தரைக்கு அழகு சேர்க்கும் முப்பரிமாண வேலைப்பாடுகள்...


தரைக்கு அழகு சேர்க்கும் முப்பரிமாண வேலைப்பாடுகள்...
x
தினத்தந்தி 23 Oct 2021 5:00 AM GMT (Updated: 23 Oct 2021 5:00 AM GMT)

சாதாரணமாக தோற்றமளிக்கும் ஒரு வீட்டின் வரவேற்பறை அல்லது அலுவலகத்தின் மொத்த இடத்தையும் மிகவும் வண்ணமயமாகவும், அற்புதமாகவும் கண்களுக்கு விருந்தாகவும் காட்டக்கூடிய வேலைப்பாடு என்றால் அவை நிச்சயமாக முப்பரிமாண தாள்களை தரையில் ஒட்டுவது என்று சொல்லலாம்.

இந்தியாவில் தற்போது பிரபலமாகி வரும் வேலைப்பாடு என்று சென்னால் அது மிகையாகாது. இந்தியப் பெருங்கடலின் ஒரு பகுதியை உங்கள் வீட்டின் வரவேற்பறை அல்லது படுக்கை அறைக்கு கொண்டு வருவதானாலும், தாமரைத் தடாகத்தில் மீன்கள் நீந்த பட்டாம்பூச்சிகள் பறப்பது போன்ற காட்சியைக் கண்முன் நிறுத்துவதென்றாலும் அதற்கு இந்த முப்பரிமாண வேலைப்பாடுகள் துணை நிற்கின்றன.

முப்பரிமாணம் என்பதை சுருக்கமாக 3டி என்று அழைக்கிறார்கள்.

3டி தரையை உருவாக்கும் செயல்முறை:-

தரையை அனைவரின் கவனத்தை ஈர்க்கும் விதமாக மையப்படுத்தி 3டி தரைகளானது அமைக்கப்படுகின்றது. உதாரணமாக நீர் நிலையில் நடப்பது, ரோஜா இதழ்களால் சூழப்பட்டிருப்பது போன்ற ஒரு மாலையை இந்த 3டி வேலைப்பாடுகள் உருவாக்குகின்றன. ஒரு அமைப்பு அல்லது படத்தை தேர்ந்தெடுத்து தெளிவான எபோக்சி பூச்சுடன் இந்த வேலையானது துவங்குகின்றது.

* ப்ரைமர்:- ப்ரைமர் இரண்டு நோக்கங்களுக்காக பயன்படுத்தப் படுகின்றது. ஒன்று அவை அடி மூலக்கூறை வெளியேற்றுகிறது. இரண்டாவது அவை அடுத்த பூச்சுக்கு ஒட்டும் தன்மையை வழங்குகிறது.

* ஸ்க்ராட்ச் கோட்:- 3டி படத்திற்கு முனை இருப்பவை இந்த ஸ்க்ராட்ச் கோட்டாகும். இந்த அடுக்கு ஒரு சமமான மேற்பரப்பை உருவாக்கி படத்தை ஒட்டுவதற்கு உதவுகின்றது.

* 3டி ஸ்டிக்கர்/படம்:- தரையின் தோற்றமானது படம் அல்லது ஸ்டிக்கரால் வரையறுக்கப்படுகிறது.

* மேல்பூச்சு:- ஒரு தெளிவான நூறு சதவீத எபோக்சி பூச்சு தரை அமைப்பில் மேல் பூச்சாக முதலிடம் வகிக்கிறது. இது குறைந்தது 600 மேக்ரான் தடிமனாகப் பயன்படுத்தப்படுவதுடன் ஒரு சுய சமநிலை அமைப்பாகவும் இருக்க வேண்டும்.

3டி எபோக்சி தரை அமைப்பை தொழில்முறை அல்லாத ஒருவர் சிறப்பாக அமைக்க சாத்தியமில்லை என்றே சொல்லலாம். அதே போல் சான்றளிக்கப்பட்ட ஒப்பந்தக்காரர்கள் இந்த வேலையைச் செவ்வனே செய்து முடிக்க முடியும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.

3டி மதிப்பீடு:-

* 3டி வேலைப்பாடுகளுக்கு ஆகும் செலவானது சிறிது அதிகமாக இருந்தாலும் அதன் நீடித்து உழைக்கும் தன்மைக்கு முன்னால் அதற்கு ஒருமுறை செலவு என்பது பெரிய விஷயமில்லை என்றே எண்ணத் தோன்றுகின்றது. 3டி பூச்சுகளின் தரம் மற்றும் ஒப்பந்தக்காரரைப் பொறுத்து உத்தரவாதமானது இருபது ஆண்டுகள் வரை வழங்கப்படுகின்றது. மேலும் 3டி தரை அமைப்பிற்கு ஆகும் செலவானது பல காரணிகளைப் பொறுத்து மாறுபடுகின்றது. அடி மூலக்கூறு பகுதி, அடி மூலக்கூறின் நிலை, வகை மற்றும் வடிவமைப்பு மற்றும் 3டி திட்டத்தின் சிக்கலான தன்மையைப் பொறுத்து செலவானது வேறுபடுகின்றது. தரையின் வடிவம் சிக்கலானதாக இருந்தாலும் ஆகும் செலவு அதிகமாக இருக்கும்.

3டி டிசைன்கள்:-

பெரும்பாலும் குளியலறைகளுக்கு கடல், நீர்நிலை, அருவிகள் போன்ற முப்பரிமாண படங்களையே தரைத்தளங்களாக பயன்படுத்துகிறார்கள். கடலில் நீந்தும் டால்ஃபின், ஜோடியாக தண்ணீரில் பயணம் செய்யும் சுறாக்கள், தண்ணீர் பொங்கிப் பிரவாகமாக வழியும் அருவிகள், தண்ணீரில் நீந்தும் பனிக்கரடி, நீரிலிருந்து மேலே தலையைத் தூக்கியபடி இருக்கும் கடற்சிங்கங்கள், நாம் தரையில் காலை வைத்தால் நம் காலைக் கவ்வத் தயாராக வாயைப் பிளந்து காத்திருக்கும் சுறா. இவை அனைத்தும் தத்ரூபமாக இருப்பது போல் முப்பரிமாண தரை வேலைப்பாடு இருக்கின்றது.

படுக்கை அறைகளுக்கு பெரும்பாலும் நீர்நிலை டிசைன்களையே வாடிக்கையாளர்கள் விரும்புகிறார்கள். நம் படுக்கையிலிருந்து காலைக் கீழே வைக்கும் போது ஆழ்கடலில் கடல் தாவரங்கள் மற்றும் வண்ண மீன்களுக்கு இடையே காலை வைப்பது போன்ற தோற்றத்தை சிறிதே கற்பனை செய்து பாருங்கள். அதேபோல் பல்வேறு நிலைகளாகத் தண்ணீர் துள்ளிக் குதிப்பது போன்ற அருவி, அவற்றில் உலவும் மீன்களின் மேல் காலை வைத்து விடுவோமோ அல்லது தண்ணீரில் வழுக்கி விழுந்து குளித்து குதூகலிக்கலாமோ என்று எண்ணத் தோன்றுமளவுக்குத் தத்ரூபமான வடிவமைப்புடன் இருக்கும் அழகை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.

பசுமையான வயலின் நடுவில் நின்று கொண்டு சமைப்பது எவ்வளவு இனிமையார இருக்கும். பெரிய கூழாங்கற்களின் மேலே தண்ணீர் ஆர்ப்பாட்டமில்லாமல் பாய்ந்து செல்ல தண்ணீரில் கால்படாமல் இதன் இடையிடையே இருக்கும் பாறைகளின் மேல் நின்று கொண்டு சமைப்பது போல ஒரு காட்சியைத் தத்ரூபமாக 3டி வேலைப்பாட்டில் கொண்டு வருகிறார்கள் என்றால் பாராட்ட வார்த்தைகளைத் தேடுவது கடினமான வேலையாகவே இருக்கும்.

பெரிய வரவேற்பறைகளாக இருக்கும்பட்சத்தில் அவற்றிற்கு தாமரை பூத்த தடாகங்கள், மலர்த் தோட்டங்கள், பெரிய கடல் அலைகள், மலை முகடுகளுடன் இருக்கும் மேகக் கூட்டங்கள், நீர் நிலைகளின் மேல் மரப்பாலங்கள் அவற்றைச் சுற்றிலும் செடி கொடிகள், பளிங்குத் தரைகளின் மேலே இருக்கும் மலர்கள், புல்வெளித் தோட்டங்கள், மணற் படுகைகள் என ஒவ்வொன்றும் நிழலுடன் இருப்பது போன்று வடிவமைக்கப்பட்டிருப்பது இயற்கையான, தத்ரூபமான சூழலில் நாம் வாழ்வது போன்ற எண்ணத்தை நமக்குள் ஏற்படுத்துகின்றது.

Next Story