இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் போட்டி நடைபெற்ற கேப்டவுன் பிட்ச் திருப்தியற்றது - ஐசிசி


இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் போட்டி நடைபெற்ற கேப்டவுன் பிட்ச் திருப்தியற்றது - ஐசிசி
x

image courtesy; AFP

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கேப்டவுனில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

துபாய்,

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. இதில் இரு அணிகளுக்கு இடையே முதலில் நடைபெற்ற டி20 தொடர் சமனில் முடிவடைந்த நிலையில், ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றியது.

அதன்பின் இவ்விரு அணிகளுக்கு இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆரம்பமானது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியடைந்த இந்திய அணி, கேப்டவுனில் நடைபெற்ற 2-வது போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது.

இதில் கேப்டவுனில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டி வெறும் 2 நாட்களிலேயே முடிவடைந்தது. அதிலும் போட்டி தொடங்கிய முதல் நாளிலேயே இரு அணிகளிலும் சேர்த்து மொத்தம் 23 விக்கெட்டுகள் வீழ்ந்தன. மேலும் 146 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த பந்துகளில் முடிவடைந்த போட்டி என்ற சாதனையயும் இது படைத்தது. இதனால் இப்போட்டி நடைபெற்ற கேப்டவுன் பிட்ச்சை பல முன்னாள் வீரர்கள் குறை கூறி வந்தனர்.

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நடைபெற்ற கேப்டவுன் பிட்ச் திருப்தியற்றது என்று தர நிர்ணயம் செய்துள்ளது. ஐசிசி-யின் பிட்ச் மற்றும் அவுட் பீல்ட் கண்காணிப்பு செயல்முறைகளின் கீழ் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனால் கேப்டவுன் பிட்ச் சில டிமெரிட் புள்ளிகளை பெற்றுள்ளது.


Next Story