சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களின் பயிற்சியை காண குவிந்த ரசிகர்கள்


சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களின் பயிற்சியை காண குவிந்த ரசிகர்கள்
x

சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்துக்கான டிக்கெட் விற்று தீர்ந்தது.

சென்னை,

10 அணிகள் பங்கேற்கும் 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வருகிற 31-ந்தேதி ஆமதாபாத்தில் தொடங்குகிறது. இதில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் 7 லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. ஏப்ரல் 3-ந்தேதி சேப்பாக்கத்தில் நடக்கும் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. இதற்கான டிக்கெட் விற்பனை நேற்று தொடங்கியது.

டிக்கெட் வாங்க அதிகாலை முதலே சேப்பாக்கத்தில் உள்ள கவுண்ட்டர் முன் ரசிகர்கள் திரண்டனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று ஆர்வமுடன் டிக்கெட்டுகளை வாங்கிச் சென்றனர். ரூ.1,500, ரூ.2,000, ரூ.2,500 ஆகிய விலைகளில் டிக்கெட் விற்கப்பட்டன. ரசிகர்களுக்கு ஒதுக்கப்பட்ட டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்க வட்டாரங்கள் தெரிவித்தன. இதே போல் ரூ.2,000, ரூ.2,500, ரூ.3,000 ஆகிய விலைகளின் டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் விற்கப்பட்டது. படுஜோராக நடந்த ஆன்லைன் டிக்கெட்டுகள் 15 நிமிடங்களில் விற்று காலியானது.

இதற்கிடையே, சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களின் பயிற்சியை காண ரசிகர்கள் அனுமதிக்கப்படுவதாக நேற்று மாலை அறிவிக்கப்பட்ட அடுத்த ஒரு மணி நேரத்தில் ரசிகர்கள் அங்கு குவிந்தனர். அவர்கள் டோனி உள்ளிட்ட வீரர்களின் பயிற்சியை உற்சாகமாக கண்டுகளித்தனர்.


Next Story