அதிகரித்து வரும் இந்திய ரியல் எஸ்டேட் சந்தை மதிப்பு


அதிகரித்து வரும் இந்திய ரியல் எஸ்டேட் சந்தை மதிப்பு
x
தினத்தந்தி 13 Oct 2018 7:08 AM GMT (Updated: 13 Oct 2018 7:08 AM GMT)

இந்திய ரியல் எஸ்டேட் துறை கடந்த 2014-ம் ஆண்டு முதல் உலகளவில் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சி அடைந்துள்ளதோடு, அதன் தர குறியீடும் படிப்படியாக உயர்ந்து வருவதாக ரியல் எஸ்டேட் கள ஆய்வு நிறுவனங்கள் சுட்டிக்காட்டி இருக்கின்றன.

அதன்படி, ரியல் எஸ்டேட் துறை சந்தையின் மதிப்பு எதிர்வரும் 2030-ம் ஆண்டுக்குள் சுமார் ரூ. 70 லட்சம் கோடியாக உயரலாம் என்றும் அந்த நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன.

முதலீட்டாளர்கள் நம்பிக்கை

குறிப்பாக, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம், ரியல் எஸ்டேட் இன்வெஸ்ட்மென்ட் டிரஸ்ட், அனைவருக்கும் வீடு திட்டம் போன்றவை வீடு வாங்குவோர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் ஆகியோர்களின் நம்பிக்கையை பெற்றுள்ளது.

வீடு, மனை மற்றும் நிலம் என்ற அசையா சொத்துகளுக்கான சந்தை என்பது எளிதாக வீழ்ச்சி அடையாத வர்த்தக சம நிலை கொண்டது என்ற அடிப்படையில் ரியல் எஸ்டேட் துறை அனைத்து தரப்பு முதலீட்டாளர்களையும் ஈர்த்து வரு கிறது.

அதிகமாகும் வளர்ச்சி நிலை

மேற்கண்ட அடிப்படையில் ரியல் எஸ்டேட் கள ஆய்வு நிறுவனங்கள் இந்திய ரியல் எஸ்டேட் சந்தை மதிப்பு 2025-ம் ஆண்டில் கிட்டத்தட்ட 65 ஆயிரம் கோடி டாலராகவும், 2028-ம் ஆண்டில் 85 ஆயிரம் கோடி டாலராகவும், 2030-ம் ஆண்டுக்குள் 1 லட்சம் கோடி டாலராகவும் அதிகரிப்பதற்கு வலுவான சாத்தியக்கூறுகள் உள்ளதை சுட்டிக்காட்டி இருக்கின்றன.

வேலை வாய்ப்புகள் பெருகும்

மேலும், எதிர்வரும் 2025-ம் ஆண்டுக்குள் ரியல் எஸ்டேட் சார்ந்த துறைகளின் பங்களிப்பு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு மடங்காக அதிகரிக்கவும் வாய்ப்பு இருக்கும் நிலையில், இந்திய அளவில் கிட்டத்தட்ட 6 கோடி பேர் வேலை வாய்ப்பு பெறுவார்கள் என்பதும் ரியல் எஸ்டேட் வல்லுனர்களின் எதிர்பார்ப்பாகும்.

தனியார் முதலீடுகள்

இந்திய ரியல் எஸ்டேட் துறையில் தனியார் பங்கு முதலீடுகள் இந்த வருடம் ஜனவரி-மார்ச் வரை உள்ள கால கட்டத்தில் கிட்டத்தட்ட 15 சதவீத அளவு அதிகரித்து 300 கோடி டாலர் மதிப்பை எட்டியுள்ள நிலையில் வரும் 2026-ம் ஆண்டில் முதல் மற்றும் இரண்டாம் நிலை நகரங்களில் 10 ஆயிரம் கோடி டாலர் அளவுக்கு தனியார் முதலீடுகள் அதிகரிக்கலாம் என்பதும் கள ஆய்வு நிறுவனங்களின் கருத்தாக உள்ளது.

வெளிநாட்டு முதலீடுகள்

இந்திய ரியல் எஸ்டேட் துறையில் இந்த வருடம் பெறப்பட்ட மொத்த முதலீட்டு அளவில் கிட்டத்தட்ட 40 சதவிகிதத்துக்கும் அதிகமாக வெளிநாட்டிலிருந்து வந்துள்ளது. குறிப்பாக, அமெரிக்கா, கனடா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்து முதலீடுகள் பெரிய அளவில் செய்யப்பட்டுள்ளன என்பது கவனிக்கத்தக்கது.

மேலும், வெளிநாட்டு முதலீடுகள் 90 சதவிகித அளவு மும்பை, புனே, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் போன்ற நகரங்களின் ரியல் எஸ்டேட் வர்த்தக திட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், நடப்பு ஆண்டு மும்பையில் 200 கோடி டாலர், ஐதராபாத்தில் 79 கோடி டாலர் மற்றும் பெங்களுருவில் 69 கோடி டாலர் என்ற அளவுகளில் வெளிநாட்டு முதலீடுகள் பெறப்பட்டுள்ளன. 

Next Story