அர்ஷ்தீப் சிங்கை காலிஸ்தான் இயக்கத்துடன் தொடர்புப்படுத்திய விவகாரம்: விக்கிப்பீடியாவுக்கு மத்திய அரசு சம்மன்


அர்ஷ்தீப் சிங்கை காலிஸ்தான் இயக்கத்துடன் தொடர்புப்படுத்திய விவகாரம்:  விக்கிப்பீடியாவுக்கு மத்திய அரசு சம்மன்
x

கிரிக்கெட் வீரர் அர்ஷ்தீப் சிங்கை பிரிவினைவாத காலிஸ்தான் இயக்கத்துடன் தொடர்புப்படுத்திய விவகாரத்தில் விக்கிப்பீடியாவுக்கு மத்திய அரசு சம்மன் அனுப்பியுள்ளது.

புதுடெல்லி,



பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 4 சுற்றில் இந்திய கிரிக்கெட் வீரர் அர்ஷ்தீப் சிங், கேட்ச் பிடிக்காமல் தவற விட்டது, முக்கிய போட்டியில் இந்தியா தோல்வியடைய காரணம் என தெரிவித்து, சமூக ஊடகத்தில் சிலர் கடுமையாக அவரை தாக்கும் வகையில் விமர்சித்து வருகின்றனர்.

இந்த சூழலில், சிங்கின் விக்கிப்பீடியா பக்கத்தில், இந்தியா என்ற வார்த்தையை நீக்கி விட்டு, காலிஸ்தான் என்ற வார்த்தையை பதிவு செய்யப்படாத பயன்பாட்டாளர் ஒருவர் இணைத்து உள்ளார். இது சிங்கின் விக்கிப்பீடியா பக்கத்தில் பல இடங்களில் இடம் பெற்று இருந்தது.

எனினும் 15 நிமிட இடைவெளியில் இந்த பதிவுகள் பின்னர் மாற்றி சரிசெய்யப்பட்டன. இதனை தொடர்ந்து, கிரிக்கெட் வீரர் அர்ஷ்தீப் சிங்கின் விக்கிப்பீடியா பக்கத்தில், அவரை பிரிவினைவாத காலிஸ்தானி இயக்கத்துடன் தொடர்புப்படுத்தி தகவல் வெளியிட்டு போலியான செய்தியை எப்படி பகிர முடிந்தது என்பதற்கு பதிலளிக்கும்படி விக்கிப்பீடியா அதிகாரிகளுக்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகம் இன்று சம்மன் அனுப்பி உள்ளது.

இந்த தவறான தகவலானது, சமூக நல்லிணக்கத்திற்கு இடையூறு ஏற்படுத்த கூடும். சட்டம் மற்றும் ஒழுங்கு சீர்கேட்டிற்கான சூழ்நிலைக்கும் வழிவகுப்பதுடன், சிங்கின் குடும்பத்தினர் மீதும் பாதிப்பு ஏற்பட கூடும் என மத்திய அரசு நம்புகிறது என்று ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆசிய கோப்பை 20 தொடரில் சூப்பர் 4 சுற்றில் நேற்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் விளையாடின. ஆட்டத்தின் பரபரப்பான கட்டத்தில் 18-வது ஓவரை ரவி பிஷ்னோய் வீசினார். அப்போது, தான் ஆசிப் அலி களமிறங்கி இருந்தார். அவர் ரன் எதுவும் எடுக்காத நிலையில் (0 ரன்) இருந்தார். அப்போது, ரவி பிஷ்னோய் வீசிய 17.3 ஓவரில் ஆசிப் அலி பந்தை வேகமாக அடிக்க முற்பட்டார்.

அப்போது, பேட்டில் சரியாக படாததால் பந்து கீப்பருக்கு பின்னே கேட்ச் வாய்ப்பாக மாறியது. அங்கு நின்று கொண்டிருந்த அர்ஷ்தீப் சிங் கேட்ச் பிடிக்க முற்பட்டார். ஆனால், மிகவும் சுலபமான அந்த கேட்சை அர்ஷ்தீப் தவறவிட்டார். அந்த கேட்ச் தவற விடப்பட்டது இந்தியா தோல்வியடைய முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அர்ஷ்தீப் சிங்கிற்கு எதிராக பலரும் கடுமையான விமர்சனங்கள் தெரிவித்தனர். இந்நிலையில் அவருக்கு ஆதராவக முன்னாள் கேப்டன் கோலி கூறுகையில், இது பெரிய போட்டி, சூழ்நிலைகளும் சற்று இறுக்கமாக இருந்தது. அழுத்தமான சூழ்நிலையின் போது யார் வேண்டுமானலும் தவறு செய்யலாம். மூத்த வீரர்கள் உங்களிடம் வருவார்கள்.. நீங்கள் (இளம் வீரர்கள்) அவர்களிடமிருந்து கற்று கொள்ள வேண்டும்.

அப்போது தான், அடுத்த முறை வாய்ப்பு வரும்போது, நீங்கள் இதுபோன்ற முக்கியமான கேட்ச்களை பிடிக்க முடியும்' என்றார். மேலும், அர்ஷ்தீப் சிங்க்கிற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் யாரும் வேண்டுமென்றே கேட்ச்சை விடுவதில்லை... அர்ஷ்தீப் சிங்கை விமர்சிப்பதை நிறுத்த வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அர்ஷ்தீப் சிங்கிற்கு ஆதரவாக இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தனது டுவிட்டர் பக்கத்தின் முகப்பு படத்தை மாற்றியுள்ளார். அவர் டுவிட்டர் பக்கத்தில் அர்ஷ்தீப் சிங்கின் புகைப்படத்தை மாற்றியுள்ளார்.


Next Story