ஐ.பி.எல். கிரிக்கெட்: பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?


ஐ.பி.எல். கிரிக்கெட்: பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?
x

image courtesy: twitter/@IPL

தினத்தந்தி 22 March 2024 3:09 AM GMT (Updated: 22 March 2024 3:20 AM GMT)

17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி மே 26-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது.

சென்னை,

இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் 2008-ம் ஆண்டில் இருந்து நடத்தப்படுகிறது. இந்திய வீரர்களுடன், வெளிநாட்டு வீரர்களும் இணைந்து குஷிப்படுத்துவதால் இந்த போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் அமோக வரவேற்பு உண்டு.

17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி மே 26-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேஞ்சர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ் ஆகிய 10 அணிகள் பங்கேற்கின்றன.

இதில் ஒரு அணி, குறிப்பிட்ட 5 அணிகளுடன் தலா 2 முறையும், எஞ்சிய 4 அணிகளுடன் தலா ஒரு முறையும் மோத வேண்டும். இப்படி ஒரு அணி மொத்தம் 14 லீக் ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்குள் நுழையும்.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்றிரவு 8 மணிக்கு அரங்கேறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும் மல்லுக்கட்டுகின்றன.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இந்த ஆண்டுக்கான பரிசுத் தொகை விவரம் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை. கடந்த ஆண்டு சாம்பியன் கோப்பையை வென்ற அணி ரூ.20 கோடியும், 2-வது இடம் பிடித்த அணி ரூ.13 கோடியும் பரிசாக பெற்றது. அதே தொகைத்தான் இந்த ஆண்டும் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும்,தொடரில் அதிக ரன் குவிக்கும் வீரருக்கு ஆரஞ்சு நிற தொப்பியுடன் ரூ.15 லட்சமும், அதிக விக்கெட்டுகள் வீழ்த்தும் வீரருக்கு ஊதா நிற தொப்பியுடன் ரூ.15 லட்சமும் பரிசாக வழங்கப்படும்.


Next Story