ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்; ராஜ் லிம்பானி அபார பந்துவீச்சு...52 ரன்களில் சுருண்ட நேபாளம்...!


ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்; ராஜ் லிம்பானி அபார பந்துவீச்சு...52 ரன்களில் சுருண்ட நேபாளம்...!
x

Image Courtesy: @ACCMedia1

இந்தியா தரப்பில் ராஜ் லிம்பானி 7 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

துபாய்,

10-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் (19 வயதுக்கு உட்பட்டோர்) துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், ஆப்கானிஸ்தான், 'பி' பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பான் ஆகிய அணிகள் இடம் பிடித்துள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

இதில் இந்திய அணி 2 ஆட்டங்களில் விளையாடி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக வெற்றியும், பாகிஸ்தானுக்கு எதிராக தோல்வியும் கண்டுள்ளது. இந்நிலையில் இந்திய அணி தனது 3-வது ஆட்டத்தில் இன்று நேபாள அணியுடன் ஆடி வருகிறது. இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற இந்தியா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய நேபாள அணியினர் இந்தியாவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர். இந்தியா தரப்பில் ராஜ் லிம்பானி அபாரமாக பந்துவீசி நேபாளத்தின் விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்தியாவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாத நேபாள அணி 22.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 52 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அணி தரப்பில் ஒரு பேட்ஸ்மேன் கூட இரட்டை இலக்கத்தை தொடவில்லை. இந்தியா தரப்பில் ராஜ் லிம்பானி 7 விக்கெட்டுகளும், ஆராத்யா சுக்லா 2 விக்கெட்டுகளும், அர்ஷின் குல்கர்னி 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து 53 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி ஆட உள்ளது.


Next Story