உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி அபார பந்து வீச்சு.. 199 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன ஆஸ்திரேலியா


உலகக்கோப்பை கிரிக்கெட்:  இந்திய அணி அபார பந்து வீச்சு.. 199 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன ஆஸ்திரேலியா
x
தினத்தந்தி 8 Oct 2023 12:37 PM GMT (Updated: 8 Oct 2023 1:38 PM GMT)

இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 199 ரன்கள் எடுத்துள்ளது.

சென்னை,

ஐ.சி.சி. நடத்தும் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வருகின்றன.

இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷ் களமிறங்கினர்.

இதில் மிட்செல் மார்ஷ் ரன் ஏதுமின்றி கேட்ச் ஆகி வெளியேறினார். டேவிட் வார்னர் 41 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த ஸ்டீவ் ஸ்மித் 46 ரன்களில் ஜடேஜா பந்துவீச்சில் போல்ட் ஆனார். மார்ன்ஸ் லபுஷேன் 27 ரன்களிலும், மேக்ஸ்வெல் 15 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 199 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் தரப்பில் ஜடேஜா 3 விக்கெட்டுகளும், பும்ரா மற்றும் குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளும், சிராஜ், ஹர்திக் பாண்டியா மற்றும் அஸ்வின் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து 200 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடி வருகிறது.


Next Story