தோனிக்கு பின் யாரும்... கொல்கத்தா அணியில் இருந்ததற்காக வருந்துகிறேன் - குல்தீப் யாதவ்


தோனிக்கு பின் யாரும்... கொல்கத்தா அணியில் இருந்ததற்காக வருந்துகிறேன் - குல்தீப் யாதவ்
x

image courtesy: PTI

எம்.எஸ். தோனிக்கு பின் யாரும் தமக்கு ஆலோசனை கொடுத்து சரியாக வழி நடத்தவில்லை என்று குல்தீப் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் முதன்மை சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான குல்தீப் யாதவ், நடப்பு ஐ.பி.எல். சீசனில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். உள்ளூர் தொடரில் சிறப்பாக விளையாடிய அவர் கடந்த 2016-ம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா அணிக்காக தேர்வு செய்யப்பட்டார். அந்த வாய்ப்பில் நன்றாக விளையாடிய காரணத்தால் அவர் இந்திய அணிக்காகவும் விளையாட தேர்வானார்.

ஆனால் 2020-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் சுமாராக செயல்பட்டதால் அவரை கொல்கத்தா நிர்வாகம் கழற்றி விட்டது. மேலும் அந்த சமயத்தில் காயத்தை சந்தித்ததால் 2021 டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியிலும் குல்தீப் கழற்றி விடப்பட்டார். இருப்பினும் காயத்திலிருந்து குணமடைந்த பின் மீண்டும் ஐ.பி.எல். தொடரில் டெல்லி அணிக்காக அபாரமாக விளையாடிய குல்தீப் யாதவ் தற்போது மீண்டும் இந்திய அணியில் இழந்த தம்முடைய இடத்தை மீட்டெடுத்துள்ளார்.

இந்நிலையில் தோனி ஓய்வு பெற்ற பின் யாரும் தமக்கு ஆலோசனைக் கொடுத்து சரியாக வழிநடத்தவில்லை என்று குல்தீப் கூறியுள்ளார். அதுவே அந்த சமயத்தில் தாம் தடுமாறுவதற்கு காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் அப்போது தமக்கு ஆதரவு வழங்காமல் மோசமாக நடத்தி கழற்றி விட்ட கொல்கத்தா அணிக்காக விளையாடியதை நினைத்து தற்போது வருந்துவதாக குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு:- "கொல்கத்தா அணியில் எனக்கு வழிகாட்டுதல் தேவைப்பட்டது. ஆனால் தற்போது வழிகாட்டுதல் தேவையில்லை. 2019-ல் மஹி பாய் ஓய்வு பெற்றார். அப்போது எனக்கு வழிகாட்டுதல் தேவைப்பட்டது. ஆனால் தற்போது நான் கொண்டுள்ள ஐடியாக்கள் என்னுடைய அனுபவத்தால் கிடைத்தன.

ஆனால் கொல்கத்தா அணியில் (2016 - 2020 வரை) இருந்ததற்காக வருந்துகிறேன். இப்போது நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்பதை உணர்ந்து அதை முன்பே செய்திருக்க விரும்புகிறேன். என்னுடைய திறமையில் நான் வேலை செய்திருந்தால் அப்போதே என்னால் இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்க முடியும் என்பதை நினைத்தால் தற்போது வலிக்கிறது. ஆனால் அது அப்போது நடக்கவில்லை.

அனுபவம் என்பது நீங்கள் நிறைய விளையாடும்போது தான் கிடைக்கும். அந்தத் தோல்வி பாடத்தை வைத்துதான் நீங்கள் அதிக தன்னம்பிக்கையுடன் இன்னும் உங்களுடைய திறமையில் முன்னேற முடியும். அதே சமயம் எதிரணியும் திறமையானவர்கள் என்பதை நீங்கள் மதிக்க வேண்டும்" என்று கூறினார்.


Next Story