ரசிகர்கள் கூட்டத்திற்காக நான் பந்தை பறக்க விடமாட்டேன்- விராட் கோலி


ரசிகர்கள் கூட்டத்திற்காக நான் பந்தை பறக்க விடமாட்டேன்- விராட் கோலி
x
தினத்தந்தி 8 Dec 2019 12:37 PM GMT (Updated: 8 Dec 2019 12:37 PM GMT)

ரசிகர்களின் கூட்டத்திற்காக பந்தை பறக்க விடமாட்டேன் என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத்,

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையே ஐதராபாத்தில் நடைபெற்ற முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது. முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 207 ரன்கள் எடுத்தது. அதன் பின்னர் களமிறங்கிய இந்திய அணி சிறப்பாக விளையாடி 4 விக்கெட்டை இழப்பிற்கு 18.4 ஓவர்களில் 209 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 50 பந்துகளில் 94 ரன்கள்(6 பவுண்டரி , 6 சிக்சர்கள்)குவித்தார். இறுதிவரை களத்தில் நின்று ஆடிய அவர் இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

இந்த போட்டி முடிந்த பின்னர் இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேசிய போது, “நான் இந்த இன்னிங்ஸில் முதல் பாதியில் விளையாடியதை இளம் வீரர்கள் பின்பற்ற வேண்டாம். நான் முதல் பகுதியில் மிகவும் மோசமாக பேட்டிங் செய்தேன். நான் பந்தை அதிரடியாக ஆடும் பேட்ஸ்மேன் அல்ல, நிதானமாக விளையாடுபவன்.

நான் கூடியிருக்கும் ரசிகர்கள் கூட்டத்திற்காக பந்தை பறக்க விட மாட்டேன். ஆனால் நாட்டிற்காக விளையாடும் போது அணியின் வெற்றி மட்டுமே முக்கியம்” என்று தெரிவித்தார்.

Next Story