கோல்டன் ஹார்ட்...அவரை மாதிரி நான் யாரையும் பார்த்ததில்லை - ரோகித்தை புகழ்ந்த அஸ்வின்


கோல்டன் ஹார்ட்...அவரை மாதிரி நான் யாரையும் பார்த்ததில்லை - ரோகித்தை புகழ்ந்த அஸ்வின்
x

image courtesy: AFP

ராஜ்கோட் நகரில் நடந்த 3வது டெஸ்ட் போட்டியில் இரண்டாவது நாள் ஆட்டம் முடிந்ததும் அஸ்வின் குடும்பத்தில் அவசர நிலை ஏற்பட்டதால் பாதியிலேயே வெளியேறினார்.

சென்னை,

இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் ராஜ்கோட் நகரில் நடந்த 3வது டெஸ்ட் போட்டியில் இரண்டாவது நாள் ஆட்டம் முடிந்ததும் அஸ்வின் தனி விமானம் மூலம் வெளியேறினார். அந்த போட்டியில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500-வது விக்கெட்டை எடுத்து சாதனை படைத்த ரவிச்சந்திரன் அஸ்வின் குடும்பத்தில் அவசர நிலை ஏற்பட்டதால் பாதியிலேயே வெளியேறினார்.

இரண்டாவது நாள் ஆட்டம் முடிந்ததும் வெளியேறிய அஸ்வின் அந்த போட்டியில் மேற்கொண்டு ஆட மாட்டார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த போட்டியின் 4வது நாளில் அஸ்வின் விளையாடி இந்திய அணியின் வெற்றிக்கு பங்காற்றினார்.

இந்நிலையில் அப்போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது அம்மாவுக்கு உடல்நிலை மோசமானதாக மனைவி சொன்னதும் கண்ணீர் விட்டு அழுததாகவும், அப்போது ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் உடனடியாக வீட்டுக்கு சென்று அம்மாவை பார்ப்பதற்காக தனி விமானத்தை வர வைத்ததாகவும் அஸ்வின் கூறியுள்ளார்

இது பற்றி அஸ்வின் தனது யூடியூப் பக்கத்தில் கூறியதாவது, அம்மா சுயநினைவுடன் இருக்கிறாரா என்று கேட்டேன். பார்க்கும் நிலையில் இல்லை என்று டாக்டர் என்னிடம் கூறினார். அதனால் நான் அழ ஆரம்பித்தேன். எனவே நேரில் சென்று பார்க்க ஒரு விமானத்தை தேடினேன். ஆனால் ராஜ்கோட் விமான நிலையத்தில் 6 மணிக்கு மேல் எந்த விமானமும் இல்லை.

அதனால் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தேன். அப்போது என்னுடைய அறைக்கு வந்த ரோகித் மற்றும் ராகுல் ஆகியோர் எதைப் பற்றியும் கவலைப்படாமல் உடனடியாக குடும்பத்தை சென்று பார் என்று சொன்னார்கள். அணியின் உடற்பயிற்சியாளரான கமலேஷ் எனக்கு மிகவும் நல்ல நண்பர். அவரை என்னுடன் சென்னைக்கு செல்லுமாறு ரோகித் சொன்னார்.

இருப்பினும் அவரை நான் திரும்பி இருக்கச் சொன்னேன். ஆனால் கீழே கமலேஷும், செக்யூரிட்டியும் எனக்காக காத்திருந்தனர். விமான நிலையம் நோக்கி செல்லும் வழியில் கமலேசை அழைத்த ரோகித் சர்மா கடினமான நேரத்தில் என்னுடன் இருக்கும் படி கேட்டுக் கொண்டார். அப்போது இரவு 9.30 மணி. நான் வியந்து போனேன்.

அதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. விமானத்தில் நான் பேசுவதற்கு அந்த இருவர் மட்டுமே இருந்தனர். வீட்டுக்கு திரும்பும் பயணம் முழுவதும் ரோகித் கமலேஷ்க்கு போன் செய்து என்னைக் கவனித்துக் கொண்டிருந்தார். அது போன்ற நேரத்தில் நானும் கேப்டனாக இருந்தால் என்னுடைய வீரரை வீட்டுக்கு செல்லுங்கள் என்று சொல்லியிருப்பேன்.

ஆனால் துணைக்கு ஆள் அனுப்பி அனைத்தும் சரியாக இருக்கிறதா என்று பார்க்குமாறு சொல்லியிருப்பேனா? என்பது தெரியாது. அன்றைய நாளில்தான் ரோகித் சர்மாவில் நான் சிறந்த தலைவரை பார்த்தேன். நான் பல கேப்டன்கள் தலைமையில் விளையாடியுள்ளேன். ஆனால் ரோகித் சர்மா நல்ல மனதை கொண்டுள்ளதாலேயே இன்று இந்த உச்சத்தை எட்டியுள்ளார்.

ரோகித் ஒரு சிறந்த நபர், ஒரு சிறந்த தலைவர், கோல்டன் ஹார்ட். டோனிக்கு நிகராக அவர் 5 ஐ.பி.எல் கோப்பைகளை வென்றுள்ளார். கடவுள் அதை எளிதாக கொடுக்க மாட்டார். அவருக்கு அந்த அனைத்தையும் விட கடவுள் இன்னும் பெரிதாக கொடுப்பார்.

ஏனெனில் சுயநலமாக சிந்திக்க கூடிய இந்த சமூகத்தில் அவரைப்போல் மற்றவர்களின் நலனை நினைப்பவர்கள் அரிதானவர்கள். கேப்டனாக வீரருக்கு எந்த கேள்வியுமின்றி ஆதரவு கொடுக்கும் அவர் மீது ஏற்கனவே நான் மரியாதை வைத்துள்ளேன். இவ்வாறு அஸ்வின் கூறினார்.


Next Story