தினேஷ் கார்த்திக் முதுகுவலியால் அவதி - வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் விளையாடுவது சந்தேகம்?


தினேஷ் கார்த்திக் முதுகுவலியால் அவதி - வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் விளையாடுவது சந்தேகம்?
x

Image Courtesy: AFP 

டி20 உலகக்கோப்பையில் நேற்று நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் முதுகுவலி காரணமாக பாதியில் வெளியேறினார்.

பெர்த்,

டி20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் தற்போது சூப்பர் 12 சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் நேற்று நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

முன்னதாக, இந்தப் போட்டியின் போது இந்திய அணியின் வீரர் தினேஷ் கார்த்திக் முதுகில் காயம் அடைந்தார். ஆட்டத்தின் இரண்டாவது இன்னிங்சின் 15வது ஓவரின் முடிவின் போது தினேஷ் கார்த்திக் முதுகுவலியால் அவதிப்பட்டார். உடனடியாக பிசியோ வந்து அவரை பரிசோதித்தார்.

முடிவில் மைதானத்தில் இருந்து தினேஷ் கார்த்திக் வெளியேறினார். அவரது காயத்தின் சரியான தன்மை குறித்து சொல்லப்படவில்லை. என்றாலும், தினேஷ் கார்த்திக்கின் முதுகு வலியை புவனேஷ்வர் குமார் உறுதிப்படுத்தினார். "அவருக்கு சில முதுகுவலி பிரச்சனை இருந்தது எனக்கு தெரியும். வெளிப்படையாக, பிசியோ ஒரு அறிக்கையை கொடுப்பார், அதன் பிறகு எங்களுக்கு இன்னும் தெளிவு கிடைக்கும்" என்று போட்டிக்கு பிந்தைய ஊடக சந்திப்பின் போது புவனேஷ்வர் குமார் தெரிவித்தார்.

இதனிடையே, நவம்பர் 2 ஆம் தேதி அடிலெய்டில் வங்கதேச அணியுடன் இந்திய அணி மோதுகிறது. இதில் விளையாட 72 மணிநேரம் மட்டுமே இருப்பதால் அதற்குள் உடல்தகுதி பெற்றால் மட்டுமே தினேஷ் கார்த்திக் விளையாடுவார் இல்லையெனில் இந்திய அணியில் ரிஷப் பண்ட் இடம் பிடிப்பார்.


Next Story