உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா வெற்றி பெற்றால்... 5 நாட்கள் இலவச சவாரி: ஆட்டோ ஓட்டுநர்
![உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா வெற்றி பெற்றால்... 5 நாட்கள் இலவச சவாரி: ஆட்டோ ஓட்டுநர் உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா வெற்றி பெற்றால்... 5 நாட்கள் இலவச சவாரி: ஆட்டோ ஓட்டுநர்](https://media.dailythanthi.com/h-upload/2023/11/19/1592031-cadar.webp)
புல்வாமா தாக்குதலுக்கு, இந்திய ராணுவம் பழி தீர்க்குமென்றால், அதற்காக ஒரு மாதம் இலவச சவாரி வழங்குவேன் என அனில் அப்போது கூறினார்.
சண்டிகார்,
ஐ.சி.சி. உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டி இன்று நடைபெறுகிறது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடைபெறும் இந்த இறுதி போட்டியில் கோப்பையை கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணி உள்ளது.
இந்நிலையில், இந்தியா வெற்றி பெற்றால், பயணிகளுக்கு 5 நாட்கள் இலவச பயண வசதியை வழங்குவேன் என சண்டிகாரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அனில் குமார் என்பவர் கூறியுள்ளார்.
அவர் கூறும்போது, நம்முடைய அணி நன்றாக விளையாடி வருகிறது. இந்தியா வெற்றி பெற்றால், 5 நாட்களுக்கு ஆட்டோவில் இலவச சவாரி வழங்குவேன். இந்தியா இன்று வெற்றி பெறும் என நம்பிக்கையுடன் கூறுகிறார்.
கடந்த 2019-ம் ஆண்டு நடந்த ஐ.சி.சி. உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது, விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்றால், ஒவ்வொருவருக்கும் 10 நாட்கள் வரை எனது ஆட்டோவில் இலவச பயணம் செய்து கொள்வதற்கான வசதியை வழங்குவேன் என கூறினார். ஆனால், அந்த உலக கோப்பை தொடரில் இந்தியா வெற்றி பெற முடியாமல் போனது. இங்கிலாந்து அணி சாம்பியனானது.
காஷ்மீரில் புல்வாமா தாக்குதலின்போது, இந்திய ராணுவம் பழி தீர்க்குமென்றால், அதற்காக ஒரு மாதம் இலவச சவாரி வழங்குவேன் என அனில் அப்போது கூறினார். அவர் கூறியதுபோலவே, சண்டிகாரில் இலவச சவாரியை ஒவ்வொருவருக்கும் வழங்கினார்.