ஆசிய கோப்பை: 8-வது முறையாக இந்தியா சாம்பியன்..! வீரர்கள் கடினமாக உழைத்து வருகின்றனர்.... ரோகித் சர்மா நெகிழ்ச்சி


ஆசிய கோப்பை: 8-வது முறையாக இந்தியா சாம்பியன்..!  வீரர்கள்  கடினமாக உழைத்து வருகின்றனர்.... ரோகித் சர்மா நெகிழ்ச்சி
x

10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது

கொழும்பு,

16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இந்த நிலையில் மழை காரணமாக ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் மழை நின்றதும் ஆட்டம் தொடங்கியது.

போட்டியின் முதல் ஓவரிலேயே பும்ரா, குசல் பெராரே விக்கெட்டை வீழ்த்தினார். பின்னர் ஆட்டத்தின் 4-வது ஓவரை வீசிய முகமது சிராஜ், இலங்கை அணி வீரர்கள் நிசாங்கா, சமரவிக்ரம, அசலன்கா மற்றும் தனஞ்சயா டி சில்வா ஆகியோரின் விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். மேலும் தனது அடுத்த ஓவரில் இலங்கை அணி கேப்டன் தசுன் ஷனகா விக்கெட்டையும் வீழ்த்தினார்.

இதன் மூலம் முகமது சிராஜ் ஒருநாள் போட்டிகளில் குறைந்த பந்துகளில் (16 பந்துகள்) 5 விக்கெட்டுகள் வீழ்த்திய பந்து வீச்சாளர்கள் வரிசையில் சமிந்தா வாஸ் உடன் முதலிடத்தை பகிர்ந்துள்ளார். தொடக்கம் முதலே தடுமாறிய இலங்கை அணி வெறும் 15.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 50 ரன்களில் சுருண்டது. இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்து வீசிய முகமது சிராஜ் 6 விக்கெட்டுகளும், ஹர்திக் பாண்ட்யா 3 விக்கெட்டுகளும், பும்ரா 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.

இதையடுத்து 51 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. இந்த நிலையில் 6.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி இந்திய அணி 51 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் நடப்பு சாம்பியனான இலங்கை அணியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. இஷான் கிஷான் 23 ரன்களும் சுப்மன் கில் 27 ரன்களும் எடுத்தனர்.

இதன் மூலம்8-வது முறையாக இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது

இந்த நிலையில் வெற்றிக்கு பிறகு இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது,

இந்த போட்டியில் அணியின் செயல்பாடு மிக சிறப்பாக இருந்தது . இறுதிப் போட்டியில் இது போன்று விளையாடுவது ஒவ்வொருவரின் மனநிலையில் காட்டுகிறது. பந்துவீச்சில் சிறப்பான தொடக்கம் பெற்ற நாங்கள் பேட்டிங்கில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றிருக்கிறோம்.

எங்கள் வேகப்பந்துவீச்சளர்கள் மிகவும் கடினமாக உழைத்து வருகின்றனர். என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து மனதளவில் அவர்கள் தெளிவாக இருந்தார்கள்..அதைப் பார்க்க நன்றாக இருந்தது. சிராஜுக்கு தான் பாராட்டுகள் போய் சேர வேண்டும்.

இந்த போட்டியில் எங்களால் செய்ய முடிந்த அனைத்தையும் செய்திருக்கிறோம். அடுத்து ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடர் மற்றும் உலகக்கோப்பையை எதிர்நோக்குகிறோம். என தெரிவித்தார்.


Next Story