அரையிறுதியில் தோல்வியை சந்தித்த பின்பும் இந்திய அணியை மனதார பாராட்டிய கேன் வில்லியம்சன்..!


அரையிறுதியில் தோல்வியை சந்தித்த பின்பும் இந்திய அணியை மனதார பாராட்டிய கேன் வில்லியம்சன்..!
x

image courtesy; ICC

உலகக்கோப்பை தொடரின் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

மும்பை,

நியூசிலாந்து அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இந்த ஆட்டத்தை பொறுத்தவரை, பேட்டிங்கில் ஸ்ரேயஸ் ஐயர், கோலி, கில் ஆகியோர் சிறந்த பங்களிப்பை அளித்த நிலையில், பந்துவீச்சில் முகமது ஷமி அசத்தினார்.

இந்நிலையில் ஆட்டம் முடிந்து தாங்கள் அடைந்த தோல்வி குறித்து பேசிய நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் கூறுகையில்;-

' முதலில் நான் இந்திய அணிக்கு வாழ்த்துக்களை சொல்ல விரும்புகிறேன். ஏனெனில் இந்த தொடர் முழுவதுமே இந்திய அணி மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. உண்மையிலேயே இந்த ஆட்டத்திலும் அவர்கள் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தனர். சர்வதேச கிரிக்கெட்டில் அவர்கள் ஒரு தரம் வாய்ந்த அணி என்பதை இந்த ஆட்டத்தின் மூலம் மீண்டும் நிரூபித்துள்ளனர். உண்மையில் இந்திய அணியின் வீரர்கள் விளையாடிய விதமே அவர்களது வெற்றிக்கு காரணம்.

நாங்கள் இன்றைய ஆட்டத்தில் போராடிய விதத்தை நினைத்தால் பெருமையாக இருக்கிறது. நாக்-அவுட் போட்டியில் இந்த தோல்வி எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது. ஆனாலும் இந்தியா போன்ற ஒரு தரமான அணியிடம் தோல்வி அடைந்ததில் நினைத்து நாங்கள் மகிழ்கிறோம். இந்திய அணியில் உள்ள பேட்ஸ்மேன்கள் அனைவருமே உலகத்தரம் வாய்ந்தவர்கள். அவர்கள் இந்த ஆட்டத்தில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இந்த ஆட்டத்தில் அனைத்து விதத்திலும் இந்திய அணி எங்களை விட சிறப்பாக செயல்பட்டது.

இந்த மைதானத்தில் இருந்த ரசிகர்களும் சிறப்பாக ஆதரவளித்தனர். இவ்வளவு ரசிகர்கள் மத்தியில் விளையாடியதையும் இந்தியா இந்த தொடரையும் நடத்தியதும் நினைத்து மகிழ்ச்சி அடைகிறோம். ஒரு அணியாக நாங்கள் இந்த தொடர் முழுவதும் மிகச்சிறப்பாகவே விளையாடி வந்தோம். இந்த தொடரில் ரச்சின் ரவீந்திரா மற்றும் மிட்செல் ஆகியோர் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சிறந்த வீரர்களாக திகழ்ந்தனர். பவுலர்களும் மிகச்சிறப்பாகவே செயல்பட்டனர். ஒரு அணியாக நாங்கள் அடுத்த கட்டத்திற்கு நகர காத்திருக்கிறோம்' என்று கூறியுள்ளார்.


Next Story