உறுதியான செங்கல் சுவர் அமைக்க ஏற்ற வழிமுறைகள்


உறுதியான செங்கல் சுவர் அமைக்க ஏற்ற வழிமுறைகள்
x
தினத்தந்தி 18 May 2019 3:26 AM GMT (Updated: 18 May 2019 3:26 AM GMT)

செங்கல் சுவர் எழுப்பும்போது கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள்

கட்டமைப்புகளில் பிரதான அங்கமாக உள்ள செங்கல் சுவர் எழுப்பும்போது கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள் பற்றி கட்டுனர்கள் மற்றும் கட்டுமான வல்லுனர்கள் குறிப்பிட்ட தகவல்களின் தொகுப்பை இங்கே காணலாம்.

* செங்கலின் மேற்புறத்தில் அதை தயாரித்த நிறுவனத்தின் பெயர் எழுத்துக்கள் இருக்கும் நிலையில், அந்த பகுதியை மேல் நோக்கி வைத்தபடிதான் சுவர் கட்டுமானத்தை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் மேற்புறம் அமைக்கப்படும் சிமெண்டு கலவை செங்கலின் மீது கச்சிதமாக படியும். அவ்வாறு இல்லாமல் மாற்றி வைக்கப்பட்டால், அது சுவர்களில் விரிசல்கள் உருவாக காரணமாக அமையலாம்.

* கட்டிட பணிகளுக்கான செங்கல் அனைத்தும் ஒரே நீளம், அகலம் உடையதாக இருப்பது மிக முக்கியம். அவை சீரற்ற பரப்புகளை கொண்டதாக இருக்கக்கூடாது. குறிப்பாக, செங்கலின் ஓரங்கள் குறிப்பிட்ட அளவுக்கும் மேல் உடைந்து இருக்கக்கூடாது.

* பூச்சு வேலை மற்றும் செங்கல் கட்டுமான பணிகளுக்கு மணலின் தன்மைக்கேற்ப சலித்து பயன்படுத்த வேண்டி இருக்கலாம். மணலில் தூசு, களிமண் ஆகியவை இல்லாத நிலையில் சலிப்பது அவசியமில்லை என்பது அனுபவம் வாய்ந்த கட்டுமான பொறியாளர்களது கருத்தாகும்.

* விரைவாக கட்டிட பணிகளை முடிக்க வேண்டும் என்ற நிலையில் சுவர்களை உடனடியாக முழு அளவுக்கும் அமைப்பது கூடாது. அதாவது, ஒரு நாளைக்கு ஐந்து அடி உயரம் வரை மட்டுமே சுவர்களை அமைக்க வேண்டும். அப்போதுதான் செங்கல் மற்றும் சிமெண்டு கலவை ஆகியவை நன்றாக இணைந்து, உறுதியான சுவராக மாற்றம் பெறும்.

* ஒரு அடி உயரத்திற்கு மேல் செங்கல் சுவர் அமைத்தவுடன் கீழே உள்ள பகுதிகள் நேராக இருப்பதை மட்டப்பலகை கொண்டு சரி பார்க்கப்படுவது நல்லது.

* ஒவ்வொரு நாளும் சுவர் அமைப்பதற்கு முன்னர் ஏற்கனவே கட்டப்பட்டுள்ள சுவர்கள் உலர்ந்து போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதனால், சிறிது காலம் கழித்து சுவர்களில் விரிசல்கள் உருவாகாமல் தவிர்க்க இயலும்.

* கட்டிட பணிகளுக்கான சிமெண்டு கலவையை வெறும் தரையில் தயாரிப்பது கூடாது. கான்கிரீட் தளம், தார் ரோடு அல்லது கெட்டியான பாலித்தீன் ஷீட் விரிக்கப்பட்டு, அதன் மீது சிமெண்டு கலவையை தயாரிக்க வேண்டும். வெறும் தரையில் சிமெண்டு கலவையை தயாரித்தால் அதிலுள்ள தண்ணீரை தரைப்பகுதி எளிதாக உறிஞ்சிவிடும். அதனால், கலவையில் உள்ள சிமெண்டு பாதிக்கப்பட்டு கட்டுமானத்தின் வலிமை குறைத்துவிடக்கூடும்.


Next Story