வீடுகளில் மேற்கொள்ளப்படும் நிலத்தடி நீர் சேமிப்பு முறைகள்


வீடுகளில் மேற்கொள்ளப்படும் நிலத்தடி நீர் சேமிப்பு முறைகள்
x
தினத்தந்தி 8 Dec 2018 6:37 AM GMT (Updated: 8 Dec 2018 6:37 AM GMT)

கட்டிடங்களை சுற்றிலும் உள்ள நிலப்பகுதியே தண்ணீரை சேமித்து வைப்பதற்கான முதல் சேமிப்பு தொட்டி என்று கட்டிடக்கலை வல்லுனர்கள் குறிப்பிடுகிறார்கள்.

அதாவது, மழை நீர், வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர் உள்ளிட்ட நீரின் வெவ்வேறு வகைகளும் நிலத்தால் உறிஞ்சிக் கொள்ளப்பட்டு, பூமிக்கடியில் 100 அல்லது 200 அடி ஆழத்தில் சேமிப்பாக மாறுவதை மேல்மட்ட நீர்ப்படுகை (Shallow Aquifers) என்று சொல்கிறார்கள்.

ஆழ்மட்ட நீர்ப்படுகை

மேற்கண்ட அளவுக்கும் கீழே ஆழத்தில் இருப்பது ஆழ்மட்ட நீர்ப்படுகை (Deep aquifers) என்று குறிப்பிடப்படுகிறது. இந்த நீர் மட்ட பகுதியை பாதுகாப்பாக பராமரித்து வருவதுதான் எப்போதும் பாதுகாப்பானது. குறிப்பாக, அப்பகுதியை பல்வேறு முறைகளில் புதுப்பிப்பதன் மூலம் கூடுதல் தண்ணீரை பயன்படுத்திக்கொள்ள இயலும்.

அதாவது, வீடுகளில் பயன்படுத்தப்படும் தண்ணீரை எவ்வகையிலாவது நிலத்திற்குள் செல்லும்படி செய்ய வேண்டும். சமையலறை, குளியலறை போன்றவற்றிலிருந்து வெளியாகும் நீரை தக்க விதத்தில் சுத்திகரித்து, சுத்தமான தண்ணீராக மாற்றி டாய்லெட் பயன்பாடு, தோட்டங்களில் பாய்ச்சவும், நிலத்தடி நீர் சேகரிப்பு ஆகிய வகைகளிலும் உபயோகிக்கலாம்.

மழைநீர் சேமிப்பு அவசியம்

மழைக்காலம் துவங்கியுள்ள நிலையில் அனைத்து வீடுகளிலும் மழை நீர் சேகரிப்பு திட்டத்தை சமூக பொறுப்பு என்ற கருத்தில் இயன்ற அளவுக்கு செயல்படுத்துவதன் மூலம் நிச்சயமாக நிலத்தடி நீரை பாதுகாத்துக்கொள்ள முடியும் என்பது வல்லுனர்களின் ஒருமித்த கருத்தாக உள்ளது.

சுமார் 60 வருடங்களுக்கு முன்னர் காரைக்குடி, திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் ஆகிய ஊர்களில் உள்ள பழைய தொட்டிக்கட்டு முறையில் அமைக்கப்பட்ட வீடுகளின் முற்றத்தில் மழை நீரை சேகரிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டது.

அதாவது, கூரையின்மீது விழக்கூடிய மழை நீர் வீட்டின் மையப்பகுதியில் உள்ள சதுரமான மண் தரையில் சென்று சேர்வதன் மூலம் நிலத்தடியில் செலுத்தப்பட்ட விதம் கவனிக்கத்தக்கது.

Next Story