கவனம் செலுத்த வேண்டிய கட்டிட அஸ்திவார பாதிப்பு


கவனம் செலுத்த வேண்டிய கட்டிட அஸ்திவார பாதிப்பு
x
தினத்தந்தி 18 Aug 2018 5:41 AM GMT (Updated: 18 Aug 2018 5:41 AM GMT)

வீடுகள் உள்ளிட்ட கட்டுமான அமைப்புகளின் அஸ்திவார சுவர்களை பாதிக்கும் பல்வேறு காரணிகளில் கரையான் அரிப்பும் ஒன்று என்று கட்டுமான பொறியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அதாவது, கட்டி முடிக்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேல் ஆன வீட்டு சுவர்களில், குறிப்பாக வெளிப்புறமாக அமைந்துள்ள சுவர்களின் ஜன்னல்களின் மேல் மட்டம் வரையில் கரையான் புற்று அரிப்பு ஏற்படுவதை வீட்டு உரிமையாளர்கள் கண்டறிந்துள்ளார்கள்.

தடுப்பு மருந்து

கட்டிடத்திற்கான அடித்தள அமைப்பு பணிகளின்போது சுற்றிலும் கரையான் மருந்து (றிமீ௴ Control) தெளிக்கப்பட்ட வீடுகளிலும்கூட மேற்கண்ட பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ஒரு சிலர் குறிப்பிட்டுள்ளனர்.

மேற்கண்ட இரண்டு பிரச்சினைகளும் எதனால் ஏற்படுகின்றன..? என்பது பற்றியும் அதற்கான தீர்வுகள் என்ன..? என்பது பற்றியும் கட்டுமான பொறியாளர்கள் அளித்துள்ள விளக்கம் பற்றிய தொகுப்பை இங்கே காணலாம்.

மண்ணின் தரம்


பல இடங்களில் அஸ்திவார பணிகளின்போது தோண்டி எடுக்கப்பட்ட மண்ணின் தரம் பற்றி கவனிக்காமல் அதையே கட்டிடத்தை சுற்றிலும் கொட்டி நிரப்பப்படுவது வழக்கத்தில் உள்ளது. அந்த அடிமண்ணில் களிமண் மற்றும் வண்டல் மண் கலந்திருக்கும் நிலையில், சில வருடங்களில் கரையான் புற்றுக்கு அந்த மண்ணே காரணமாக அமைந்து விடுகிறது மேலும், வீட்டு உரிமையாளர்கள் பலரும் சிக்கன நடவடிக்கையின் அடிப்படையில், தோண்டி எடுக்கப்பட்ட மண்ணின் தன்மை பற்றி கவனிக்காமல் அஸ்திவார பணிகளில் பயன்படுத்துவதையும் பொறியாளர்கள் சுட்டிக்காட்டி உள்ளார்கள்.

களிமண்ணே காரணம்

களிமண் அல்லது வண்டல் மண் கலந்துள்ள, அடிமனையில் தோண்டி எடுக்கப்பட்ட மண் மூலம் கட்டிட அடித்தளம் மற்றும் வெளிப்புற சுவர்கள் ஆகியவற்றை நிரப்புவது தவறானது. குறிப்பாக, ஈரப்பதம் உலர்ந்த களி மண் என்பது கரையான் புற்று ஏற்பட உகந்ததாக அமைகிறது.

நீர்த்துப்போகும் ரசாயனம்

மேலும், கட்டிட பணிகளின்போது கரையான் தடுப்பு ரசாயனங்களை பயன்படுத்தினாலும், அந்த மருந்து சுமாராக 4 அல்லது 5 ஆண்டுகளில் பெய்யக்கூடிய மழை உள்ளிட்ட இயற்கை சூழல்கள் காரணமாக நீர்த்துப்போய் விடலாம். அதனால், உலர்ந்த களிமண் அமைப்பில் கரையான் பாதிப்புகள் ஏற்படலாம்.

எளிய தீர்வு

கட்டி முடித்த வீடுகளில் ஏற்படும் கரையான் பாதிப்பை தவிர்க்க வீட்டின் வெளிப்புற சுவர்களை சுற்றிலும், அதனை ஒட்டியவாறு 2 அடி அகலம் மற்றும் 3 அடி ஆழம் என்ற கணக்கில் மண்ணை தோண்டி எடுத்துவிட்டு, அந்த பள்ளத்தில், ‘குவாரி டஸ்ட்’ என்ற கருங்கல் உடைதூள் மண்ணை கொட்டி முற்றிலும் நிரப்ப வேண்டும். அதன் பின்னர், சுற்றிலுமுள்ள சுவர்களை ஒட்டியவாறு மேற்புறத்தில் ஒரு அடி உயரத்தில் அஸ்திவாரத்தை அணைக்கும்படி மண்ணை கொட்ட வேண்டும். அதனால், மீண்டும் கரையான் பாதிப்பு ஏற்படுவது முற்றிலுமாக தவிர்க்கப்படும். குறிப்பாக, இந்த முறை சிக்கனமானது என்பதோடு வேலையை எளிதாகவும் செய்து முடிக்கலாம் என்பது கவனிக்கத்தக்கது. 

Next Story