என்னுடைய ஆட்டம் முன்னேறுவதற்கு அவங்க 2 பேர்தான் முக்கிய காரணம் - ஜெய்ஸ்வால்


என்னுடைய ஆட்டம் முன்னேறுவதற்கு அவங்க 2 பேர்தான் முக்கிய காரணம் - ஜெய்ஸ்வால்
x

image courtesty:AFP 

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்ட ஜெய்ஸ்வால் தொடர் நாயகன் விருது வென்று அசத்தினார்.

புதுடெல்லி,

இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இளம் வீரர் ஜெய்ஸ்வால் அபாரமாக விளையாடி இந்தியா 4 - 1 என்ற கணக்கில் கோப்பையை வெல்ல உதவினார். 5 போட்டிகளில் 712 ரன்கள் அடித்த அவர் இங்கிலாந்துக்கு எதிராக ஒரு தொடரில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரராக சாதனை படைத்து தொடர் நாயகன் விருதை வென்றார்.

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான கடந்த 9 மாதங்களில் தம்முடைய ஆட்டத்தில் முன்னேறுவதற்கு கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் முக்கிய காரணமாக இருப்பதாக ஜெய்ஸ்வால் கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு:-

"உடைமாற்றும் அறையில் ரோகித் சர்மா இருப்பது மிகவும் நன்மையாகும். அவருக்கு கீழ் விளையாடியது சிறப்பாக இருந்தது. இந்த தொடரில் நான் வெளியிட விரும்பாத பல தருணங்கள் இருந்தன. அது என்னுடன் இருக்கட்டும். இந்த பயணம் முழுவதும் வீரர்களை ரோகித் சர்மா ஆதரித்து பேசும் விதம் சிறப்பாக இருந்தது. என்ன நடந்தாலும் அவர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார். உங்கள் கேப்டனிடம் இதை பார்ப்பது நம்ப முடியாதது. அவரிடமிருந்து நானும் கற்று வருகிறேன்.

அதே சமயம் இந்திய அணியில் கடந்த 9 மாதங்களாக விளையாடி வரும் நான் ராகுல் டிராவிட் சார் மற்றும் ரோகித் சர்மா ஆகியோரிடம் நிறைய பேசினேன். அது என்னுடைய ஆட்டத்தை முன்னேற்றுவதற்கு நிறைய உதவியது. குறிப்பாக போட்டியை புரிந்து கொள்வது, களத்தில் நீண்ட நேரம் நின்று விளையாடுவதில் அது உதவியது" என்று கூறினார்.


Next Story