எதிர்கால கட்டிடக் கலையை வெளிப்படுத்தும் கண்ணாடி வீடு


எதிர்கால கட்டிடக் கலையை வெளிப்படுத்தும் கண்ணாடி வீடு
x
தினத்தந்தி 10 May 2019 10:30 PM GMT (Updated: 10 May 2019 3:54 PM GMT)

சுவிட்சர்லாந்தின் ஜூரிச் ஏரிக்கரையில் உள்ள மெய்லன் என்ற கிராம பகுதிக்கு வெளிப்புறத்தில் எதிர்கால கட்டிடக்கலை அம்சத்தை வெளிக்காட்டும் விதமாக, ரிப்பன் வடிவத்தில் இரண்டு மாடிகள் கொண்ட வீடு அமைக்கப்பட்டுள்ளது. அப்பகுதி மக்களின் அனைவரது கவனத்தையும் இந்த வீடு கவர்ந்து வருகிறது.

சுவிட்சர்லாந்தின் கட்டிடக்கலை நிறுவனமான ‘எவல்யூஷன் ஸ்டுடியோ’ மூலம் இந்த கண்ணாடி வீடு வடிவமைக்கப்பட்டுள்ளது. மிகச்சிறிய அளவிலான இடத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த ரிப்பன் வடிவக் கண்ணாடி வீட்டில் இரண்டு படுக்கையறைகள் உள்ளன. பெரும்பாலும் இயற்கை வெளிச்சத்தை பயன்படுத்துவதன் மூலம் மின்சார உபயோகத்தை குறைக்கும் வகையில் இக்கட்டிடம் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.

ரயில் பாதை மற்றும் சாலை ஆகியவற்றுக்கு இடையில் முக்கோணமாக அமைந்துள்ள நிலப்பகுதியில் இந்த வீடு அமைக்கப்பட்டுள்ளது. இடத்திற்கு பொருத்தமாகவும், ரிப்பன் போன்ற அதன் வடிவமும் எதிர்கால கட்டிடக்கலை வடிவ கண்ணோட்டத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்விஸ் நாட்டின் கட்டிட விதிகளின்படி அந்த குறுகிய பகுதியில் இவ்வகை கட்டுமானத்தை அமைப்பது சவாலான விஷயமாக இருந்தது என்று வீட்டின் உரிமையாளர் ஸ்டீபன் குறிப்பிட்டுள்ளார்.

வீட்டின் உட்புறத்தில் அமர்ந்து கொண்டு, வெளிப்புற சாலையில் செல்லக்கூடிய வாகனங்கள் அல்லது ரயில்கள் ஆகியவற்றை எளிதாக கவனிக்கலாம். வீட்டின் பகுதிகள் கிட்டத்தட்ட 80 சதவிகிதத்திற்கும் மேல் மூன்று அடுக்குகள் கொண்ட கண்ணாடிகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக, உணவு அறை, படுக்கை அறை உள்ளிட்ட இதர அறைகளில் இருந்தவாறே ஏரி மற்றும் அதன் பின்னால் அமைந்துள்ள மலைகளின் அழகை ரசிக்க இயலும்.

கட்டிடத்தின் மொத்த உயரத்தை தளங்கள் மூலம் தனித்தனியாக பிரிக்கப்படாத விஷேச கட்டமைப்பாக (பிவீரீலீ Ce-i-l-i-ng) உள்ளதால், ஒரு தளத்திலிருந்து இன்னொரு தளத்தை எளிதாக பார்க்க இயலும். வீட்டின் மாடிப் பகுதியை மட்டும் 5300 பவுண்டுகள் அதாவது ரூ.4.75 லட்சம் என்ற அளவில் மாத வாடகைக்கு விடப்பட்டுள்ளது.

Next Story