இறுதிப்போட்டியில் ஆஸி. அணியிடம் இந்தியா தோற்றதற்கான 6 முக்கிய காரணங்கள்


இறுதிப்போட்டியில் ஆஸி. அணியிடம் இந்தியா தோற்றதற்கான 6 முக்கிய காரணங்கள்
x
தினத்தந்தி 19 Nov 2023 7:26 PM GMT (Updated: 20 Nov 2023 12:19 AM GMT)

3-வது முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றும் நோக்கில் களமிறங்கிய இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியிடம் வீழ்ந்தது.

அகமதாபாத்,

50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி 6 ஆவது முறையாக உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. 3-வது முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றும் நோக்கில் களமிறங்கிய இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியிடம் வீழ்ந்தது. இதனால், இந்திய ரசிகர்கள் சோகத்தில் மூழ்கினர்.

இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணியிடம் இந்தியா தோற்றதற்கான 6 முக்கிய காரணங்கள் பின்வருமாறு;

1.சிறந்த தொடக்கத்தை கொடுக்கத் தவறிய கில்

இறுதிப்போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான சுப்மன் கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறினார். ரோகித் சர்மா ஒரு முனையில் அதிரடியாக விளையாடினார். ஆனால் சுப்மன் கில் இந்தியாவுக்கு வலுவான தொடக்கத்தை கொடுக்க தவறினார்.

குறிப்பாக ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் மெதுவாக பந்துகளை வீசி இந்திய பேட்டஸ்மேன்களை தொடக்கத்திலேயே அதிரடி ஆட்டத்தை ஆடவிடாமல் தடுத்தனர். சிறிதுநேரம் அதிரடி காட்டிய ரோகித் சர்மா, அவரும் மேக்ஸ்வெல் பந்தில் ஆட்டமிழந்தார்.

2.மிடில் ஓவர்களில் குறைவான ரன்கள்

ஆட்டத்தின் தொடக்கத்தில் ரோகித் சர்மா, இந்தியாவுக்கு சிறந்த தொடக்கத்தை கொடுத்தார். ஆனால், இந்திய அணி 11 ஓவர்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. இதனால், அடுத்து பேட்டிங் செய்ய வந்தவர்கள், விக்கெட்டை பறிகொடுத்துவிடக்கூடாது என்பதற்காக நிதானமாக விளையாடினர்.

குறிப்பாக, விராட் கோலியும், கே.எல்.ராகுலும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் 11 முதல் 30 ஓவர்கள் வரை இந்திய அணியால் 2 விக்கெட் இழப்புக்கு 77 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ஒட்டுமொத்தமாக, இந்திய அணி, தனது இன்னிங்சில் 13 பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்சர்களை மட்டுமே அடித்தது.

3.பிரகாசிக்க தவறிய சூர்யகுமார் யாதவ்

ஒரு கட்டத்தில் இந்திய அணி148/4 என்ற நிலையில் இருந்தபோது, களத்திற்கு சூர்யகுமார் யாதவிற்கு பதிலாக ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா வந்தார். ஆனால் ஜடேஜாவால் 22 பந்துகளில் 9 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

பேட்டிங் வரிசையில் சூர்யகுமார் யாதவை முன்னோக்கி அனுப்பாததன் மூலம் இந்தியா ஒரு வாய்ப்பைத் தவறவிட்டதாகத் தெரிகிறது. பெரிய ஷாட்கள் அடிக்கும் திறமை பெற்ற சூர்யகுமார் யாதவ், அவரது இயல்பான பாணியில் விளையாடியிருந்தால், இந்தியா இன்னும் சிறந்த ஸ்கோரை எட்டியிருக்கலாம். ஆனால் அவரும் அடித்து ஆட வேண்டிய நேரத்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

4.பீல்டிங்கில் அசத்திய ஆஸ்திரேலிய அணி

இறுதிப்போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் எந்த திசையில் பந்துகளை அடித்தாலும், அங்கே ஒரு பீல்டர் அதனை தடுத்துவிடுகிறார். ஆஸ்திரேலிய அணியின் பீல்டிங் வியூகம், எந்த ஒரு பந்தையும் எளிதாக பவுண்டரிக்கு செல்ல அனுமதிக்கவில்லை. சுமார் 40 ரன்களை அவர்களே தடுத்து நிறுத்தி இருப்பார்கள். பவுண்டரிகளுக்கு பந்துகளை போக விடாமல் ஆஸ்திரேலிய வீரர்கள் அரணாக இருந்து ரன்களை கட்டுபடுத்தினார்கள். ஆனால் இந்திய அணியின் பீல்டிங் வியூகம் பெரிய அளவில் எடுபடவில்லை என்றே சொல்லலாம்.

5.பேட்டிங்கில் அதிரடி காட்டிய ஆஸ்திரேலியா

பவர் ப்ளேவில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் 47 ரன்களுக்கு 3 விக்கெட்களை கைப்பற்றியதால், ஆஸ்திரேலிய அணி தொடக்கத்தில் தடுமாறியது. இதுமாதிரியான தருணத்தில் மற்ற அணி வீரர்கள் விக்கெட்டை இழக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக மெதுவாக விளையாடுவார்கள். ஆனால் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேனான ஹெட், இந்திய பந்துவீச்சை சிதறவிட்டு அவர்களின் நம்பிக்கையை முதலில் சிதைத்தார். ஹெட் - லபுசேன் பார்டன்ர்ஷிப், இந்தியாவின் கோப்பை வெல்லும் கனவை தகர்த்தது. அதிரடியை குறைக்காத ஹெட், சதம் கடந்து ஆஸ்திரேலியாவை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.

6.ஏமாற்றம் அளித்த இந்திய சுழல்பந்துவீச்சு

நடப்பு உலகக்கோப்பை தொடரில் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் விக்கெட் கூட எடுக்காத ஒரே போட்டி என்றால் அது இந்த போட்டி தான். வேகத்தில் ஒரு பக்கம் சுழலில் ஒரு பக்கம் என இந்திய பவுலர்கள் அச்சுறுத்தி வந்த நிலையில் குல்தீப் மற்றும் ஜடேஜா முழுமையாக 10 ஓவர்கள் விசியும் அவர்களால் ஒரு விக்கெட்டை கூட எடுக்கமுடியவில்லை. இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுகளை கைப்பற்றாமல் இருந்ததும் இந்திய அணியின் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்துவிட்டது.


Next Story