தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் - ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 154/7


தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் - ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 154/7
x

image courtesy: England Cricket twitter

முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 36.2 ஓவர்களில் 118 ரன்களில் சுருண்டது.

லண்டன்,

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியை தென் ஆப்பிரிக்க அணியும், இரண்டாவது டெஸ்ட் போட்டியை இங்கிலாந்து அணியும் வென்றுள்ளது.

இங்கிலாந்து-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் கடந்த 8-ந் தேதி தொடங்க இருந்தது. மழை காரணமாக முதல் நாள் ஆட்டமும், இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மறைவால் 2-வது நாள் ஆட்டமும் முழுமையாக கைவிடப்பட்டது.

இந்த நிலையில் 3-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்க அணி, இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்களின் அபாரமான பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 36.2 ஓவர்களில் 118 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக மார்கோ ஜேன்சன் 30 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டம் இழந்தனர். இங்கிலாந்து தரப்பில் ஆலி ராபின்சன் 5 விக்கெட்டும், ஸ்டூவர்ட் பிராட் 4 விக்கெட்டும், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸ் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வெளிச்சமின்மை காரணமாக 3-வது நாள் ஆட்டம் நிறுத்தப்பட்டது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஆலி போப் 67 ரன்கள் எடுத்தார்.

பென் போக்ஸ் 11 ரன்களுடனும் ஆலி ராபின்சன் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் ஜேன்சன் 4 விக்கெட்டுகளையும் ரபாடா 2 விக்கெட்டுகளையும் அன்ரிச் நார்ட்ஜே ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 36 ரன்கள் முன்னிலையில் உள்ளது.


Next Story