உலகக்கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணிக்கு 241 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

Image Courtesy : @BCCI
இந்திய அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்கள் சேர்த்தது.
அகமதாபாத்,
13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வருகின்றன.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர். இதில் சுப்மன் கில் 4 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். ரோகித் சர்மா 47 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த விராட் கோலி(54 ரன்கள்) சற்று நிதானமாக ஆடி அரை சதத்தைக் கடந்தார். ஸ்ரேயாஸ் ஐயர் 4 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். கே.எல்.ராகுல் 66 ரன்களிலும், சூர்யகுமார் யாதவ் 18 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியாக இந்திய அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து 241 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி விளையாடுகிறது.






