ஐ.பி.எல். தொடரின் 2-வது பாதி போட்டிகள் யு.ஏ.இ-க்கு மாற்றமா ? - ஜெய் ஷா பதில்


ஐ.பி.எல். தொடரின் 2-வது பாதி போட்டிகள் யு.ஏ.இ-க்கு மாற்றமா ? - ஜெய் ஷா பதில்
x

மக்களவை தேர்தல் காரணமாக ஐ.பி.எல். தொடரின் 2-வது பாதி போட்டிகள் யு.ஏ.இ-க்கு மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

மும்பை,

2024ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் வரும் 22ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன.

இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோத உள்ளன. இந்த ஆட்டம் சென்னையில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் இந்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற இருப்பதினால் ஐ.பி.எல் தொடர் முழுமையாக இந்தியாவில் நடைபெறுமா என்பதில் சந்தேகம் நிலவியது. அதற்கு ஏற்றார்போல் வரும் 22ம் தேதி முதல் ஏப்ரல் 7ம் வரையிலான முதல் 21 போட்டிகளுக்கான அட்டவணையை மட்டுமே பி.சி.சி.ஐ வெளியிட்டிருந்தது. இதன் காரணமாக ஐ.பி.எல். தொடரின் 2-வது போட்டிகள் யு.ஏ.இ.-க்கு மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இதனிடையே மக்களவை தேர்தலுக்கான தேதிகள் இன்று வெளியிடப்பட்டன. அதன்படி மக்களவை தேர்தல் அடுத்த மாதம் 19ம் தேதி முதல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய் ஷாவிடம் ஐ.பி.எல். தொடர் வேறு இடத்திற்கு மாற்றப்படுமா? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஜெய் ஷா, 'இல்லை. அது (ஐ.பி.எல்) மாற்றப்படாது' என்று பதிலளித்துள்ளார். இதன் மூலம் ஐ.பி.எல். தொடரின் அனைத்து போட்டிகளும் இந்தியாவிலேயே நடைபெற உள்ளது தெளிவாகியுள்ளது.


Next Story