ஹர்மன்ப்ரீத் கவுர் அரைசதம்; வங்கதேசத்தை வீழ்த்தி இந்திய பெண்கள் அணி அபார வெற்றி...!


ஹர்மன்ப்ரீத் கவுர் அரைசதம்; வங்கதேசத்தை வீழ்த்தி இந்திய பெண்கள் அணி அபார வெற்றி...!
x

Image Courtesy: @BCCIWomen

இந்திய பெண்கள் அணி தரப்பில் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 54 ரன்கள் எடுத்தார்.

டாக்கா,

வங்காளதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி அங்கு அந்நாட்டு பெண்கள் அணிக்கு எதிராக 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆட உள்ளது. இந்த தொடரில் முதலாவதாக டி20 தொடர் நடைபெற்று வருகிறது.

இதில் இன்று நடைபெற்று வரும் முதலாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய பெண்கள் அணி பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து வங்கதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷதி ராணி, ஷமிமா சுல்தானா ஆகியோர் களம் இறங்கினர்.

இதில் ஷதி ராணி 22 ரன்னும், ஷமிமா சுல்தானா 17 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து களம் இறங்கிய சோபனா மோஸ்தரி 23 ரன்னிலும், நிகர் சுல்தானா 2 ரன்னிலும் அவுட் ஆகினர்.

இறுதியில் வங்கதேச பெண்கள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 114 ரன்களே எடுத்தது. இந்திய அணி தரப்பில் பூஜா வஸ்த்ரகர், மின்னு மணி, ஷபாலி வர்மா ஆகியோர் தலா 1 விக்கெட்டுகள் எடுத்தனர்.

இதையடுத்து 115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய பெண்கள் அணி ஆடியது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரகளாக களம் இறங்கிய ஷபாலி வர்மா 0 ரன்னில் ஆட்டம் இழந்தார். இதையடுத்து களம் இறங்கிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் 11 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.

இதையடுத்து கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். இதில் மந்தனா 38 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். இதையடுத்து ஹர்மன்ப்ரீத் கவுருடன் யாஷ்டிகா பாதியா இணைந்தார்.

இறுதியில் இந்திய பெண்கள் அணி 16.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 118 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 54 ரன்கள் எடுத்தார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என இந்திய அணி முன்னிலையில் உள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 2வது டி20 போட்டி வரும் 11ம் தேதி நடைபெறுகிறது.


Next Story