ஐ.பி.எல். 2024: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் விலகல் - காரணம் என்ன..?


ஐ.பி.எல். 2024: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் விலகல் - காரணம் என்ன..?
x

கோப்புப்படம்

தினத்தந்தி 13 March 2024 3:13 AM GMT (Updated: 13 March 2024 5:02 AM GMT)

ஐ.பி.எல் தொடரின் 17-வது சீசன் வரும் 22-ம் தேதி தொடங்கவுள்ளது.

ஜெய்ப்பூர்,

ஐ.பி.எல் தொடரின் 17-வது சீசன் வரும் 22-ம் தேதி தொடங்கவுள்ளது. இதையடுத்து இத்தொடருக்கான முதல் இரண்டு வாரங்களுக்கான போட்டி அட்டவணையை பி.சி.சி.ஐ சமீபத்தில் அறிவித்தது. இதையடுத்து இத்தொடருக்காக அனைத்து ஐ.பி.எல் அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

இந்நிலையில் காயம் காரணமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா வரும் ஐ.பி.எல் தொடரிலிருந்து விலகியுள்ளார். இதுகுறித்து பி.சி.சி.ஐ வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கடந்த பிப்ரவரி 23 அன்று, வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா தனது இடது தொடையில் அறுவை சிகிச்சை செய்தார். தற்போது பி.சி.சி.ஐ மருத்துவக் குழுவின் மேற்பார்வையில் உள்ள அவர், விரைவில் தேசிய கிரிக்கெட் அகாடமியில் மறுவாழ்வு செயல்முறையைத் தொடங்குவார். இதன் காரணமாக வரவிருக்கும் ஐ.பி.எல் தொடரில் அவர் பங்கேற்க முடியாது என்று தெரிவித்துள்ளது.

கடந்த 2022-ம் ஆண்டு வீரர்கள் ஏலத்தில் பிரசித் கிருஷ்ணாவை ரூ.10 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலம் எடுத்திருந்த நிலையில், கடந்த சீசனில் அவர் காயம் காரணமாக விளையாடவில்லை. இதனையடுத்து அவருக்கு மாற்று வீரராக சந்தீப் சர்மா ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வந்தார்.

இந்நிலையில் பிரசித் கிருஷ்ணா நடப்பாண்டு ஐ.பி.எல் தொடரில் விளையாடுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் காயம் காரணமாக அவர் ஐ.பி.எல் தொடரிலிருந்து விலகியுள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.



Next Story