அமைக்க இவ்வகை பறக்கும் ரோபோ வகைகள் உதவி செய்யும்படி அவர்கள் உருவாக்கி இருக்கிறார்கள். அவ்வாறு அமைக்கப்பட்ட கயிற்றுப் பாலத்தை பயன்படுத்தி பணியாளர்கள், கட்டிடங்களுக்கு இடையில் மேற்கொள்ள வேண்டிய சிக்கலான பணிகளை செய்து முடிக்க இயலும். 

கயிற்று பாலம் அமைப்பு

பறக்கும் ‘ரோபோ’ வகைகள் கட்டுமானங்களுக்கு இடையில் எளிதாக பறந்து சென்று பல்வேறு பணிகளை செய்யும்படி அமைக்கப்பட்டிருக்கின்றன. ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள சாதாரண ரோபோக்கள் செல்ல முடியாத பகுதிகளிலும் இவை நுழைந்து பணிகளை செய்கின்றன. கிரேன்கள் உள்ளிட்ட இதர இயந்திரங்களை பயன்படுத்தி இரண்டு உயரமான கட்டிட அமைப்புகளுக்கு இடையில் சாரங்களுக்கான கயிற்று பாலங்களை அமைப்பது கடினமானது. ஆனால், பறக்கும் ரோபோ வகைகள் அந்த பணியை எளிதாக செய்வதுடன், பெரிய அளவுகொண்ட கனமான பொருள்களை நகர்த்திச் செல்லவும் உதவுகின்றன. 

தகவல் பரிமாற்றம்

கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம் உருவாக்கப்பட்ட இவ்வகை ரோபோக்களை பயன்படுத்தி கயிற்று பாலங்களை அமைக்கும்போது, ஒரே சமயத்தில் 4 ரோபோக்கள் பணியில் ஈடுபட வேண்டியதாக இருக்கும். சாரங்களில் அமைக்கப்படும் சட்டங்களில் எவ்வளவு தூரத்தில், எந்த இடங்களில் முடிச்சுக்களை போட்டு இணைக்க வேண்டும் என்ற நுட்பமான கணக்குகள் அடங்கிய மின்னணு மற்றும் இயந்திர தொழில்நுட்ப முறையில் செய்யப்பட்ட பதிவுகளின் அடிப்படையில் இந்த ரோபோ வகைகள் இயங்குகின்றன. அவற்றுக்கிடையில் அதிவேகமாக நடக்கும் தகவல் பரிமாற்றங்கள் காரணமாக கயிற்றுப்பாலங்களை அவை கச்சிதமாக கட்டி முடிக்கின்றன.

Next Story