உலகக்கோப்பை தோல்விக்கு இந்திய ரசிகர்கள் மற்றும் ஊடகங்கள்தான் காரணம் - வாசிம் அக்ரம் விமர்சனம்


உலகக்கோப்பை தோல்விக்கு  இந்திய ரசிகர்கள் மற்றும் ஊடகங்கள்தான் காரணம் - வாசிம் அக்ரம் விமர்சனம்
x

இந்திய அணி அடுத்த 6 மாதத்தில் நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பையை நோக்கி நகர வேண்டும்.

லாகூர்,

13-வது 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 5-ந்தேதி இந்தியாவில் தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் லீக் மற்றும் அரைஇறுதி முடிவில் இந்தியா- ஆஸ்திரேலியா இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இறுதிப்போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றது.

வலுவான அணிகளை தோற்கடித்த இந்தியா வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு உலகக்கோப்பையில் தொடர்ச்சியாக 10 வெற்றிகளை பதிவு செய்து சாதனை படைத்தது. மேலும் தற்போதைய அணியில் அனைத்து வீரர்களுமே உச்சகட்ட பார்மில் இருந்ததால் கண்டிப்பாக இம்முறை கோப்பையை வெல்வோம் என்று ரசிகர்கள் உறுதியாக நம்பினர். ஆனாலும் வழக்கம்போல முக்கியமான ஆட்டத்தில் சொதப்பிய இந்தியா தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் 10 தொடர்ச்சியான வெற்றிகளை பெற்றதால் இறுதிப்போட்டிக்கு முன்பே இந்தியாவை சாம்பியன் அணியாக கொண்டாடிய ரசிகர்கள் மற்றும் ஊடகங்கள்தான் இந்த தோல்விக்கு காரணம் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் விமர்சித்துள்ளார். மேலும் இறுதிப்போட்டியில் மிடில் ஓவர்களில் சுமாராக விளையாடிய இந்தியா தங்களுடைய தவறை திருத்திக்கொண்டு 2024 டி20 உலகக்கோப்பை பயணத்தை துவங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு;- "இந்த தோல்வியிலிருந்து இந்திய நாடு வெளிவருவது கடினம் என்பதை நான் புரிந்து கொள்வேன். ஏனெனில் உங்களுடைய அணி சிறப்பாக விளையாடி 10 தொடர்ச்சியான வெற்றிகளை பெற்றது. ஆனால் தொலைக்காட்சி, சமூக வலைதளங்கள் மற்றும் ரசிகர்கள் ஆகியோர் இறுதிப்போட்டி நடைபெறுவதற்கு முன்பாகவே இந்தியாவை உலக சாம்பியனாக மாற்றினார்கள். இந்த தவறை நீங்கள் ஒப்புக் கொள்ளுங்கள். இப்படி சொல்வதற்கு மன்னிக்கவும்.

அதே சமயம் உங்களுடைய அணி சிறப்பாக விளையாடியதால் நம்பிக்கையும் அதிகரித்தது. எனவே மொத்த தவறும் உங்களுடையது கிடையாது. ஒரு மோசமான போட்டியால் அனைத்தும் நழுவி சென்றது. அதற்கான பாராட்டுகளை ஆஸ்திரேலியாவுக்கு கொடுக்க வேண்டும். ஆனால் 11 - 40 வரையிலான மிடில் ஓவர்களில் இந்தியா சில பவுண்டரிகள் மட்டுமே அடித்தனர். சூர்யகுமாருக்கு எதிராக ஆஸ்திரேலிய பவுலர்கள் ஒரு வேகமான பந்தை கூட வீசாமல் சரியான பீல்டர்களை நிறுத்தி திட்டத்துடன் செயல்பட்டார்கள்.

ஆனாலும் தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய இந்தியா இறுதிப்போட்டியில் தோற்றது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. 1999ஆம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் நாங்கள் தோற்றதை பற்றி இப்போதும் என்னிடம் கேட்கிறார்கள். குறிப்பாக டாஸ் வென்று ஏன் பேட்டிங் செய்யவில்லை என்று என்னிடம் கேட்கிறார்கள். எனவே சமூக வலைதளங்களில் நிலவும் கருத்துக்களை கணக்கில் எடுத்துக் கொள்ளாதீர்கள். இந்திய அணி அடுத்த 6 மாதத்தில் நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பையை நோக்கி நகர வேண்டும்" என்று கூறினார்.


Next Story