அனல் பறந்த இந்திய அணியின் பந்துவீச்சு: 106 ரன்கள் மட்டுமே சேர்த்த தென் ஆப்பிரிக்க அணி..!!


அனல் பறந்த இந்திய அணியின் பந்துவீச்சு: 106 ரன்கள் மட்டுமே சேர்த்த தென் ஆப்பிரிக்க அணி..!!
x

ஒரு கட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 9 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தொடக்கத்தில் தடுமாறியது.

திருவனந்தபுரம்,

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதன்படி இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி கேரளா தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்பீல்டு சர்வதேச ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க வீரர்களாக டி காக்-கேப்டன் பவுமா களமிறங்கினர்.

தீபக் சஹார் வீசிய முதல் ஓவரின் கடைசி பந்தில் கேப்டன் பவுமா (டக் அவுட்) ஆட்டமிழந்தார். அதன் பிறகு 2-வது ஓவரை வீசிய அர்ஷ்தீப் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிர்பாராத அதிர்ச்சியை அளித்தார். அந்த ஓவரில் டி காக் (1 ரன்,) ரிலீ ரோஸோ (டக் அவுட்), மில்லர் (டக் அவுட்) ஆகியோரை வெளியேற்றி அர்ஷ்தீப் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். இதனால் ஒரு கட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 9 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தொடக்கத்தில் தடுமாறியது.

ஒருமுனையில் நிலைத்து நின்று விளையாடி வந்த ஐடன் மார்க்ரம். ஹர்ஷல் படேல் பந்துவீச்சில் 25 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடக்க வீரர்கள் ஏமாற்றம் அளித்தாலும் பின்வரிசையில் பார்னெல்- கேசவ் மகாராஜ் ஜோடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இருப்பினும் இந்திய அணியின் அசத்தல் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் பார்னெல் 24 ரன்களிலும் கேசவ் மகாராஜ் 41 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் தரப்பில் அர்ஷ்தீப் 3 விக்கெட்களையும், தீபக் சஹார் ஹர்ஷல் படேல் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். இதையடுத்து 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்திய அணி களமிறங்குகிறது.


Next Story